இன்றுடன் (10.04.2019) எனக்கு 28 வயது முடிந்து 27 தொடங்குகிறது…(ஃபேஸ் புக்கில் 51 வயசுன்னு சொல்லுவாய்ங்கெ. நம்பாதீங்க. அடிச்சுச் சொன்னாலும் நம்பவே நம்பாதீங்க )
“நான் கடந்து வந்த பாதைகள் “ என்று விலா வாரியாக கதை சொல்லும் அளவிற்கு பெரிதாக எந்த ஒரு ஆணியையும் ப்ளக் பண்ணவில்லை.
இருந்தாலும், ரொம்ப திருப்தியான வாழ்க்கை வாழ்ந்த சந்தோஷம் இருக்கிறது….
கவிஞர் அறிவுமதியின் “புல்லின் நுனியில் பனித் துளிகள் ” கவிதைத் தொகுப்பில் வரும் “ஹைகூ” கவிதைகள் போன்ற அழகான குடும்பம். அன்பைப் பொழியும் மனைவியும், மகளும் எனக்கு வாய்த்தது நான் முன் ஜென்மத்தில் செய்த புண்ணியங்கள்…( இந்த ஜென்மத்தில் நாம் செய்த புண்ணியம்தான் தெரியுமே ).
எனக்கு ஒரு சின்ன பிரச்சினை என்றாலும் கூட துடித்துப் போகும் உயிர் நண்பர்கள். சென்ற வருடம், எனக்கு ஒரு சின்ன ஹெல்த் பிரச்சினை. யாருக்கும் சொல்லாமல், நானே போய் மருத்துவமனையில் அட்மிட் ஆகி விட்டேன். விஷயம் தெரிந்து என் நண்பர்கள் அழுது , கோபத்தில் என்னை அடிக்கவே வந்து விட்டார்கள்.
இன்னொரு நெருங்கிய நண்பர் நான் வசிக்கும் அப்பார்ட்மெண்டில் மாடியில் வசிக்கிறார். நான் ஏதாவது மீட்டிங் என்று , வீட்டிற்கு வருவதற்கு நேரமாகி விட்டால், பதறிப் போய் உடனே ஃபோன் பண்ணி விடுவார்.
உங்களுக்கெல்லாம் என்ன கை மாறு செய்யப் போகிறேன் நண்பர்களே ?????? கண்டிப்பாக நன்றியெல்லாம் சொல்லி அந்நியப்படுத்த மாட்டேன் . அந்நியமாக மாட்டேன். ஆனால், நெகிழ்ந்து போய் கண்ணீர் விடுவதை என்னால் தடுக்க முடியவில்லை.
சென்ற ஜென்மத்தில் செய்த பாவங்கள் , உடல் நிலை செம பாடு படுத்தும். நானும் பெரிதாக கண்டு கொள்வதில்லை.
இந்த ஒரு கேவலமான உடல் நிலையை வைத்துக் கொண்டு நானும் 50 நாடுகளுக்கும் மேலாக சுற்றி விட்டேன் . இன்னும் ஆறேழு நாடுகள் வாளி லிஸ்ட்டில் உள்ளன ( அதாங்க….பக்கெட் லிஸ்ட் ). மீனாட்சி துணையால் அதையும் சுற்றி விட்டுத்தான் முழு ஓய்வு…
ஆல்ப்ஸ் மலையின் ஒரு உச்சியில் இருக்கும் போது நான் பட்ட அவஸ்தை, ஆம்ஸ்டர்டாமின் தெருக்களில் கேமராவோடு சுற்றியலையும்போது, அதை இயக்க என் விரல்கள் ஒத்துழைக்காமல் நான் அனுபவித்த மரண வேதனை, பீஜிங்கில் சீனப் பெருஞ்சுவரைப் படம் எடுக்க ப்ளான் பண்ணிய அதே நாள் மயங்கி விழுந்து ஐ சி யூ வில் சேர்ந்தது ( ஆனால், அதே வருடம், ஆறு மாதம் கழித்து திரும்பப் போய் சீனப் பெருஞ்சுவரை எடுத்துட்டோம்ல…..) ருவாண்டாவில் கொரில்லாக்களைத் தேடி மலை ஏற முயற்சிக்கும் போது , ரொம்ப நாள் கழித்து “ஆஞ்சைனா” வந்து பயமுறுத்தியது, துருக்கியில் துப்பாக்கி முனையில் நிறைய பணத்தை இழந்தது என்று கன்னா பின்னாவென்று அனுபவங்கள்….
அப்போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தாலும் , அப்போது எடுத்த படங்களையெல்லாம் இப்போது பார்த்தால், நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பஞ்சாகப் பறந்து விடும். இன்னும் இன்னும் ஓட வேண்டும் , இன்னும் இன்னும் படங்கள் எடுக்க வேண்டும் என்ற உற்சாகமும், என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையும்தான் என்னை இந்த அளவுக்கு ஓட வைத்துக் கொண்டிருக்கிறது…
இதோ…அடுத்த வாரம் தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே கிளம்பி விட்டேன்…
நிறைய படங்களையும், அதற்கு மேல் அனுபவங்களையும் எதிர்பார்த்துச் செல்கிறேன்.
எப்போதும் அன்னை மீனாட்சியும் உடன் பயணிப்பதால், பயமோ , தயக்கமோ என்றைக்கும் இருந்ததில்லை. இப்போதும்.
மற்றபடி, வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் கோடி.
விரைவில் நிறைய அனுபவங்களுடன் சந்திக்கிறேன்.
வெ.பாலமுரளி