முள்றியின் டைரி : 45 சைனா ஒரு பார்வை

என்னைக் கேட்டால் உலகிலேயே கொடிய வியாதி மைண்ட் செட்தான் என்பேன்.

ஒரு விஷயத்தைப் பார்க்காமலேயே அல்லது சரியாக விசாரிக்காமலேயே நாமாக ஒரு முடிவுக்கு வந்து விடுவோம். முடிவுக்கு வந்து விடுவதோடு மட்டுமல்லாமல், அதை நாலு பேரிடம் பரப்பவும் செய்து விடுவோம். அது சில சமயம் முற்றிலும் தவறான செய்தியாக இருக்கும் போது, அந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது…..?

அது போல ஒரு விஷயம்தான் சைனாவைப் பற்றிய இந்தியர்களின் பார்வை.நமது நாட்டு வியாபாரிகள் ( வியாபாரிகள் என்றவுடன் ஏதோ தெருவில் கடை போடும் கையேந்தி பவன் , காய்கறிக்கடைக் காரர்கள் என்று நினைத்து விட வேண்டாம். நான் பெரிய பிஸினஸ்மேன் களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்), அடிக்கடி சொல்லுகின்ற வாசகம் ” நமக்குப் பெரிய போட்டியாளர்கள் சீனர்கள்தான்”. நாம் எவ்வளவு பெரிய தவறான மாயையில் இருக்கின்றோம் என்பதற்கு இந்த வாசகம் ஒன்றே பெரிய அத்தாட்சி. காரணம், அவர்கள் எங்கேயோ போய் விட்டார்கள். நாம் அவர்களை விட குறைந்தது ஒரு 20 வருடமாவது பின் தங்கியிருக்கிறோம்.

அவர்கள் நம்மை ஒரு போட்டியாளர்களாகவே கருதுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரையில், இந்தியர்கள் என்றாலே, ” தரத்தில் நாட்டம் செலுத்தாமல், விலையில் மட்டுமே நாட்டம் செலுத்தும் மலிவான வாடிக்கையாளர்கள்” என்று மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். காரணம், நமது நாட்டு வியாபாரிகள், அங்கிருந்து மலிவான பொருட்களை இறக்குமதி செய்து அவர்களை அசிங்கப்படுத்துவதுடன், தங்களையும் அசிங்கப் படுத்திக் கொள்கிறார்கள்.இதில் ஜோக்குகள் வேறு, ” சீனர்களின் பொருட்களிலேயே சீனப் பெருஞ்சுவர் மட்டும்தான் ரொம்ப நாள் நிலைத்திருக்கிறது. அதனால்தான் அது உலக அதிசயம்” என்று.

சீனர்கள் நமக்கு என்ன தேவையோ, என்ன விலையில் தேவையோ அதைத் தயாரிக்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது? அங்கே ஒரு பொருளை 100 ரூபாய்க்கும் வாங்கலாம். அதே பொருளை 1000 ரூபாய்க்கும் வாங்கலாம். பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் தரத்தில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. நாம் 100 ரூபாய் பொருளை 50 ரூபாய்க்கு பேரம் பேசி வாங்கி இறக்குமதி செய்து விட்டு, அது 1000 ரூபாய் தரத்தில் இல்லை என்று குற்றம் சொல்கிறோம். அது எந்த வகையில் நியாயமாகும் ?

அவர்கள் பொதுவாக ஏமாற்றுவதில்லை. அதற்காக அவர்கள் எல்லோருமே காந்தியின் வம்சாவளிகள் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், 100 ரூபாய் பொருளை 50 ரூபாய்க்குப் பேரம் பேசும் போது , அவர்கள் லாபம் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் கண்டிப்பாக அதன் தரத்தில் கை வைத்து விடுகிறார்கள்.

நான் எங்கள் கம்பெனிக்குப் பொருட்கள் வாங்கும்போது, அந்த 100 ரூபாய் பொருளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன். நேரே 1000 ரூபாய் பொருளைத் தேர்ந்தெடுத்து விட்டு, அதில் உள்ள முக்கியமான பாகங்களை ( முக்கியமாக எலெக்ட்ரிகல் பாகங்களை ) சைனாவிலேயே செய்த இண்டர்னேஷனல் பிராண்டுகளாக ( Siemens, ABB, Schnider etc.,) உபயோகிக்கும்படி சொல்லுவேன். அதற்காக அவர்கள் கூடுதலாக 100 ரூபாய் வசூலிப்பார்கள். ஆக, 1000 ரூபாய் ஐட்டத்திற்கு 1100 ரூபாய் செலுத்துவேன். ஆனால், அந்த விலைக்கு அவர்கள் தரும் பொருள் ஐரோப்பியத் தரத்தில் இருக்கும். ஆனால் விலை, ஐரோப்பிய விலைக்கு 40 அல்லது 50% கம்மியாகவே இருக்கும். அதற்கு மேல என்னங்க வேண்டும்

. நாம் 50 ரூபாய்க்கு சீப்பாக ஒரு பொருளை வாங்கி அதை 500 ரூபாய்க்கு விற்று விட்டு அது வேலை செய்யாத பட்சத்தில் அதன் தரத்தையும் சீனர்களின் திறமையையும் குற்றம் சொல்கிறோம். நியாயம்தானா? தனி மனித ஒழுக்கம் ……அவர்கள் மலை உச்சியில் இருக்கிறார்கள். நாம் இன்னும் அடி வாரத்தில்தான் தவழ்ந்து கொண்டிருக்கிறோம். இரவு 12 , 1 மணிக்கு, ரோடே வெறிச்சோடியிருக்கும்போதும் கூட, ட்ராஃபிக் சிக்னலுக்குக் காத்திருந்து, விளக்கு பச்சைக்கு மாறிய பிறகே செல்கிறார்கள். நமக்கு இன்னும் ஏனோ பொறுமை மட்டும் வரவே மாட்டேனென்கிறது. பஸ்ஸூக்கோ, தியேட்டருக்கோ, ரயிலுக்கோ, விமானத்திற்கோ நாம் யாருமே பொறுமையாக க்யூவில் நிற்பதேயில்லை. ஏதோ, நமக்கு மட்டுமே அவசரம் என்பது போல், ஏதாவது ஒரு பொய்யான காரணத்தைச் சொல்லிக் கொண்டு, முன்னே செல்லவே முயற்சிக்கிறோம். ஆனால், சீனர்கள் எல்லா இடத்திலும் மிகவும் பொறுமையாக க்யூவில் நிற்கிறார்கள். பொறாமையாக இருக்கும்.

பொது இடத்தில் சுத்தம்…..சின்ன ஊரோ , பெரிய ஊரோ அனைத்து ரோடுகளையும் பளீரென்று வைத்திருக்கிறார்கள். எங்கேயும் பெரிதாக குப்பை கூளங்களைப் பார்க்க முடிவதில்லை. அதைப் பார்த்தாலே எரிச்சல் பற்றிக் கொண்டுதான் வருகிறது. நமக்கு இன்னும் அது எட்டாக் கனியாகவே இருக்கிறது. ஸ்வாச் பாரத் என்று யாரோ ஆரம்பித்த ஞாபகம். ஒவ்வொரு முறையும் அந்த வரி செலுத்தும்போது மட்டுமே நமக்கு அது ஞாபகத்திற்கு வருகிறது.

நமக்கு சீனர்கள் என்றாலே மலிவான பொருட்களுக்கு அடுத்து ஞாபகத்திற்கு வருவது அவர்கள் பாம்பு, தவளை, பூனை, புழு உண்பவர்கள் என்பதுதான். சீனர்களின் சாப்பாடு என்றாலே ‘உவ்வே’ என்று வாந்தி வருவது போல பாவனை செய்பவர்கள் அதிகம்.அவர்களின் சாப்பாடு பற்றி நம்மில் பலருக்குத் தெரியாத சில விஷயங்களைச் சொல்கிறேன்…தெற்கு சைனாவில் உள்ள சில மக்கள் மட்டுமே அது போன்ற உணவுகள் உண்கிறார்கள். அது மொத்த மக்கள் தொகையில் 20 சதவிகிதத்திற்கும் குறைவே. மற்ற அனைவரும் மாட்டுக் கறி, பன்றிக் கறி, கோழி, வாத்து, வான்கோழி, மீன், நண்டு, இறால், ஆட்டுக் கறி, நூடுல்ஸ், முட்டை, அரிசி மற்றும் காய்கறிகள் மட்டுமே உண்கிறார்கள் ( இவை அனைத்துமே பெரும்பாலான இந்தியர்கள் உண்பவைதான். சென்ற முறை மதுரையில் ஒரு கையேந்தி பவனில் ” இங்கு பீஃப் பிரியாணி மற்றும் (வெள்ளைப்) பன்றி சூப் கிடைக்கும்” என்று எழுதி வைத்து வியாபாரம் படு ஜோராக நடத்துவதை நான் கண்கூடாகப் பார்த்தேன்).

இன்னுமொரு ஆச்சரியமான விஷயம், அவர்களின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 10 சதவிகித மக்கள் சுத்த சைவம். நம்ம ஊரில் ரொம்பப் பேர் ” நாங்க சுத்த சைவம். ஆனால், முட்டை மட்டும் சேர்த்துக் கொள்வோம்” என்பார்களே, அது போல இல்லை. அவர்கள் ‘நிஜமாகவே’ சைவம். முட்டை கூட உண்பதில்லை. உழைப்பு…..உழைப்பில் ஜப்பானியர்களுக்கு அடுத்து சீனர்களைச் சொல்லலாம் ( ஆனால், ஜப்பானியர்களை சீனர்களுக்கு அறவே பிடிப்பதில்லை. அது பற்றி பின்னர் எங்களுடைய ” வரலாற்றைத் தேடி” யில்) .

காலை 7.30 மணிக்கு தொழிற்சாலைகளெல்லாம் தொடங்கிவிடுகின்றன. யாருமே தாமதமாக வர மாட்டார்களாம். அதேபோல் மிக மிக அத்தியாவசியம் என்றால் மட்டுமே லீவ் எடுப்பார்களாம். இதில் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை. அந்த Dedication இருப்பதால் மட்டுமே, ஆனானப்பட்ட அமெரிக்காவையே அவர்களால் கண்களில் விரல் விட்டு ஆட்ட முடிகிறது. நமக்கு ஒரே ஒரு ஆறுதலான விஷயம் , அங்கு(ம்) அரசியல்வாதிகள் கேடு கெட்டவர்கள்தானாம். ஆனால், அதேசமயம் தங்கள் நாட்டையும் நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.போச்சா ? போச்சா ? புஸ்ஸுன்னு போச்சா ?

வெ.பாலமுரளி

பி.கு: நான் சைனாவிற்கு இதுவரை பத்து அல்லது பதினைந்து முறை சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறை சென்று வந்த பிறகும் அந்த பிரமிப்பில் இருந்து மீண்டு வர குறைந்தது ஒரு வாரமாவது ஆகிறது. எனக்கு இந்த மாதிரி பிரமிப்பு கனடாவில் இருக்கும்போதோ, அமெரிக்கா சென்று வந்தபோதோ , ஐரோப்பா சென்று வந்த போதோ வந்ததில்லை.