முள்றியின் டைரி : 79 – மாரா ஒரு மந்திரலோகம் : 10

வழக்கம்போல் முதல் நாள் மாலை என்னை ஹோட்டலில் இறக்கி விட்டபின் , “ நாளை என்ன ப்ளான்?”  என்றான் ஜாக்.

“சிவிங்கிப் புலி (சீட்டா ) சேஸிங் பார்க்க முடியுமா?” என்றேன், சற்றே இழுத்து.

காரணம், சீட்டா சேஸிங் பார்க்க ரொம்பவே பொறுமை வேண்டும்.

முதலில் அது வேட்டையாடத் தயாராக இருக்க வேண்டும். அதற்குச் சரியான சூழல் அமைய வேண்டும். கடைசியில், அது ஒரு பிளான் பண்ணும் பாருங்கள், சான்ஸே இல்லை. பதுங்கி, உட்கார்ந்து , படுத்து எந்தக் காரணத்தைக் கொண்டும், அது தன் இரையை தன் கண் பார்வையை விட்டு விலகிச் சென்று விடாதபடி பார்த்துக் கொள்ளும்.

இதற்கு சில மணி நேரங்களாவது ஆகும். நாம் அதுவரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். நமக்கு அது ஒன்றும் பிரச்சினை இல்லை.

இன்னும் 50 நாட்களுக்குள், பணப் பிரச்சினை தீரா விட்டால் என்னை உயிரோடு கொளுத்தி விடுங்கள் என்று ஒரு நாட்டின் பிரதமரே சொல்லி விட்டதால், ஒரு அபார நம்பிக்கையில் நாள் கணக்கில் ஏ.டி.எம் வாசலில் நின்ற அனுபவம் கை கொடுத்தது ( ஆமா….அந்த 50 நாளுக்குப் பிறகு என்ன ஆனது ? மறந்து விட்டது. அதனால்தான் கேட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க).

ஜாக் என்ன நினைத்தானோ, சற்றும் யோசிக்காமல்,  “நாளை அதானி குடும்பத்தைக் குறி வைப்போம்” என்றான்…சாரி “அமானி” குடும்பத்தைக் குறி வைப்போம் என்றான்.  

அமானி குடும்பத்தில், தாய், பசங்க என்று மொத்தம் 4 வோட்டுகள்.

சாரி…4 உறுப்பினர்கள்.

என்னதான் பசங்க தோளுக்கு மேல் வளர்ந்து விட்டாலும், “அம்மா” தான் எல்லாம்.

நிறைய எதிர்பார்ப்புடன் தூங்கச் சென்றேன். 

வழக்கம்போல், காலை 4 மணிக்கே எழுந்து, குளித்து ரெடியாகி 5.30 மணிக்கு பார்க்குக்குள் சென்று விட்டோம். முன்பே பேசி வைத்திருப்பார்கள் போலிருக்கு. ஜாக்கின் நண்பர்கள் இரண்டு பேரும் அதே நேரத்தில் உள்ளே வந்திருந்தனர்.

எங்கள் அனைவரின் குறிக்கோளும் அமானி குடும்பத்தினரை பின்தொடர்வதுதான். ஆனால், எங்களில் யாருக்குமே அமானியின் தற்சமய இருப்பிடம் தெரியவில்லை. ரேடியோவில் தொடர்ந்து பேசிக் கொண்டே வந்தனர். 

சூரிய பகவான் இப்போவோ அப்பவோ வெளியில் வந்து விடுவார் போலிருந்தது.

தூரத்தில் ஒரு ஒட்டகச் சிவிங்கி  சிங்காரமாக நடந்து போய்க் கொண்டிருந்தது. ஜாக் & கோ அமானி குடும்பத்தைப் பரபரவென்று தேடிக் கொண்டிருக்க, “அந்த பரபரப்பிலும் ஒரு கிளுகிளுப்பு” என்பது போல, ஜாக்கை வண்டியை நிறுத்தச் சொல்லி, ஒட்டகச் சிவிங்கியின் சில்யூட் ஷாட்ஸ் சில எடுத்தேன்.

நான் எப்போதும் சில்யூட் எடுக்கும்போது ஒரு மரத்தையோ, வானத்திலுள்ள மேகத்தையோ கூட்டுச் சேர்ப்பேன். அன்றும் ஒரு மரம் துணைக்கு வர , ஒட்டகச் சிவிங்கியை மரத்தின் கூட்டணியோடு சில படங்கள் திருப்தியோடு எடுத்து விட்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.

அப்போது நான்தான் முதன்முதலில் தூரத்தில் அந்த இருவரும் நடந்து வருவதைப் பார்த்தேன். இரண்டு ஆண் சிங்கங்கள். இரண்டிற்கும் பிடரி செமையாக இருந்தது. அவற்றைப் பார்த்தவுடனேயே, அவை Black Rock Boys என்று சொல்லி விட்டான் ஜாக்.

எங்கள் வாகனம் சூரிய உதயத்திற்கும், அந்த இரண்டு பசங்களுக்கும் நடுவில் இருந்ததால், அவெய்ங்கெளை சூரியனாருடன் இணைத்து சில்யூட் எடுக்கும் முயற்சியில் Sand  விழுந்து விட்டது. 

எதற்கும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, நினைத்தது கிடைக்காவிட்டால், கிடைத்ததை எடுப்போம் என்ற உயரிய தத்துவத்தை மனதில் நினைத்துக் கொண்டு, பட படவென்று அந்த மஞ்சள் வெளிச்சத்தில் அந்தப் பசங்களை எடுத்துத் தள்ளி விட்டேன்.

எடுத்து விட்டு, ரொம்ப நேரம் அவர்களையே சுற்றிச் சுற்றி வந்தோம்….

அவர்கள் எனக்கு ரொம்ப ஆர்வத்துடன் போஸ் கொடுப்பது போல் தெரியவில்லை. இரண்டு பேரும் ஒரு மரத்தடியில் சென்று படுத்துக் கொண்டார்கள்.

இதற்குள் மணி காலை ஒன்பதாகி விட, அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டே, கொண்டு வந்திருந்த காலை உணவை முடித்தோம். 

மாராவில் வெட்ட வெளியில் காரை விட்டு வெளியில் வந்து காரில் சாய்ந்து கொண்டே காலை உணவை சாப்பிட்டு விட்டு ஒரு ப்ளாக் காப்பியைக் குடிப்பது ஒரு சுகானுபவம் ( ஒரு கட்டங்காப்பிக்கு என்ன்ன்ன்ன்னா பில்ட்டப் கொடுக்குறான்யா ).

சாப்பிட்டு விட்டு, காரிலேயே கொஞ்ச நேரம் சிரமப்பரிகாரம் பண்ணினேன் ( அதாங்க…குட்டித் தூக்கம்). 

ஒரு 10 மணி இருக்கும். ரேடியோ அலறத் தொடங்கியது .அமானிக் குடும்பம், ஒரு வேட்டைக்காக தங்களைத் தயார் செய்து கொண்டிருக்கும் தகவல் வர, அடித்துப் பிடித்துக் கிளம்பினோம்.

நாங்கள் காலை உணவு உண்ட இடத்திற்கு அருகில்தான் அவையும் இருந்தது எங்களுடைய அதிர்ஷ்டம். ஆமாம். ஒரு பத்து நிமிஷத்திலேயே அவற்றைக் கண்டு பிடித்து விட்டோம் ( ஆமா.இவரு பெரிய ஐன்ஸ்டின். ரிலேட்டிவிட்டி தியரியை கண்டு பிடித்து விட்டார் என்று நீங்கள்  திட்டுவது லேசா கேட்குது. நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், அமானியைக் கண்டு பிடிப்பது ரிலேட்டிவிட்டி தியரியை விட பெரிய விஷயம்தான் ).

நான் ரோட்டை விட்டு விலகிச் சென்று படம் பிடிப்பதற்கு “ Off Road License” வைத்திருந்தாலும், அவற்றின் அருகில் சென்றால் அவற்றால் வேட்டையாட இயலாது என்பதால், நன்றாக விலகியே காரை பார்க் பண்ணி விட்டுக் காத்திருந்தோம். 

அமானியும் (தாயும்), அதன் பிள்ளைகள் மூவரும் வெவ்வெறு பக்கம் சூழ்ந்து கொள்ள நடுவில் ஒரு வில்ட பீஸ்ட் குழு,வரும் ஆபத்து தெரியாமல் அமைதியாக புல்லை மேய்ந்து கொண்டிருந்தன. 

நான்கு சிவிங்கிப் புலிகளும் புல்லினுள் படுத்துக் கொண்டே தவழ்ந்து கொண்டிருந்தன. அதற்கு ஆங்கிலத்தில் “ஸ்டாக்கிங்” (Stalking ) என்று பெயர். சில சமயம் அவை மணிக்கணக்கில் ஸ்டாக்கிங் செய்யும். 

அதேபோல், அவை செய்யும் ப்ளானிங்கும் புரியாத புதிராக இருக்கும். சில சமயம் பக்கத்தில் இருக்கும் மிருகங்களை விட்டு விடும். தூரத்தில் இருக்கும் மிருகங்களைக் குறி வைத்து பதுங்கிப் பதுங்கிப் போய், ஒரு நேரத்தில் மின்னல் வேகத்தில் ஓடிப் போய் தாக்கி தன் வேட்டையை வெற்றிகரமாக முடித்து வைக்கும்.

அதேபோல், சில சமயம் அவை துரத்தும்போது தெரியாமல், அவை குறி வைக்காத வேறொரு மிருகம் வந்து நடுவில் மாட்டிக் கொண்டு உயிரை விடுவதும் உண்டு. காட்டில் நடக்கும் நாடகங்கள் மிகவும் விசித்திரமானவை. 

எளியவன் வீழ்வதும் வலியவன் வாழ்வதும் நாட்டில் மட்டுமல்ல,  காட்டிலும் உண்டு. இதற்கிடையில் ஒண்ணுமே செய்யாமல், வேட்டை முடிந்ததும் கடைசி நேரத்தில் வந்து கழுதைப் புலி,  இரையை லபக்கிக் கொண்டு போய் விடுவதும் உண்டு – நம்ம ஊர் அரசியல்வாதி போல. 

எனவேதான், சிங்கம், சிறுத்தை, சிவிங்கிப் புலி போன்றவை இரையை வேட்டையாட எவ்வளவு போராடுமோ, அதை விட 100 மடங்கு போராட்டத்தை, அந்த இரையை மற்ற விலங்குகளிடமிருந்து காத்துக் கொள்வதில் காட்டும்.

சரி..மேட்டருக்கு வருவோம். 

அந்த நான்கு சிவிங்கிப் புலிகளும் செமத்திக்கு ஸ்டாக்கிங் செய்தன. காரணம், சிவிங்கிப் புலிகளுக்கு தாம்சன் கேஸல் (Thompson Gazzelle ) என்னும் ஒரு வகை சிறிய மானினம்தான் எளிதான இரை. அவையும் செமையாக ஓடும். 

ஆனால், வில்ட பீஸ்ட் கொஞ்சம் கடினம். வில்ட பீஸ்ட்டும் ஒருவகை மானினம்தான் என்றாலும் கூட, உருவத்தில் கொஞ்சம் பெருசு. சில சமயம் எதிர்த்துப் போராடவும் செய்யும். அது மாதிரி ஒரு நாடகத்தை நான் தான்சானியாவில் பார்த்து புகைப்படம் எடுத்து வைத்திருக்கிறேன். அப்போது சிவிங்கிப் புலி (சீட்டா), துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று தலை தெறிக்க ஓடியதை வாழ்க்கையிலும் மறக்க முடியாது. 

எனவே, அவை வில்ட பீஸ்ட்டை வேட்டையாடும்போது ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்கும். 

ரொம்ப நேரம் ஸ்டாக்கிங் செய்து, ஒரு சேஃப் டிஸ்டன்சுக்கு வந்தவுடன், முதன் முதலில் தாய் அமானிதான் விரட்டத் தொடங்கியது. விரட்டு என்றால் விரட்டு… பேய் விரட்டு. இதற்கிடையில் அமானியின் பசங்களும் சேர்ந்து கொள்ள ஒரு முப்பது வினாடிக்குள்  தங்கள் வேட்டையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டன. என்னால் அவற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. பர்ஸ்ட் மோடில் போட்டு, பட படவென்று நூற்றுக் கணக்கில் எடுத்துத் தள்ளி விட்டேன். ஆனால், அவை அந்த வில்ட பீஸ்ட்டின் மீது பாயும் ஆக்‌ஷனை என்னால் எடுக்க முடியவில்லை.

அந்த முப்பது வினாடிக்குள் அவை எங்கேயோ போயிருந்தன. 

ஜாக் கொஞ்சம் இடைவெளி கொடுத்து அந்த இடத்திற்கு சென்றான். அதில் அமானி, வில்டபீஸ்ட்டின் குரல்வளையை கடித்து மூச்சுத் திணறலை உண்டு பண்ணிக் கொண்டிருக்க, மற்றவை அதன் மற்ற இடங்களைக் கடிக்கத் தொடங்கியிருந்தன. 

அந்த இடத்தில் எங்கள் வண்டி மட்டுமே இருந்தது. வில்டபீஸ்ட் இறந்து விட்டதை உறுதி செய்த பின்னர் அமானி மட்டும் ஓய்வெடுக்க, நிழல் தேடி எங்கள் காரை நோக்கி வர எனக்கு கன்னா பின்னாவென்று படங்கள் கிடைத்தன.

அமானி நேரே வந்து எனக்கு நேர் கீழே, ஜன்னலுக்கு வெளியில் படுத்து மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஆரம்பித்தது. 

வேட்டை நடந்தது என்னவோ வெறும் முப்பதே முப்பது வினாடிகள்தான். ஆனால், அமானிக்கு அரை மணி நேரம் ஆகியும் இரைப்பு நிற்கவில்லை. அப்போதுதான் அதன் வேகமும், வலிமையும் எனக்குப் புரிந்தது. 

இதற்கிடையில் அமானியின் புதல்வர்கள் இரையை முழு வெட்டு வெட்டத் தொடங்கி விட்டன. அவ்வப்போது அமானியும் போய் தன் பங்குக்கு இரையை உண்டு விட்டு வந்தது.

கொஞ்ச நேரத்தில் அவற்றின் பசி அடங்கியதும், அவை நான்குமே எங்கள் காரின் அடியில் வந்து விளையாட ஆரம்பித்து விட்டன. 

அமானி குடும்பத்திற்கு விருந்தோ இல்லையோ, எனக்கு நல்ல விருந்து. ஆசை தீர க்ளிக்கித் தள்ளி விட்டேன்.

இதற்கிடையில் நிறைய வாகனங்கள் அந்த இடத்திற்கு வந்து சேர, அவற்றிற்கு இடம் கொடுத்து விட்டு நாங்கள் மதிய உணவிற்காக ஹோட்டலுக்குத் திரும்பினோம். 

சாப்பிட்டு விட்டு நல்ல ஒரு தூக்கம். நாலு மணிக்கு எழுந்து, ஒரு டீயும் நாலு பிஸ்கோத்தும் கொறித்து விட்டு, மாலை டிரைவ் கிளம்பினோம்.

நான் தெளிவாக இருந்தேன். இன்று மாலை எனக்கு நல்ல சில்யூட் கிடைத்தால் மட்டும் போதும் என்றேன். 

ஜாக்குக்கு அதில் உடன்பாடில்லை. ஒரே ஒரு சிறுத்தையை மட்டும் பார்த்து விட்டுப் போவோம் என்றான். நான் வழக்கம்போல் ஷூகர் கேன் சாப்பிட ஃபீஸா என்று மகிழ்ச்சியுடன் ஓகே சொல்லி விட்டேன்.

“லோர்கோகல்” என்னும் சிறுத்தையைத் தேட, சீக்கிரமே கிடைத்தது. அதை சில படங்கள் எடுத்து விட்டு, சூரியனார் இறங்கும் ஒரு மலை முகட்டைக் குறி வைத்து அதன் நேர் கீழே ஒரு பள்ளத்தில் காத்திருக்கத் தொடங்கினோம்.

நினைத்தாற்போல், சூரியனார் முழு வீச்சுடன் இறங்க, அதற்கு முன்னால் நிறுத்த எனக்கு ஒரு சப்ஜெக்ட்டும் கிடைக்கவில்லை. ஹார்ட் பீட் எகிற ஆரம்பித்தது. 

தூரத்தில் கிராண்ட் கெஸல் என்னும் மான் ஒன்று மேய்ந்து கொண்டிருக்க, கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அந்த இடத்திற்கு சென்று சூரியனையும், அந்த மானையும் இணைத்து எடுப்பதற்குத் தோதாக எங்கள் வாகனத்தை நிறுத்தினான் என்னுடைய கிருஷ்ண பரமாத்மா “ஜாக்”.

நான் குஷியாகவும், வெறித்தனமாகவும் பட படவென்று க்ளிக்கத் தொடங்கினேன். 

மான் அந்த இடத்தை விட்டு அகல்வதற்கும், சூரியனார் முழுவதுமாக மறைவதற்கும் சரியாக இருந்தது.

நான் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமடைந்த நாட்களில் இன்றும் ஒன்று.

மிகுந்த திருப்தியுடன் மறுநாள் கனவுடன் ஒட்டலுக்குத் திரும்பினோம். 

வழக்கமாக “நாளைக்கு ?” என்று ஜாக்தான் என்னைக் கேட்பான். இன்று அப்படி என்னைக் கேட்காமலேயே, நாளைக்கு மெனு (??) “ சிங்கத்தின் வேட்டை, சிறுத்தை குடும்பம், மிகவும் அற்புதமான சில்யூட். போதுமா  ? குட் நைட்” என்றான் 

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என்று மனதிற்குள்ளாகவே நினைத்துக் கொண்டு குட் நைட் ஜாக் என்றேன்

வெ.பாலமுரளி.

பி.கு: இத்துடன் இணைத்துள்ள அனைத்துப் படங்களையும் பார்த்தால் இந்தக் கட்டுரை இன்னும் தெளிவாகப் புரியும்.