திருமயம் புதுக்கோட்டைக்கு 18 கிமீ தூரத்தில் உள்ள இந்த ஊரின் ஆரம்ப காலப் பெயர் திருமெய்யம். இங்குள்ள குன்றின் அடிவாரத்தில் சிவனுக்கு ஒன்றும், பெருமாளுக்கு ஒன்றுமாக இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன. கோயிலுக்குப் பின்னால் குன்றின் கீழே ஒரு எண்கோண வடிவில் ஒரு குளம் உள்ளது. அட்டகாசமான அழகு.குன்றின் மேற்புறத்தில் அந்தரத்தில் பாறையைக் குடைந்து அதில் ஒரு லிங்கத்தை வைத்து அதையும் வழிபட்டு வந்துள்ளனர். சமீபத்தில் அந்த இடத்திற்கு இரும்பில் ஒரு ஏணிப்படி வைத்து மக்கள் ஏறிப் போய் வழிபட வசதி செய்து வைத்துள்ளனர் . ஆனால் ஏணிப்படி ரொம்பவும் கோக்கு மாக்கான டிசைனில் உள்ளது. ரொம்ப ஜாக்கிரதையாக ஏற வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் கால் கைகளை உடைத்துக் கொள்வது உறுதி.இங்கு ஓரிரு கிரந்த கல்வெட்டுக்கள் உள்ளன. அதனை வைத்து இந்த மூன்று கோயில்களின் காலத்தை கி.பி 8 -9 ம் நூற்றாண்டு என்று வரையறுத்துள்ளது நமது அரசாங்கம். இந்த ஊர் ஆரம்பத்தில் முத்தரையர் வசத்திலும் , பின்னர் பாண்டியர் வசத்திலும் இருந்தது தெரிய வருகிறது.கி.பி.1687 -இல் ராமநாதபுரம் அரசர் கிழவன் சேதுபதி என்ற விஜய ரகுநாத சேதுபதி இங்கு மிகப் பிரமாண்டமான கோட்டையை கட்டி அதனைச் சுற்றிலும் பாதுகாப்பிற்காக ஒரு பெரிய அகழிகையைக் கட்டி பாதுகாப்பிற்காக அதில் முதலைகளை வளர்த்திருக்கிறார்.பின்னால் வந்த அவர் மகன், ஒரு போரில் தனக்கு உதவிய புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னருக்கு இந்த கோட்டையை பரிசளித்திருக்கிறார். அதற்குப் பிறகு இந்தக் கோட்டை தொண்டைமான் அரசர்களிடமே இருந்துள்ளது.இங்கு கட்டபொம்மனும், அவன் தம்பி ஊமைத்துறையும் வந்து தங்கியிருக்கின்றனர்.இன்று அந்த கோட்டையின் பாதி மட்டுமே உள்ளது. மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் , ஓரளவு நன்றாகவே உள்ளது.இதில் ரொம்பப் பேருக்குத் தெரியாத ஒரு விஷயம், இங்குள்ள செங்காவியில் வரையப்பட்டிருக்கும் பாறை ஓவியங்கள். 5000 வருடங்களுக்கும் முந்தையாதாக இருக்க வேண்டும். மொத்தத்தில் திருமயம் கற்காலத்தில் தொடங்கி பிரிட்டாஷார் காலம் வரை ஒரு நீண்ட நெடிய வரலாற்றையும், ஆன்மீகத்தையும் தன்னகத்தே சுமந்து கொண்டு ஜம்மென்று நின்று கொண்டிருக்கிறது.இங்கிருந்து ஆவுடையார் கோயில், சித்தன்ன வாசல், குடுமியான் மலை, கொடும்பாளூர் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் ரொம்பப் பக்கம். முடிந்தால் இரண்டு நாள் பிளான் போட்டு வாங்க மக்கா. வெ.பாலமுரளிபி.கு: இங்கு எடுத்த படங்களை அடுத்த சில சில நாட்களுக்கு தொடர்ந்து பதிவிடுகிறேன்