பாகம் இரண்டில்….”…………….மறு நாள் காலை, அந்த ஹிப்போவிற்கு என்னவாயிற்று என்று பார்க்கலாம் என்று போனோம். ஆச்சரியம். அது தன்னுடைய உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு , மிகவும் லேசாக மூச்சு விட்டுக் கொண்டு இன்னும் உயிருடன்தான் இருந்தது.
சிங்கங்களும் அதே இடத்தில் காத்துக் கொண்டு அது எப்படா உயிரை விடும் என்று காத்துக் கொண்டிருந்தன. நம்பிக்கைதானே எல்லாம் ( இதை நம்ம பிரபு ஸ்டைலில் படிக்கவும்) . இன்று என்ன எழுதியிருக்கிறதோ என்று எண்ணிக் கொண்டே காரை வேறு வழியில் செலுத்தினோம்……..
இனி……
சிறிது நேரத்திலேயே, சிறுத்தை ஒன்று தன்னுடைய சிறிய குட்டியை அழைத்துக் கொண்டு பசியோடு அலைந்து கொண்டிருந்ததைப் பார்த்தோம். ஆனால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறு எந்த விலங்குகளும் கண்ணுக்குத் தென்படாதலால், அது என்னதான் செய்கிறது என்று பார்ப்போம் என்று அதைப் பின் தொடர ஆரமபித்தோம்.
கிட்டத்தட்ட ஒரு 30 நிமிடங்கள் கழித்து ஒரு காட்டெருது தன்னுடைய New Born பேபியோடு மேய்ந்து கொண்டிருந்தது. அவற்றிற்குப் பக்கத்தில் சில வரிக் குதிரைகளும் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றைப் பார்த்ததும், அந்தத் தாய் சிறுத்தைக்கு ஒரு நம்பிக்கை வந்தது. மெதுவாகப் பதுங்க ஆரம்பித்தது.
அது நெருங்கி வருவதை அந்த எருதுவும் பார்த்து விட்டது . அது கொஞ்சமும் தாமதிக்காமல் தன் குட்டியை முன்னால் ஓட விட்டு அதன் பின்னால் தானும் ஓட ஆரம்பித்தது. என்ன ஒரு அறிவு. சிறுத்தைக்கோ தன் குட்டி பசியோடு இருக்கிறதே என்ற கவலை. எருதுவிற்கோ தன் குட்டியை பலி கொடுத்து விடக் கூடாதேயென்ற கவலை. ஆக மொத்தம், அவையிரண்டுமே தங்களுடைய குட்டிகளுக்காகத்தான் ஓடின. என்ன ஒரு விசித்திரமான வாழ்க்கை.
அந்த சிறுத்தையின் வேகத்திற்கு அந்த எருதுக் குட்டியினால் ஈடு கொடுக்க முடியவில்லை. எந்த ஒரு நொடியிலும் அது பிடி பட்டு விடும் என்ற ஒரு நிலைமை.அப்போதுதான் ஆண்டி க்ளைமாக்ஸாக ஒரு விஷயம் நடந்தது. அந்தத் தாய் எருது தடாலென்று திரும்பி அந்தச் சிறுத்தையைத் துரத்த ஆரம்பித்து விட்டது. அதன் படம் கீழே உள்ளது. ஒரு நிமிடம் அந்தச் சிறுத்தைக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. போதாக்குறைக்கு அங்கிருந்த வரிக்குதிரைகளும் ஓடுவதை நிறுத்தி விட்டு மெதுவாக அந்தச் சிறுத்தையைப் பார்த்து நகர்ந்து வர ஆரம்பித்தன ( அதை நீங்கள் இந்தப் படத்தில் பார்க்கலாம்).
தான் கார்னர் பண்ணப் பட்டதை உணர்ந்த சிறுத்தை கொஞ்சம் கூட வெட்கப்படாமல், திரும்பி ஓட ஆரம்பித்தது. எனக்கு ” வாழ்க்கை ஒரு வட்டம்டா” என்ற விஜயின் வசனம்தான் ஞாபகத்திற்கு வந்தது. தனது குட்டிக்கு ஒரு ஆபத்து என்று வரும்போது, தன்னை விட வலிய சிறுத்தையையே எதிர்க்கத் துணிகிறது அந்தக் காட்டெருது. அதுதான் தாய்மையின் வலிமை.
வனங்களில் இதுபோல ஏராளமான நாடகங்கள் தினமும் சத்தமில்லாமல் அரங்கேறுகின்றன. ஆனால், மனிதன்தான் ஏதோ தனக்கு மட்டுமே நிறைய பிரச்சினைகள் இருப்பது போல் அழுது புலம்புகிறான், போராட தைரியம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறான். ஒரு நாள் கற்றுக் கொள்வான்.
நாங்கள் அடுத்து சென்ற வனத்தின் பெயர் ” தரங்கீரே”. மிகவும் பசுமையான ஒரு காடு. கொள்ளை அழகு. கென்யாவில் உள்ள அம்போசலி போல ஒரே யானைக் கூட்டம். எனக்கு யானைகளை ரொம்பப் பிடிக்கும். காரணம் அவற்றிற்கு இருக்கும் குடும்பப் பற்று. அவை குழு குழுவாகப் பிரிந்துதான் வாழ்க்கை நடத்தும். ஒரு குழுவை ஒரு முதிர்ந்த பெண் யானைதான் வழி நடத்திச் செல்லும்.
பின்னாளில், ஏதாவது ஒரு இளவட்டம் “குடும்பப் பாரத்தை” எடுக்கும்போது , முதல் ஆண் தலைவர் குடும்பத்தை விட்டு விரட்டப் படுவார். நம் மனித இனத்தைப் போல், முதியோர் இல்லம் எதுவும் இல்லாததால், அவை தனியாகவும், மூர்க்கமாகவும் அலைய ஆரம்பித்து விடும். எனவேதான், ஒத்தை யானை எப்போதும் அபாயம் என்பார்கள்.
அந்தக் குழுவில் உள்ள ஏராளமான குட்டிகளை அனைத்து யானைகளும் அரவணைத்தே செல்லும். குட்டி யானைகளில் பெரும்பாலானவை ஏழரைகள். அநியாயத்திற்கு சேட்டை செய்யும். அவற்றை அதன் அம்மாமார்கள் ரொம்ப லேசாகவும் அன்பாகவும் அதட்டி இழுத்துக் கொண்டே செல்வது ஒரு மரபுக் கவிதை. நடந்து கொண்டேயிருக்கும்போது, பல நேரங்களில் குட்டி யானைகள் ” I am so tired ” என்று வழியிலேயே படுத்து விடும். அப்போது, அந்த மொத்தக் குடும்பமும் அந்த இடத்தை விட்டு நகராது. மற்ற நேரங்களில் ” தவறான” பாதைகளில் செல்லும் குட்டிகளை, தாய் யானைகள் வலுக் கட்டாயமாக இழுத்துச் செல்லும். ஆனால், அவை நடந்து கொண்டிருக்கும்போது வழியில் டமாலென்று படுத்து உறங்கி விட்டால், அதை எந்த ஒரு யானையும் தொந்தரவு செய்யாமல், அதுவாக எழுந்திருக்கும் வரை அங்கேயே நிற்கும். இதையெல்லாம் அவற்றிற்கு யார் சொல்லித் தந்தது? ஆச்சரியம்.
அதிலும், குளம் குட்டைகளைப் பார்த்து விட்டால் போதும், குட்டீஸ்களை கண்ட்ரோல் பண்ணுவது தாய் யானைகளுக்கு ஒரு மிகப் பெரிய ப்ராஜக்ட். அப்படியே, நம் மனிதர்கள் போலவே இருக்கும். தண்ணீர்களில் இறங்கி விட்டால், குட்டிகள் சாமானியமாக வெளியில் வராது. அதிலும், இரண்டு மூன்று குட்டிகள் அந்தக் குடும்பத்தில் இருந்தால் , கேட்கவே வேண்டாம். ஒரே ரகளைதான்.
அதேபோல், ஒரு சிங்கமோ, சிறுத்தைப் புலியோ, கழுதைப் புலியோ வந்து விட்டால் , பெரிய யானைகள் தங்கள் குட்டிகளை நடுவில் ஒரு அரண் போல் அமைத்து ஒரு பெரிய பட்டளம் போல் செல்லும் நேர்த்தியை என்னவென்று சொல்வது? அதையும் மீறி சில சமயம் குட்டிகள் பலியாவது பரிதாபம். அப்போதெல்லாம், அந்தக் குழுவில் உள்ள தாய் யானைகள் அந்த இடத்தை விட்டு இரண்டு மூன்று நாட்களுக்கு நகராது. அன்ன ஆகாரம் எதுவும் இன்றி அங்கேயே நிற்கும். அவற்றின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டும். அதைப் பார்க்கும்போது, அவற்றிற்கு ஐந்தறிவு என்று யார் சொன்னது என்று தோன்றும். இவற்ரையெல்லாம் , தரங்கீரேயில் பார்க்க நேர்ந்தது….
இரண்டு இரவுகள் அங்கே ” தரங்கீரே சோப்பா ” என்னும் ஹோட்டலில் தங்கிருந்தோம் தங்கியிருந்தோம். அந்த ஹோட்டலை வர்ணிக்க தனியே ஒரு டைரி எழுத வேண்டும். அவ்வளவு அழகு. அங்கிருந்து கிளம்பும்போது மனசே இல்லை. ஏதோ நீண்ட நாள் நண்பனைப் பிரிவது போல ஒரு சோகம். என்ன செய்வது….எல்லாம் ” டப்பு” படுத்தும் பாடு.
வெ.பாலமுரளி.