முள்றியின் டைரி : 58- மாரா ஓர் மந்திரலோகம்- 1

எத்தனை ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தாலும்,ஒவ்வொரு நாளும் புதுப் புது அனுபவத்தைத் தரவல்லது காடு.

வேள்பாரி நாவலில் சு.வெங்கடேசன்.

இதே கருத்தையே நானும் என்னுடைய வனங்களில் ஒரு தேடல் சென்ற பாகத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

காடுகளைப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. காடுகள் ஒருபோதும் நம்மை ஏமாற்றாது . அதற்கு கொடுக்க மட்டுமே தெரியும்.

நான் சென்ற (2019) ஆகஸ்ட்டில் மசை மாரா வனத்துக்குள் 10 நாட்கள் தங்கியிருந்தேன். 10நாட்களும் வேலி எதுவும் இல்லாத கேம்ப்களில்தான்வாசம்.

ஒவ்வொரு நாளும் நான் சந்தித்த அனுபவங்களை சுருக்கி ஒரு டைரிக்குள் அடக்குவது என்பது ஒரு சமுத்திரத்தை ஒரு சிறிய பானைக்குள் அடைப்பது போன்றது ( கொஞ்சம் டூ மச்சோ ? ).

நான் பொதுவாக மசை மாரா சென்றால் ஏதேனும் ஒரே ஒரு ஹோட்டலிலோ அல்லது கேம்ப்பிலோ தங்கி விட்டு ஃபோட்டோக்கள் எடுத்து விட்டு வந்து விடுவேன்.

இந்த முறை 10 நாட்கள் தங்க திட்டமிட்டதால்,மூன்று வெவ்வேறு இடங்களில் தங்கலாம் என்று முடிவெடுத்து,8 மாதங்களுக்கு முன்பே திட்டமிட ஆரம்பித்து விட்டேன்.

அந்த மூன்றில் ஒன்று ப்ராப்பர் ஹோட்டல் ( ஆனால் வேலிகளில்லை),மற்ற இரண்டும் வேலிகளற்ற டெண்டெட் கேம்ப்கள்.

போய் இறங்கிய முதல் கேம்ப் “ டெம்போ பை ஜாக்சன்” ( Tembo by Jackson).

மசை மாராவில், பொதுவாக சவானா புல்வெளிகள்தான் அதிகமாக இருக்கும். அங்கங்கே சில அடர்ந்த மரங்கள் நிறைந்த வனங்களும் இருக்கும். அவைதான் சிறுத்தைகளின் புகலிடம்.

அப்பேற்பட்ட ஒரு அடர்ந்த பகுதியில்தான் அமைந்திருக்கிறது “டெம்போ பை ஜாக்சன்”. இந்த கேம்ப் ஆரம்பித்து ஒரு வருடம்தான் ஆகியிருந்தது.

மொத்தமே6 டெண்ட்கள்தான். உள்ளே நுழைந்தவுடனேயே தெரிந்து விட்டது, இங்கே தங்கப் போகும் இரவுகள் மிகவும் த்ரில்லிங்காக இருக்கப் போகிறதென்று. 

அன்று மதிய உணவை முடித்து விட்டு, ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு மாலை சஃபாரி கிளம்பினோம் ( நானும் என் டிரைவரும்தான் ).

இந்த ட்ரிப்பில் ஒரு எக்ஸ்க்லூஸிவ் அனுபவம் வேண்டுமென்பதால்,எனக்கு மட்டும் ஒரு தனி வாகனத்தையும், அங்கே மசை மாராவிலேயே பிறந்து வாழும் “சாமி” என்னும் சாமுவேலையும் 8 மாதங்களுக்கு முன்பே புக் பண்ணி விட்டேன். சாமிக்கு அங்கிருக்கும் புல் பூண்டு கூட சினேகிதமாயிருக்கிறது.

டெண்ட்டை விட்டு கிளம்பி ஒரு ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது, Topi Plane Pride என்றழைக்கப்படும் “டோப்பி ப்ளேன் குடும்பம்” சிங்கக் குடும்பத்தைப் பார்த்தோம். ஒரு பெண் சிங்கம் ஐந்தாறு குட்டிகளை சமீபத்தில் ஈன்றிருக்கிறது. குட்டிகள் பிறந்து இரண்டு மாதங்கள் இருக்கும். அழகு என்றால் கொள்ளை அழகு.

மாலை வெளிச்சமும் நன்றாக இருந்ததால், வளைத்து வளைத்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தேன். 

அப்போது சாமிக்கு, ஒரு மெசேஜ் வந்தது – ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிறுத்தை ஒன்று ஒரு மரத்தின் மீது அமர்ந்து தான் வேட்டையாடிய மானை தின்று கொண்டிருக்கிறது. தண்ணீர் குடிப்பதற்கு எந்த நேரத்திலும் கீழே இறங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று.

நான் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருக்கும் சிங்கக் குடும்பம் நாம் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அருகில்தான் இருப்பதால்,அவை குட்டிகளோடு வெகு தூரத்திற்கு செல்வதற்கு வாய்ப்பு கிடையாது. எனவே, இதை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று சிறுத்தை இருக்கும் இடம் நோக்கி விரைந்தோம்.

நாங்கள் சிறுத்தை இருக்கும் இடத்தை சென்றடையும் போது மணி மிகச் சரியாக மாலை நான்கு. வயிறு நிறைந்த களைப்பினாலோ என்னவோ, தலைவர் செம தூக்கத்தில் இருந்தார். தலைவர் மரத்தின் மீது புதர் மாதிரி இருந்த ஒரு பக்கத்தில் இருந்ததால், அவருடைய வாலை மட்டும்தான் எங்களால் பார்க்க முடிந்தது.

அவர் இறங்கும்போது இப்படித்தான் இறங்குவார் என்று என்னால் ஊகிக்க முடிந்ததால், அதற்குத் தகுந்தாற்போல், எங்கள் காரை பார்க் செய்து விட்டு, என் கேமராவையும் செட் பண்ணி விட்டு காத்திருந்தோம். அது இறங்கும்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் இறங்கி ஓடி விடும் என்பதால், என் கண்களை கேமராவை விட்டு அகற்றாமல் குனிந்து ஒரே பொசிஷனில் வைத்துக் கொண்டு அந்த கோல்டன் மொமெண்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது காட்டு ஈக்களின் தொல்லை வேறு எரிச்சலாக இருந்தது. அது சும்மா நம்ம கையில் ஒரு டைம் பாஸூக்காக உட்கார்ந்து விட்டுப் போனாலும்,ஒரு மணி நேரத்திற்கு அந்த இடம் கடுக்கும். ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு காத்திருந்தான் முரளி.

மசை மாராவிற்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால்,நைரோபியில் இருக்கும்போதே லேசாக அடி முதுகு வலித்துக் கொண்டிருந்ததை நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், நம்ம சிறுத்தையாருக்காக காத்துக் கொண்டிருக்கும்போது, வலி கொஞ்சம் தீவிரமடைந்தது போல் இருந்தது.

சில நல்ல ஃபோட்டோக்கள் கிடைக்கப் போகும் எதிர்பார்ப்பில், நான் அந்த வலியை கண்டு கொள்ளவில்லை ( அப்பவே யாராவது அந்த L4, L5 மேட்டரைப் பற்றி எனக்கு விளக்கிச் சொல்லியிருந்தால், நான் நைரோபி திரும்பி ஆஸ்பத்திரியில் 10நாட்கள் அவதிப்பட்டிருக்க வேண்டியிருக்காது. கொழுப்போ,விதியோ, ஏழரையோ எதுவோ ஒன்று….என்னை அந்த வலியை புறக்கணிக்க வைத்தது ).

நேரம் போய்க் கொண்டேயிருந்தது, நம்ம சிறுத்தையார் மட்டும் நகரவேயில்லை. லைட்டிங் வேறு மாறிக் கொண்டேயிருந்தது. ஒவ்வொரு 15 நிமிடமும் கேமரா செட்டிங்ஸை,குறிப்பாகISO வை மாற்றிக் கொண்டேயிருந்தேன். சூரியனும் அஸ்தமிக்க தொடங்கினான். எனக்கு ஒரு நப்பாசை, சூரியனின் பின்புலத்தில் சிறுத்தையாரை ஒரு சில்யூட் எடுக்க முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று. அதற்கேற்றாற்போலும் செட்டிங்ஸை மாற்றி வெயிட் பண்ணினேன். ஊஹூம்…நம்ம ஆள் அவ்வப்போது வாலை ஆட்டுவதோடு சரி.

எங்களுடன் வந்த கார்களில் பெரும்பாலான கார்கள் போய் விட்டன. எங்கள் காரும் , இன்னொரு காரும் மட்டுமே பாக்கி. சன் செட்டும் போய், வானத்தில் வண்ணங்கள் மாறத் தொடங்க ஆரம்பித்தது.

பிங்கோ……

தலைவர் எழுந்து ஒரு சோம்பல் முறித்து விட்டு,ரொம்ப நேரம் வெயிட் பண்ணியதால், எனக்கு மட்டும் ஓரிரண்டு போஸ் கொடுத்து விட்டு மரத்தை விட்டு இறங்கி அருகில் இருந்த புதருக்குள் ஓடி ஒளியும்போது மணி சரியாக மாலை ஆறே முக்கால் ( 6.45). அந்த சில விநாடிகளில் எத்தனை படங்கள் எடுத்தேன், எந்தெந்த ஆங்கிள்களில் எடுத்தேன், எத்தனை முறை கேமராக்களை மாற்றினேன்,எதுவுமே நினைவில்லை. என்னுடைய வாழ்க்கையில் அசுர கதியில் படம் எடுத்த அனுபவங்களில் இதுவும் ஒன்று.

படம் நன்றாக வந்திருக்குமா இல்லையா ஒன்றுமே யோசிக்கவில்லை. மனம் முழுக்க சந்தோஷம் மட்டுமே வியாபித்திருந்தது. இரண்டு கேமராக்களையும் சீட்டில் வைத்து விட்டு நிமிரும்போதுதான் அந்த மரண வலியை என்னுடைய அடி முதுகில் உணர்ந்தேன். சம்திங் இஸ் ராங் என்று பட்சி சொன்னது. என்னுடைய Bean Bag இரண்டை அடி முதுகிற்கு சப்போர்ட் கொடுத்து இரண்டு சீட்களில் கால் நீட்டி படுத்து விட்டேன். எடுத்த படங்களை செக் பண்ணக் கூட முடியவில்லை.

இரவு 7.45 மணிக்கு ஹோட்டலுக்கு வந்து,ஒரு குளியல் போட்டு விட்டு, இரவு உணவையும் முடித்து விட்டு, கேமரா பேக், கேமராக்கள், லென்ஸ்கள், ஃபில்ட்டர் செட் எல்லாவற்றையும் சுத்தம் பண்ணி விட்டு, எடுத்த படத்தை கம்ப்யூட்டரில் டவுன் லோட் பண்ணி , அதையும் நான் கொண்டு போயிருந்த External Hard Disc – இல் Back up எடுத்து விட்டு, செலக்டிவ் படங்களை எடிட் பண்ண ஆரம்பிக்கும்போது மணி இரவு 11.

ஒரு இருபதே இருபது படங்கள் மட்டும் செலக்ட் பண்ணி எடிட் செய்து விட்டு மகிழ்ச்சியுடன் படுக்க நினைக்கும்போது மணி மிகச் சரியாக நள்ளிரவு 12.

அப்போதுதான்“நான் உள்ளேன் ஐயா “ என்றது முதுகு வலி. ஹோட்டலில் சொல்லி Hot Water Bag எடுத்து வரச் சொல்லி, என்னுடைய டிரைவரை விட்டு மெதுவாக மிதிக்கச் சொல்லி, அந்த சுடு தண்ணீர் பையை முதுகில் வைத்து தூங்க நினைக்கும்போது மணி 1.

கிளம்பும்போது என்னுடைய டிரைவர், பாலா,நாம் 5.30 மணிக்குக் கிளம்ப வேண்டும். தயாராக இரு என்று சொல்லும்போது லேசாகக் கண்ணைக் கட்டியது. அது தூக்கமில்லை – மயக்கம்.

காலை 5.30 மணிக்குக் கிளம்ப வேண்டும் என்றால்,அதிகாலை4 மணிக்கே எழுந்திருக்க வேண்டும். சரியாக 3மணி நேரம் மட்டுமே தூக்கம். ஆனால், அந்த மூன்று மணி நேரமாவது நிம்மதியாகத் தூங்க முடிந்ததா என்றால் அதிலும் ஒரு சிக்கல் முளைத்தது.

நாங்கள் மதியம் பார்த்த “டோப்பி ப்ளேன் “ சிங்கக் குடும்பம் எங்கள் கேம்ப்பிற்கு மிகவும் அருகில் வந்து அது தன் கேம்ப்பைப்போட்டிருந்தது. குட்டிகள் இருந்ததால், பெண் சிங்கம் ஆண் சிங்கத்தை அருகில் வர அனுமதிக்கவில்லை என்று நினைக்கிறேன். அந்த ஆண் சிங்கம் இரவு முழுவதும் உறுமிக் கொண்டேயிருக்கும்போது உறக்கம் எங்கேயிருந்து வரும். 

ஆனால் ஒவ்வொரு டெண்ட்டிற்கும் ஒரு செக்யூரிட்டி ( மசாய்) ஆளைப் போட்டு பாதுகாப்பு தருகிறார்கள். அவர்கள் மட்டும் உறங்குவதேயில்லை. நான் தங்கியிருந்த டெண்ட்தான் கடைசி டெண்ட். அந்த சிங்கக் குடும்பம் என்னுடைய டெண்ட்டிலிருந்து ஒரு நூறடி தொலைவில்தான் அந்த இரவைக் கழித்ததாம் –இது என்னுடைய செக்யூரிட்டி சொன்ன தகவல். அதைச் சொல்லாமலேயே இருந்திருக்கலாம்.

அங்கிருந்த10 நாட்களும் என்னுடைய ஷெட்யூல் இப்படித்தான் போனது.

ஆனாலும், சுகமான அனுபவம்.

தொடரின் அடுத்த பாகத்தில் சந்திக்கிறேன்.

பிரியமுடன்

பாலா.