Your Days are numbered ….Be Careful.
எனக்கும் இந்த டாக்டர்களுக்கும் போன ஜென்மத்தில் ஏதோ தீராத ஒரு பகை என்று நினைக்கிறேன். என் வாழ்க்கையில் ஏராளமான டாக்டர்கள் புகுந்து விளையாடி விட்டார்கள்.
அப்போது நான் தாஷ்கெண்டில் 3- வது வருடம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம், இந்த வெளிநாட்டுப் புள்ளைங்க எல்லாம் தப்புத் தண்டா எதுவும் பண்ணாம சுத்த பத்தமா இருக்குதுங்களான்னு தெரிஞ்சுக்க, வருஷா வருஷம் மெடிக்கல் டெஸ்ட் ஒண்ணு பண்ணுவாய்ங்கெ. X Ray – யில் ஆரம்பித்து Blood Test, Urine Test, Motion Test, VD Test, AIDS Test என்று உலகத்தில் அனைத்து டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்து விட்டு, பிரச்சினை ஒன்றும் இல்லை, புள்ளைங்க சுத்தம் என்று ஒரு டாஸ் மார்க் சர்ட்டிஃபிகேட் ஸாரி, ஒரு ஹால் மார்க் சர்ட்டிஃபிகேட் கொடுத்த பிறகுதான் படிப்பை Continue பண்ண விடுவாய்ங்கெ. ஏதாவது பிரச்சினை என்று தெரிந்தால் Quarantine Area ஒன்றில் போட்டு பிரித்து மேய்ந்து விடுவார்கள். ராமாயணத்தில் சீதை தீக் குளித்து தன்னை பதி விரதை என்று நிரூபித்தது போல, நாங்களும் வருடா வருடம் அனைத்து டெஸ்ட்டுகளும் எடுத்து நாங்கள் சுத்தம்தான் என்று நிரூபிப்போம் (இவனுக்கு உதாரணம் காட்ட சாதாரணமான ஆளுங்களே கிடைக்க மாட்டாய்ங்கெ போலிருக்கு).
அப்படித்தான் ஒரு நாள் நான் எல்லா டெஸ்ட்டும் எடுத்து விட்டு, ‘ஸ்தலோவயா’ எனப்படும் எங்கள் காண்டீனுக்குச் சென்று வெஜிடபிள் சூப்பும், மட்டன் புலாவும் சாப்பிட்டு விட்டு ஒரு தம்ளர் நிறைய ‘ஸ்மித்தானா’ என்றழைக்கப்படும் Yoghurt ஒன்று அடித்து விட்டு, அங்கு இங்கு நகர முடியாமல் வழக்கம் போல் ஒரு மதியத் தூக்கம் ஒன்று போட்டுக் கொண்டிருந்தேன். (‘இத்தனை வருடம் கழித்து அன்று சாப்பிட்ட சாப்பாடு எப்படி ராசா ஞாபகம் உள்ளது?’ என்று நக்கலாக கேள்வி கேட்க ஒரு கும்பல் இருக்கும். தாஷ்கெண்டில் எங்களுக்கு கிட்டத்தட்ட டெய்லி இதே மெனுதான் மக்காஸ். சரியா ? ச்சே….ஒரு டைரி எழுதும்போது எதையெதையெல்லாம் யோசிச்சு எழுத வேண்டியிருக்கிறது. என்னடா இது…இந்த பாண்டிய நாட்டுக்கு இப்படி ஒரு சோதனை).
தூங்கிக் கொண்டிருக்கும்போது கதவை யாரோ தட தடவென்று தட்டுவது போல இருந்தது. முதலில் அது கனவு என்று நினைத்து கண்டு கொள்ளவில்லை. இரண்டாவது முறை கொஞ்சம் வேகமாக தட்டுவது போல இருந்ததால், வாரிச் சுருட்டி எழுந்து போய் கதவைத் திறந்தேன். நான் தங்கியிருந்த ‘உஸ்கரதோக்’ ஏரியாவில் உள்ள பாலி கிளினிக்கில் இருந்து ஒரு அட்டெண்டெண்ட் வந்திருந்தான். ‘நீதான் பாலமுரளியா’ என்றான்- என்னவோ ‘நீதான் வீர பாண்டிய கட்ட பொம்மனோ’ , என்னும் டோனில். நான், ஆமாம் என்றேன் தூக்கக் கலக்கத்தோடு . உன்னை Chief Doctor கையோடு கூட்டி வரச் சொன்னார். ‘எதுக்கு’ ? ‘தெரியாது’. ‘நான் கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்’. ‘முடியாது, இப்பவே வர வேண்டும்’. என்று கொஞ்சம் நேரம் ‘தளபதி’ ஸ்டைலில் பேசிக் கொண்டிருந்தோம். விட்டால், என்னை குண்டுக் கட்டாய் கட்டித் தூக்கிக் கொண்டு போய்விடுவான் போலத் தெரிந்தலால், ரொம்ப ஆர்க்யூ பண்ணாமல் உடை மாற்றிக் கொண்டு, Come …. Lets Go என்று ஜென்டிலாகக் (????),கிளம்பி விட்டேன்.
அங்கிருந்த Chief Doctor ஒரு வயதான அம்மா. என்னைப் பார்த்தவுடன் மிகவும் கனிவோடு, எப்படியிருக்கிறாய் பாலா ? கொஞ்சம் சோர்வாய்த் தெரிகிறாயே ? என்றது – மிகவும் பரிவோடு. நான் அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே என்றேன் அவசரமாக ( நாம மட்டன் புலாவ் கூடக் கொஞ்சம் சாப்பிட்டது இந்த அம்மாவுக்குத் தெரிந்து விட்டதோ ?).
உடனே அந்த அம்மா என் அருகில் வந்து என் தலையை ஆதரவோடு தடவி, இந்த சிகரெட் குடிக்கும் பழக்கத்தை மட்டும் விட்டு விடுப்பா, உடம்புக்கு நல்லதல்ல என்றது. எனக்கோ , பயங்கரக் குழப்பம். கொஞ்சம் கூட யோசிக்காமல் ‘ அது கொஞ்சம் கஷ்டமாச்சே டாக்டர்’ என்றேன். அந்த அம்மாவுக்கு பயங்கர கோபம் வந்து விட்ட்து. “ Why you can not ? You know something ? Your Days are numbered- Be Careful ” என்றது ரஷ்யனில் ( அப்பாடா…இந்த டைரியின் தலைப்பைச் சொல்லியாகி விட்டது).
நான் உடனே,” அதில்லை டாக்டர், நான் சிகரெட்டே குடிப்பதில்லை, பிறகு எப்படி நிறுத்துவது” என்றேன் ஜோக்கடிக்கும் நோக்கத்தில். அந்த அம்மா கெட்ட கடுப்பாகி விட்டது. ‘டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்று தெரியாது ?’ என்றது சத்தமாக ( ஆ ஊன்னா எல்லா டாக்டரும் இதெயே சொல்றாய்ங்கெ. ஆனா அவெய்ங்கெ மட்டும் நம்மக்கிட்ட, இந்த ஸ்கேன் எடுத்துட்டு வா, MRI எடுத்துட்டு வா, ஆஞ்சியோ எடுத்துட்டு வான்னு நிறைய பொய் சொல்லலாம் போலிருக்கு).
‘நான் அழாக் குறையாக, இல்லை டாக்டர் நான் நெஜமாகவே சிகரெட் குடிப்பதில்லை, ப்ளீஸ் நம்புங்க’ என்றேன். “ No Way. என்னிடம் நீ கொடுத்த ரிப்போர்ட் இருக்கிறது ( நான் எப்போடா உங்களுக்கு ரிப்போர்ட் கொடுத்தேன்….?). இந்த X Ray –யைப் பார். உன்னுடைய Heart, Lungs எல்லாம் எப்படி மூடியிருக்கிறது பார்” என்றது. எங்களுக்கு 3rd Year Engineering- இல் X Ray – யை எப்படி Analyze பண்ணுவது என்று இன்னும் சொல்லிக் கொடுக்காதலால், அந்த X Ray –யில் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், ‘என்ன டாக்டர் இப்படியிருக்கிறது ?’ என்றேன் பொத்தாம் பொதுவாக – எப்படிப் பார்த்தாலும் என்னுடைய கமெண்ட் தப்பாக இருக்காது என்ற எண்ணத்தில் . அது மட்டுமிலாமல், அது என்ன டாக்டர் கோடு கோடாக இருக்கிறது என்று கேட்க நினைத்து வாயை மூடிக் கொண்டேன். ‘ உனக்கே தெரியுது (???) பார். நான் அவசரமாக வெளியூர் சென்று கொண்டிருக்கிறேன். ஒரு இரண்டு வாரம் கழித்து வந்து உன்னைப் பார்த்துக் கொள்கிறேன். You may go now” என்று என்னை அனுப்பி விட்டது அந்த அம்மா.
நம்ம எழுத்தாளர் சுஜாதா ‘மேகத்தைத் துரத்தியவன்’ என்று ஒரு கதை எழுதியிருப்பார். அதில் வரும் கதாநாயகன் ஜவஹர் போல, என்னைச் சுற்றி என்ன நடக்குது, சும்மா அறையில் தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி, இனிமே நீ சிகரெட் குடித்தா செத்து விடுவாய்ன்றாய்ங்கெ என்று ஒன்றுமே புரியாமல் குழம்பி விட்டேன்.
அந்த டாக்டர் சொன்ன ‘Your Days are numbered ..” வேறு என் காதிலேயே ஒலித்துக் கொண்டிருந்தது . நான் பொதுவாகவே திங்கள் கிழமை விடிந்து விட்டாலே போதும், இன்னும் 5 நாட்கள் இருக்கின்றன சனிக்கிழமை வருவதற்கு என்று நாட்களை எண்ண ஆரம்பித்து விடுவேன். அதனால் எனக்கு நாட்களை எண்ணுவதில் ஒன்றும் பயமில்லை. இருந்தாலும் குடிக்காத சிகரெட்டுக்காக நாட்களை எண்ணுவதில் எனக்கு உடன்பாடில்லை.
அந்த நேரம் பார்த்து என் நண்பன் Dr. ஸ்ரீதரனும் ஊரில் இல்லை. இந்தியா போயிருந்தான் என்று நினைக்கிறேன். என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் உடனே எங்கள் Batch Mate இந்திரா ஞாபகம் வந்தது. இந்திரா, ஸ்ரீதரனோடு படிக்கும் முன்றாம் ஆண்டு மெடிக்கல் மாணவி. வேலூர்க்காரப் பெண்.
அவளிடம் போய் விஷயத்தைச் சொன்னவுடனேயே, விஷயத்தின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு , ‘அங்கு எடுத்த X Ray – யைக் கொண்டு வந்திருக்கிறாயா’ என்றாள். ‘இல்லையே, அவர்கள் என்னிடம் ஒன்றுமே கொடுக்கவில்லை’ என்றேன். உடனே சற்றும் தாமதிக்காமல் தன்னுடைய யுனிவர்சிட்டிக்கு என்னை அழைத்துச் சென்று தன்னுடைய டீனிடம் என்னை அறிமுகப் படுத்தி வைத்து விஷயத்தை விளக்கினாள். அவர் என்னை ATM மாதிரி இருந்த ஒரு மெஷினில் நிற்க வைத்து ஏதேதோ டெஸ்ட்டுகள் எடுத்துப் பார்த்து விட்டு, ‘அப்படி ஒண்ணும் தெரியலையே. Chest clear ஆக உள்ளதே’ என்றார். டாக்டர் , அப்படியென்றால் எனக்கு ஒரு கடிதம் (மெடிக்கல் ரிப்போர்ட் ) தர முடியுமா, என்றேன். கண்டிப்பாக, என்று சொல்லி விட்டு சிறிது நேரத்திலேயே தன்னுடைய ரிப்போர்ட்டையும் தந்து விட்டார். எனக்கு அப்போதுதான் உயிரே வந்தது – நல்ல வேளை Count Down -இல் இருந்து தப்பித்தோமேயென்று.
உடனே சற்றும் தாமதிக்காமல், அந்த மெடிக்கல் ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு உஸ்கரதோக் பாலி கிளினிக்கிற்குச் சென்றேன். அந்த சீனியர் டாக்டர் லீவில் சென்றிருந்தலால், அங்கு வேறொரு டாக்டர் உட்கார்ந்திருந்தார். நான் கொண்டு சென்றிருந்த ரிப்போர்ட்டைக் காண்பித்து விஷயத்தை விளக்கினேன். அந்த டாக்டர் விறு விறுவென்று போய் என்னுடைய X Ray ரிப்போர்ட்டை எடுத்து ஆராய்ந்தார். பார்த்து விட்டு ‘ நீ செயின் ஸ்மோக்கர் என்றும் , இரவில் மூச்சுக் கூட விட முடியாமல் (???) சளி வந்து அடைப்பதாகவும், சில சமயத்தில் சளியில் ரத்தமும் சேர்ந்து( ரத்த்த்த்த்தமா ????) வருவதாகவும் நீயே சொன்னதாக ரெக்கார்ட் ஆயிருக்கே என்றார் . முதல்ல, நீ சிகரெட்டுக் குடிக்காதேனாய்ங்கெ…இப்போ செயின் ஸ்மோக்கர் என்று சொல்லி, துப்பினா ரத்தம் வரும்னு சொல்லி , ‘வாழ்வே மாயம்’ கமலஹாசன் ரேஞ்சுக்குக் கொண்டு போய்ட்டாய்ங்கெளேன்னு எனக்கு செம கோபம்.’ நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லை. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது (பொய் மட்டும் சொல்லுவியாக்கும்னு கேட்காதீங்க மக்காஸ். ப்ளீஸ்), நல்லாப் பாருங்க டாக்டர், அது வேற யாரோட ரிப்போர்ட்டாவது இருக்கப் போகுது’ என்றேன்- நிஜமான பதட்டத்தோடு.
அப்படி இருக்க வாய்ப்பில்லையே என்று சொல்லிக் கொண்டே எனக்கு முன்னே மற்றும் பின்னே வந்த பேஷண்டுகளின் ரிப்போர்ட்டை முதலில் ரெஜிஸ்டர் செய்த இடத்தில் பார்க்க , எனக்குப் பின்னால் ஒரு ரஷ்யன் எதோ பிரச்சினை என்று வந்தது, அந்த பிரகஸ்பதி, தான் செய்த தப்புக்களைப் பூராவும் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் (???) கொடுத்தது எல்லாம் தெரிய வந்தது. ரெக்கார்டு அடுத்த ஸ்டேஜுக்குப் போகும்போது, தவறுதலாக இந்த உத்தமனின் (நான்தான்…ஹி…ஹி…ஹி.. ) பெயரும் அந்த ரஷ்யனின் பெயரும் மிக்ஸாயிருக்கிறது . இவ்வளவுக்கும் நம்ம ஊர் ஜெயிலில் எடுப்பது போல கையில் ஒரு சிலேட்டைக் கொடுத்து, அதில் ஒரு நம்பரை எழுதி
ஃபோட்டொவெல்லாம் எடுத்தாய்ங்கெ. அதையும் மீறி எங்கோ தவறு நடந்திருக்கிறது ( எனக்கு வழக்கமாக தோணும் அதே கேள்வி அன்றும் எழுந்தது, ‘இது போல விஷயங்கள் எனக்கு மட்டும்தான் நடக்குமா, இல்லை ரொம்பப் பேருக்கு நடக்குமா ?’).
என் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்து விட்டு ‘சாரி ..ஒரு சின்ன மிஸ்டேக் நடந்திருக்கிறது. இதைப் பெரிது படுத்தவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்.
‘ சின்ன்ன்ன மிஸ்டேக்கா ????? ஏண்டா , ஒருத்தன் குறட்டை விட்டு சும்மா தூங்கிக் கொண்டிருக்கும் போது எழுப்பி விடுவீங்க, எழுப்பி சிகரெட் குடிக்காதே , குடித்தா சளியில் ரத்தம் வரும் , உன்னோட நாளை எண்ணிருவோம்னு ஏதோ எலும்பை எண்ணிருவோம்ன்ற சொல்லுவீங்க, நாங்களும் கேட்டுக் கொண்டு போயிரணுமா’ என்றேன் சூடாக. உடனே அவர், ‘அதான் மன்னிப்பு கேட்குறேன்ல. வேற என்ன செய்யணும்ங்ற ? உன்னால முடிந்ததை பண்ணிக் கொள், போ ‘ என்று விட்டேத்தியாகச் சொல்லி விட்டார். நானும் கொஞ்சம் கூட யோசிக்காமல், போனால் போகுது என்று பெருந்தன்மையாக மன்னித்து விட்டு (ம்க்கும் ) அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன் .
எது எப்படியோ இந்த மட்டிலாவது விஷயம் முடிந்ததே என்று எனக்கு ஒரே சந்தோஷம்.
By the way, அந்தா இந்தா என்று இந்த ஞாயிற்றுக் கிழமையும் முடியப் போகுது. அடுத்த சனிக் கிழமைக்கு இன்னும் ஐ………..ந்……….து நாட்கள் உள்ளன.
வெ.பாலமுரளி.