எதிர்பாராத ஒரு நாள் மாலை நேரத்தில், திருச்சி பால பாரதி ஐயாவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு.
“வரும் செவ்வாய் கிழமை (ஆகஸ்ட் 24, 2021), பாறை ஓவியங்களைப் பார்க்க சிறுமலை போவோமா பாலா ? “ என்றார். எனக்கு, “கண்ணா லட்டு திங்க ஆசையா? “ என்று எக்கோ அடித்து இரண்டு முறை கேட்டது.
சிறுமலை பாறை ஓவியங்களைப் பார்க்க வேண்டுமென்பது என் நீண்ட நாளைய கனவு. அதைப் பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பே முதல் லட்டு.
இரண்டாவது லட்டு, “ பாறை ஓவியங்களின் “பிதாமகர்” உயர்திரு பால பாரதி” யுடன் செல்லப்போவது ( “அப்பர்” போல “ மகர்” ஹிஹிஹி).
அதிகாலை 6.30 மணிக்கெல்லாம் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் சந்தித்து, அங்கேயே காலை உணவை முடித்துக் கொண்டு, 7 அல்லது 7.30 மணிக்கெல்லாம் மலை ஏறி விட வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம்.
பாலபாரதி சாரும் முதல் முறையாக சிறுமலை வருவதால், எங்களுக்கு வழிகாட்ட அவருடைய நண்பர் ஒருவரையும் கூப்பிட்டிருந்தார். எங்களைத் தவிர கோயம்புத்தூரிலிருந்து குமாரவேல், கார்த்திக் என்று இரண்டு இளைஞர்களும் எங்களுடன் சேர்ந்து கொள்ள பைக்கிலேயே கோயம்புத்தூரிலிருந்து வந்திருந்தனர்.
சொன்ன நேரத்தில் அனைவரும் கூடி திண்டுக்கல்லில் காலை உணவை முடித்துக் கொண்டு, “ இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்று கிளம்பி விட்டோம்.
எங்களுக்கு வழி காட்ட வந்த நண்பர் வசந்த் அவர்கள் மிகவும் இனிமையான நபர். மலையில் ஏறிக் கொண்டிருக்கும்போது அடிக்கடி தன் நண்பர் ஒருவருடன் ஃபோனில் பேசிக் கொண்டேயிருந்தார். அவர் குரலில் ஒருவித பதட்டம் தென்பட என்ன விஷயம் என்று கேட்டோம்.
“பாறை ஓவியங்கள் இருக்குமிடத்திற்கு தானும் போய் நிறைய வருடங்கள் ஆகிவிட்டன. எனக்கும் பாதை மறந்து விட்டதால் , அங்கு அழைத்துச் செல்ல என் நண்பர் ஒருவரைக் கேட்டிருந்தேன். அவர் வருவதற்கு சிறிது தாமதமாகும் போல் தெரிகிறது. ஆனால், நாம் மலைக்கு மேல் போவதற்குள் அவர் வந்து நம்முடன் இணைந்து விடுவார்” என்று கூற நாங்கள் சமாதானம் ஆகி விட்டோம்.
சிறுமலை ஒன்றும் பெரிய மலையில்லை. ஒரு அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரத்திலேயே மலைக்கு மேலே உள்ள சிறுமலை புதூர் என்ற கிராமத்தை சென்றடைந்து விட்டோம்.
Mr வழிகாட்டி நண்பர் வரும்வரை வடை காப்பி சாப்பிட்டுக் கொண்டும், க்ரூப் ஃபோட்டோக்கள் எடுத்துக் கொண்டும்,அங்கிருந்த
மலைக் கோயிலில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டும், அங்குள்ள ஒரு வ்யூ பாயிண்டில் ஏறி வீடியோ எடுத்துக் கொண்டும் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தோம். அவ்வப்போது வாட்சப்பும், யூ ட்யூப் வேறு ( பேட்டரி போய்க் கொண்டிருப்பதை உணராமல்).
இதற்கிடையில் அந்த ஊர் மக்களிடம் பேச்சுக் கொடுத்து நாங்கள் செல்லும் இடத்தைப் பற்றி ஓரளவிற்கு தெரிந்து கொண்டோம்.
பாறை ஓவியங்கள் இருக்கும் இடத்திற்குப் பெயர் மீன் கொத்திப் பாறையாம். வழித்தடங்கள் ஏதும் முறையாக இல்லாமல் கொஞ்சம் ஆபத்தாக இருக்கும், நாங்கள் யாரும் அங்கு செல்ல மாட்டோம் என்று ஜெண்டிலாக ஒதுங்கிக் கொண்டார்கள்.
சிறுமலைப் புதூரில் நமது காரை ரோட்டோரத்தில் பார்க் பண்ணி விட்டு, அங்குள்ள ஜீப்பில் ஏறி ஒரு ஏழு அல்லது எட்டு கிலோமீட்டர் ஒரு கரடு முரடான பாதையில் சென்றால் அங்கு ஒரு காட்டு சிவன் கோயில் இருக்கிறது. அந்த இடத்துடன் சமதளம் முடிவடைந்து பள்ளத்தாக்கு ஆரம்பிக்கிறது. நம்மை அழைத்துச் சென்ற ஜீப் அங்கேயே நின்று விடுமாம். நீங்கள் அங்கிருந்து மலையில் இறங்கி மீன்கொத்திப் பாறை சென்று திரும்பும்வரை ஜீப் உங்களுக்காகக் காத்திருக்கும் என்றனர். அந்த எட்டு கிலோமீட்டர் பயணத்திற்கும், காத்திருத்தலுக்கும் கட்டணம் 6,000 ரூபாய்.
எங்கள் பயணத்தின் கடுமையை லேசாக உணர ஆரம்பித்தோம்.
இதற்கிடையில் எங்கள் வழிகாட்டி நண்பர் வருகிறாற்போல் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கதை சொன்னார். நேரமோ போய்க் கொண்டிருந்தது. கடைசியாகப் பேசும்போது, எங்கள் அனைவருக்கும் லஞ்ச் வாங்கிக் கொண்டிருப்பதாகவும், விரைவில் வந்து விடுவதாகவும் கூறினார். அப்போது மணி மதியம் 12.
பொதுவாக மலைப் பயணங்களில், அதிகாலையில் கிளம்பி மாலை 4 மணிக்குள் ஊருக்குள் வந்துவிட வேண்டும் என்பது “பால” பாடம் என்பதை இரண்டு “பாலா”க்களும் ( நானும், பாலபாரதி சாரும் ) பேசிக் கொண்டோம்.
ஒன்றரை மணியிருக்கும். எங்கள் வழிகாட்டி நண்பர், தன்னுடைய உறவினர் ஒருவர் விபத்தில் அடிப்பட்டிருப்பதால் காலையிலிருந்து திண்டுக்கல் மருத்துவமனையில்தான் இருப்பதாகவும், எங்கள் அனைவரையும் மலைமேல் உள்ள சிறுமலைப் புதூரில் தங்கச் சொல்லி விட்டார். மறுநாள் காலை வந்து மீன் கொத்திப் பாறைக்கு அழைத்துச் செல்கிறேன் என்று அசால்ட்டாகக் கூறி விட்டார் (எங்கள் அனைவருக்கும் லஞ்ச் வாங்கிக் கொண்டிருப்பதாகச் சொன்னதெல்லாம் பொய்யா கோப்ப்பால் ? )
எங்கள் அனைவருக்கும் பசி, கோபம், குழப்பம் எல்லாம் கலந்து கட்டி ஒரு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம். எனக்கு இவ்வளவு லேட்டாகப் பயணத்தைத் தொடர்வதில் அவ்வளவாக விருப்பமில்லை.
முதலில் சுதாரித்தது பாலபாரதி சார்தான். இவ்வளவு தூரம் வந்து விட்டோம். வாங்க சார் ஏதாவது செய்து இடத்தைக் கண்டுபிடித்து போய் வந்து விடலாம் என்றார். உடனே ஒரு ஜீப்பை வாடகைக்குப் பிடித்து அந்தக் காட்டுக் கோயில் வரை சென்று விட்டோம். போகும் வழியில் சுடச் சுட கொஞ்சம் பரோட்டாக்கள் வாங்கிக் கொண்டோம் (இதுவும் பாலபாரதி சார் கைங்கர்யம்தான். அதுவும் வாங்கியிராவிடில் எங்கள் டப்பா பிரபுதேவாவிற்கு சவால் விட்டிருக்கும். அதாங்க டப்பா டான்ஸ் ஆடியிருக்கும்).
வழியில் பேச்சுக் கொடுத்த யாரும் மீன் கொத்திப் பாறைக்கு வர முடியாது என்று திட்ட வட்டமாகச் சொல்லி விட்டனர். ஜீப்பை நிறுத்தி விட்டு அங்குள்ள ஒரு காட்டுவாசியிடம் பேச அவர் எங்களைக் கூட்டிச் செல்ல ஒத்துக் கொண்டார் (அவர் பெயர் முருகன் என்று நினைக்கிறேன்).
மணி மிகச் சரியாக மதியம் 2.30. பள்ளத்தாக்கிற்குள் இறங்க ஆரம்பித்தோம். பேராண்மை படத்தில் வருவது போல் நல்ல அடர்ந்த காடு. திடீரென ஒரு ஒத்தையடிப் பாதை தோன்றும். ஒரு நூறடித் தொலைவில் வந்த சுவடே தெரியாமல் மறைந்து விடும். முருகனைக் கும்பிட்டுக் கொண்டு, கண்ணை மூடி முருகன் பின்னாலேயே சென்று கொண்டிருந்தோம்.
ஒரு சில இடங்களில் பள்ளத்தாக்கின் விளிம்பில் செல்ல வேண்டியிருந்தது. படங்களில் வருவது போல சில இடங்களில் கற்கள் பிரண்டு பள்ளத்தாக்கில் உருண்டு போய் எங்கோ மோதி ஒரு சத்தத்தையும், எங்கள் மனதில் சரியான பீதியையும் கிளப்பி விட்டன.
எங்கள் புது வழிகாட்டி “கந்தன்” அந்தக் காட்டிற்குள்தான் கடந்த 25 வருடங்களாக வசித்து வருகிறாராம். அந்தக் காட்டுக்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு மூன்று வீடுகள் வேறு இருக்கின்றன. அதில் ஒன்றுதான் நம்ம “ஞான பண்டிதனின்” வீடாம். ஒவ்வொரு வீட்டிலும் மூன்று, நான்கு நாய்கள் வளர்க்கின்றனர். இரவில் காட்டு விலங்குகளிடமிருந்து அவைதான் காக்குமாம்.
“வேலாயுதனுடன்” அவர் பையன் ஒரு பொடியனும் வந்தான். 10 வயது இருக்கும். அப்பாவும் பையனும் ஏதோ ஸ்கூல் க்ரவுண்டில் ஜாக்கிங் போவது போல சர்வ அலட்சியமாக துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்தார்கள். எங்களுக்குத்தான் தாவு தீர்ந்தது.
இந்த லட்சணத்தில் இரண்டு ஓடைகள் வேறு குறுக்கிட்டன. தண்ணீருக்குள் இறங்கினால் ரத்த அட்டைகள் நமது உடம்பில் ஏறி விடும். அதனால் முடிந்த வரை பாறை பாறையாக தாவி வாருங்கள் என்றார் நமது “கடம்பன்”. சும்மா சொல்லக் கூடாது. அப்பாவும் பிள்ளையும் எங்கள் கேமராவையும், ட்ரைப் பாடையும் அவ்வப்போது வாங்கிக் கொள்வார்கள். அந்த சமயத்தில் அது பிரமாண்டமான உதவி.
நாங்கள் டார்ஜான் மாதிரி பாறைக்குப் பாறை தாவித் தாவி சென்று கொண்டிருந்தோம். இரண்டு ஓடைகளுமே நல்ல நீளம். அதை ஜாக்கிரதையாகக் கடந்து, அந்தா இந்தா என்று பாறை ஓவியங்கள் இருக்கும் இடத்தை சென்றடையும்போது மணி 5.30. சரியாக 3 மணி நேரம் ஆகியிருக்கிறது.
நாங்கள் போன உடனேயே வேக வேகமாக ஆளுக்கு இரண்டு பரோட்டாக்களை தின்று விட்டு ஓவியங்களைப் பார்க்கவும் படமெடுக்கவும் தொடங்கினோம்.
ஒரு சிறிய இடத்தில் நான்கு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு வண்ணங்களில் தீட்டப்பெற்ற வண்ண ஓவியங்கள். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தீட்டியிருக்கிறார்கள். அது பற்றி விரிவான கட்டுரை “பாறை ஓவியங்களைத் தேடி” தலைப்பில் அடுத்த வாரம்.
அடர்த்தியான காடு என்பதால் சீக்கிரமே இருட்டத் தொடங்கி விட்டது. நாங்கள் அந்த இடத்தில் ஒரு மணி நேரம் கூட செலவழித்திருக்க மாட்டோம். திரும்ப மலை ஏற வேண்டுமேயென்ற பயத்தில் ஒரு 6.30 மணி வாக்கில் அந்த இடத்தை விட்டுக் கிளம்பி விட்டோம்.
சிறுமலைப் புதூரில் காத்திருக்கும்போது நாங்கள் அனைவரும் வாட்சப், யூட்யூப் பார்த்ததன் விளைவு, எங்கள் அனைவரின் ஃபோனிலும் பேட்டரி இப்பவோ அப்பவோ “ஸ்வாஹா” ஆகி விடும் போலிருந்தது.
வழக்கம் போல் இப்போதும் ஆபத்பாந்தவான் பாலபாரதி சார்தான். அவரிடம் மட்டும் ஒரு பவர்ஃபுல் டார்ச் லைட் இருந்தது. வானம் நோக்கி அடித்தால், தெய்வங்கள், தேவர்கள் எல்லாரும் தெரிய ஆரம்பித்து விட்டனர். அவ்வளவு பவர்ஃபுல். “தெய்வமே” என்று அவரை நோக்கிக் கும்பிட்டு விட்டு மலை ஏறுதலைத் தொடர்ந்தோம்.
பொதுவாக மலைப் பிரதேசங்களில் ஏறுவதை விட இறங்குவதே கடினமாயிருக்கும். இங்கு ஏறுவது, இறங்குவது இரண்டுமே மிகவும் கேவலமாக இருந்தது. ஏறத் தொடங்கி ஒரு 10 நிமிடத்தில் நன்றாகவே இருட்டத் தொடங்கியது.
அப்போதுதாங்க அந்த சோகம் நடந்தது.
“வேலனுக்கு”ப் பின்னால் சென்று கொண்டிருந்த நண்பர் வசந்த் ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்குத் தாவும்போது வழுக்கி இரண்டு பாறைக்கும் நடுவில் விழுந்து விட்டார். வலது கால் நன்றாக பிசகி , சில நிமிடங்களுக்குள் ஆமை போல் வீங்கி விட்டது.
உங்களுக்கே தெரியும், வெளியிடங்களில் நான் மட்டும்தான் பெரிய “Daal” போல லெக்சர் எடுப்பேன் என்று. அன்றும் வசந்திடம் “இது போன்ற இடங்களில் செருப்புப் போட்டுக் கொண்டு தாவக் கூடாதுங்க வசந்த்” என்று ஒரு சின்ன பாடம் எடுத்தேன். அவருக்கு இருந்த வலியினாலா இல்லை நான் எடுத்த பாடத்தினாலா என்று தெரியவில்லை, ஏதோ ஒரு வெறுப்பில் பல்லைக் கடித்துக் கொண்டு தன்னுடையை இரண்டு செருப்பையும் பள்ளத்தில் விட்டெறிந்தார் (வேதம் புதிது படத்தில் சத்யராஜ் கன்னத்தில்யாரோ பளார் பளாரென்று அறைவார்களே. அந்தக் காட்சியெல்லாம் என் நினைவிற்கு வரவில்லை. ஹிஹிஹிஹி ).
இது நடந்து ஒரு ஐந்து நிமிடம்கூட இருக்காது. அடுத்த பாறை வந்தது. ஒரு கையில் கேமராவையும், இன்னொரு கையில் என்னுடைய இரண்டு செருப்புகளையும் எடுத்துக் கொண்டு அந்த பாறையைத் தாண்டும்போது வசந்த்தை விட ரொம்பக் கேவலமாக வழுக்கி விழுந்தேன். “ம்க்கும்” என்று ஒரு சத்தம் வந்தது. அனேகமாக அது வசந்த்தான் என்று நினைக்கிறேன்.
அப்போதும்கூட (வழக்கம்போல்) என் கேமராவைத் தூக்கிப் பிடித்துக் கொண்டுதான் விழுந்தேன் ( நாங்கல்லாம் யாரு). ஒரு பாறையில் என் பின் மண்டையும் இன்னொரு பாறையில் என் இடதுகால் முழங்காலும் அடி பட்டன. அனைவரும் பதறிப் போய் ஓடி வந்து தூக்கி விட, தலையையும், காலையும் தேய்த்து விட்டுக் கொண்டே நடக்க ஆரம்பித்தோம் – முழங்காலின் ஜவ்வு உள்ளே கிழிந்து தொங்கியதன் விபரீதம் புரியாமலேயே.
அன்று அமாவாசை இல்லாவிட்டலும்கூட , காட்டுக்குள் கருங்கும்மென்ற இருட்டு. மசை மாரா போல பறவைகளும் ஏதேதோ விலங்குகளும் விதவிதமாக சத்தம் கொடுக்க செம்ம்ம்ம த்ரில்லிங்.
ஒரு நேரத்தில் எங்கள் அனைவருக்கும் கை காலெல்லாம் வெட வெடவென்று ஆட ஆரம்பித்து விட்டன.
அதிலும், நானும் வசந்த்தும் “அடிபட்ட “ புலிகள் என்பதால் ரொம்பவே சோர்ந்து விட்டோம். அங்கு பெரிய பாறை போல் இருந்த ஒரு இடத்தில் அக்கடா என்று ஒரு 10 நிமிடங்கள் படுத்து விட்டோம் – இங்கு மலைப்பாம்பு இருக்கலாம் என்று நம்ம வழிகாட்டி “ பழனியாண்டவர்” சொல்லும் வரை.
இருக்கும் ரவுசெல்லாம் போதாது என்று அந்த நீரோடைகளும் குறுக்கிட்டன. எல்லா திசையிலும் காரிருள் சூழ்ந்திருந்ததால் ( ம்ம்க்கும்….இந்த செந்தமிழுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை), ஒரு பாறை இருப்பது தெரியாமல் ஒரே நேரத்தில் எங்களில் மூன்று பேர் தடுக்கி அந்தத் தண்ணீருக்குள் விழுந்தோம். ஓடை ஆழமெல்லாம் இல்லை. அதிகபட்சம் முழங்கால் அளவு மட்டுமே இருந்தது.
ஆனால், எங்கள் எல்லார் உடலிலும் ரத்த அட்டைகள் ஏறிவிட்டிருந்ததை நாங்கள் யாருமே உணரவில்லை.
தத்தக்கா பித்தக்கா என்று தவழ்ந்து மேலேறி மறுபடியும் ஏறத் தொடங்கினோம். எல்லோருக்கும் நா வறண்டு விட்டது.
தூரத்தில் ஒரு குடிசையும், அதில் ஒரு மெலிதாக ஒரு சிம்னி விளக்கும் தெரிந்தது. அதை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். எதிர்பார்த்தது போலவே, அங்கிருந்த நாய்கள் வெறித்தனமாக குரைக்க ஆரம்பித்தன.
ஆனால், எங்கள் வழிகாட்டி “குமரன்” தைரியமாக ஏதேதோ சத்தம் கொடுத்து அவற்றை அடக்கி வைத்தார். அந்தக் குடிசையிலிருந்த ஒரு வயதான அம்மா, எங்கள் அனைவருக்கும் தண்ணீர் தந்து உபசரித்ததோடு இருந்து காப்பியும் இரவு உணவும் சாப்பிட்டு விட்டுச் செல்லும்படி வற்புறுத்தியதை வாழ் நாளிலும் மறக்க முடியாது ( பாலபாரதி சார் இல்லாமல் நான் மட்டும் போயிருந்தால், அந்த அம்மா அன்புக்கு மயங்கி அங்கேயே சாப்பிட்டிருப்பேன். அவ்வளவு பசிங்க. ஹிஹிஹிஹி).
மலைக்கு மேலே உள்ள எங்கள் ஜீப்பை அடையும் போது எனக்குப் பாதி சீவன் போயிருந்தது. மணி இரவு 10. அந்தக் கரடு முரடு 8 கிலோமீட்டரைக் கடக்கும்போது நாங்கள் யாருமே பேசிக் கொள்ளவில்லை ( யாருக்கும் திராணி இல்லை).
எங்கள் காரை அடைந்து எங்கும் நிற்காமல் மதுரைக்கு வரும்போது இரவு மணி 12. பேய் வரும் நேரத்தில் வர்றதப் பாரு என்று முணு முணுத்துக் கொண்டே என் மனைவி கதவைத் திறந்து என்னைப் பெரிய மனது பண்ணி வீட்டிற்குள் அனுமதித்தார்.
உள்ளே சென்று காலைக் கழுவும்போதுதான் பார்த்தேன். கால்களில் மூன்று அட்டைகள். ரத்தமெல்லாம் உறைந்திருந்தது. வலியே தெரியவில்லை.
ஆனால் உடம்பெல்லாம் அடித்துப் போட்டாற்போல் அப்படி ஒரு வலி. ஆனாலும் சுகமான வலி ( அப்படித்தானே சொல்லணும். வேற வழி).
வெ.பாலமுரளி.











