பாகம் ஒன்றில்: ” ……….
நான் முன்பு ஒரு டைரியில் எழுதியிருப்பது போல, இது போன்ற நிகழ்ச்சிகள் ஒரு புகைப்படக் கலைஞனுக்கு எப்போதுமே ஒரு பெரிய சவால். அந்தக் காட்சியின் உக்கிரத்தையும், கொடூரத்தையும் உள் வாங்கிக் கொள்ளாமல் படம் எடுக்க வேண்டும். மனதைக் கல்லாக்கிக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம், உங்கள் மனைவியை பக்கத்தில் வைத்துக் கொள்ளாமலாவது இருக்க வேண்டும். இல்லையென்றால், ” உங்களுக்கு மனசு கல்லா? உங்களுக்கு ஈரமே கிடையாதா ?” என்று நீங்கள்தான் ஏதோ ப்ளான் பண்ணி அந்தச் சிங்கத்தை வைத்து அந்த எருதுவையும் அதன் குட்டியையும் கொன்றது போல் திட்டு வாங்க நேரிடும். அப்போதுதான் நீங்கள் இன்னும் திடமாக இருக்க வேண்டும், நான் இருந்ததைப் போல.
ஒரு மணி நேரம் அந்த இடத்தில் இருந்து விட்டு, பாரமான மனதுடன் அங்கிருந்து நகர்ந்தோம்…..”இனி…..அங்கிருந்து கிளம்பி ஒரு 10 நிமிடம் கூட இருக்காது. ஒரு சிங்கம், வழி தவறி அந்தக் காட்டுக்குள் நுழைந்த ஒரு பசு மாட்டைக் கொன்று , அதன் மடுவை மட்டும் குதறி ஒரு ஓட்டை போட்டு, அதற்குள் தன் தலையை நுழைத்து அதன் வயிற்றைக் கபளீகரம் செய்து கொண்டிருந்தது ( நல்ல வேளை இந்த விஷயம் நம்ம மோடிக்கும், நம்ம இந்து மத டேஷ் பக்தர்களுக்கும் தெரியாது).
அந்தப் படம் கீழே உள்ளது.திரும்பத் திரும்ப வன விலங்குகள் சொல்வது ஒன்றே ஒன்றுதான். ” எங்கள் வழி தனீஈஈஈஈ வழி . பசித்தால் வேட்டையாடி உண்போம். வம்ச விருத்திக்காகக் கூடுவோம். ஆபத்து வரும்போது, எங்களையும் எங்கள் குட்டிகளையும் பாத்துக் கொள்ள முயற்சிக்கிறோம். இதில், வலியவன் வெல்கிறான். எளியவன் தோற்கிறான். எங்கள் வழியில் குறுக்கிடாதவரை எங்களால் யாருக்கும் தொந்தரவு இல்லை. பீரியட்”. நமக்கும் இதில் ஏதோஒரு மெஸேஜ் இருப்பது போல் இருக்கிறதோ?
மறு நாள் காலை……இன்று என்னென்ன ஆச்சரியமோ என்று எண்ணிக் கொண்டே கிளம்பினோம். எங்களுக்காக ஒரு மூன்று சிறுத்தைகள் காத்துக் கொண்டிருந்தன. அவை அங்குமிங்கும் நிலை கொள்ளாமல் அலையும்போதே புரிந்தது, அவை நல்ல பசியுடனிருக்கின்றன என்று. அதில் ஒன்று குட்டி. கொஞ்சம் வளர்ந்த குட்டி. தாய்க்கு, குட்டி குட்டிதானே. அந்தப் பசியிலும் அந்தக் குட்டி தன் தாயிடம் அவ்வப்போது போய் ஈசிக் கொண்டும் கொஞ்சிக் கொண்டும் இருந்தது பார்ப்பதற்கு அவ்வளவு இதமாக இருந்தது. ஒரு மழை நாளில், முகத்தில் சாரல் தெறிக்கும்படி ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு, கையில் ஒரு மசாலா டீயைக் குடித்துக் கொண்டே, எஸ்.பி.பி. யின் வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் வரும் , பாரதியின் ” தீர்த்தக் கரையினிலே, தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே …” பாடலைக் கேட்டுப் பாருங்கள். நான் அனுபவித்த அந்த ” இதம்” புரியும். நான் இப்படித்தான். விட்டால் ” என் மனம் வானில் சிறகடித்து விடும் – வண்ணப் பறவையாக”.
சரி, விஷயத்திற்கு வருவோம். அந்தத் தாய் சிறுத்தை, ஒரு சிறிய மண் மேட்டில் ஏறி நின்று எதையோ தேட, அதன் கண்ணில் 1000 வாட்ஸ் பல்பின் வெளிச்சம். நான் என்னிடம் உள்ள zoom lens ஐ வைத்து அங்குமிங்கும் தேடிப் பார்க்க என் கண்ணில் ஒன்றும் படவில்லை. ” உங்களுக்குப் பகலிலேயே பசு மாடு தெரியாது. இருட்டுல போய் எருமை மாடைத் தேடச் சொன்னா…. ?” . Guess, who said it. Yes, you are right.
மெதுவாக அவை ஒரு திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தன. நாங்களும் தொடர்ந்தோம். ஒரு 10 நிமிடம், மிகவும் Determined ஆக நடந்தன. மிகவும் மெதுவாக நாங்களும் தொடர்ந்தோம். அப்போது எங்கள் டிரைவர்தான் முதலில் அந்தக் காட்டு முயலைப் பார்த்தது. நான் சற்றும் தாமதிக்காமல் என் மனைவியைப் பார்த்தேன். அவளுக்கு B.P. எகிற ஆரம்பித்து விட்டது. கண்ணுக்கு முன்னால் ஒரு சேஸிங் நடக்கப் போகிறது என்பது தெரிந்ததால், அதற்குத் தகுந்தாற்போல் என் கேமராவை செட் பண்ணி விட்டுக் காத்திருந்தேன்.
அந்த முயலுக்கு உள்ளுணர்வு ஏதோ சொல்லியிருக்க வேண்டும். தனது இரண்டு காதுகளையும் விடைத்துக் கொண்டு நாலாபுறமும் தனது பார்வையை ஓட விட்டது. சிறுத்தைகள் மூன்றும் லேசாகப் பதுங்கின. ஒரு புகைப்படக் கலைஞனுக்கு, இது போன்ற காட்சிகள், நல்ல நேர இடைவெளியுடன் அமைவது மிகவும் அரிது. எனக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. எந்த நேரம் வேண்டுமானாலும் அவை துரத்த ஆரம்பிக்கும்போல் இருந்தது. ஆச்சரியமாக, முயல் முந்திக் கொண்டது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வெறித்தனமான ஓட்டம். சிறுத்தைகளுக்கோ பசியால் ஒரு அசுர வேகம்.
அங்கிருந்த ஒரு பெரிய புதரை மையமாக வைத்து அவை துரத்த ஆரம்பித்தன. கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு சுற்றுக்கள் முடிந்து விட்டன. முயல், அந்த மூன்று சிறுத்தைகளுக்கும் தண்ணி காண்பித்தது. இதற்கிடையில் அது இட்ட மரண ஓலம், எங்கள் நெஞ்சைக் கிழித்தது. அது ‘கீச் கீச்’ என்று கத்திக் கொண்டே ஓட, என் மனைவி , ” அய்யோ பாவம். அது நம்மை மாதிரியே அய்யோ அய்யோன்னு கத்துதே. எருமை மாடே, ஏதாவது செய்யேன் ” என்றாள் உச்சஸ்தாயில். நான் சட்டென்று உடனே திருப்பிப் பார்த்தேன். நல்லவேளை…..அவள் என்னைச் சொல்லவில்லை.
கடைசியில் அந்தத் தாய் சிறுத்தையிடம் அந்த முயல் மாட்டிக் கொண்டது. மிகச் சரியாக அந்த முயலின் முதுகைக் கவ்விப் பிடித்தது. அப்போது வெளியில் வந்த அதன் கண்களையும், விடைத்த காதுகளையும் படம் எடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இன்னும் ஓரிரு நொடிகளில் சாகப் போகும் மரண பயம் மிகத் தெளிவாகத் தெரிந்தது அதன் கண்களில். கொடுமை. அதை வாயில் கவ்விக் கொண்டெ, அந்த மூன்று சிறுத்தைகளும் அந்தப் புதருக்குள் நுழைந்தன. சாகப் போகும் தருவாயில் அந்த முயல் கடைசியாக ஒரு கூக்குரலிட்டது. ஆம், எனக்கும் அது “அய்யோ அய்யோ” என்றுதான் கேட்டது.
புதருக்கு அந்தப் புறம் சென்று பார்த்தோம். அந்த முயல் பீஸ் பீஸாகியிருந்தது.கொஞ்ச நேரத்திற்கு எங்களுக்கு அதுதான் பேச்சாயிருந்தது. ” அந்தப் புதரைச் சுற்றி ஓடியதற்குப் பதிலாக நேரே ஓடியிருந்தால் அது பிழைத்திருக்குமோ? ” என்றாள் என் மனைவி ஒரு நப்பாசையுடன். கடைசி நேரத்தில் அதன் மன ஓட்டம் எப்படியிருந்ததோ, யாருக்குத் தெரியும்…..என்று எண்ணிக் கொண்டே, ” ஆம்” என்றேன்.
அந்தக் காட்சி எங்கள் மனதில் இருந்து அகல்வதற்குள், இன்னொரு கொடுமையைக் காண நேர்ந்தது…..ஒரு பெரிய சைஸ் நீர்யானை (ஹிப்போ) கீழே விழுந்து கிடக்க, அதனுடைய இரண்டு கண்கள் மட்டும் பிடுங்கப் பட்டு கன்னா பின்னாவென்று ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அது தன்னுடைய கடைசி கால கட்டத்தில் இருக்கிறது என்பது அது அவ்வப்போது விடும் மூச்சுக் காற்றில் இருந்து புரிந்தது.”சப்தம் வரையும் காட்சிபாம்பின் வாயினுள்தவளை “என்று அறிவுமதி ஒரு ஹைக்கூ எழுதியிருப்பார், தன்னுடைய “புல்லின் நுனியில் பனித் துளிகள்” கவிதைத் தொகுப்பில். எனக்கு அந்தக் கவிதைதான் ஞாபகத்திற்கு வந்தது.
யோசித்துப் பார்த்ததில், என்ன நடந்திருக்கும் என்று ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது. ஒரு நாலைந்து சிங்கங்கள் வந்து அட்டாக் பண்ணியிருக்க வேண்டும். இது நம்ம ரஜினிகாந்த் போல ஒரு சுழட்டு சழட்டி முரண்டு பண்ணியிருக்க வேண்டும். நேர் வழியில் போனால் நாம் ஜெயிக்க முடியாது என்று எண்ணி, நம் அரசியல்வாதிகள் போல முடிவெடுத்து ஒரு சிங்கம் ஒரு கண்ணைக் குறி வைத்து தாக்க, அது நிலை குலைந்து தடுமாறி விழ அந்த நேரம் பார்த்து அதனுடைய மற்ற கண்ணும் தாக்கப்பட்டிருக்க வேண்டும். கீழே விழுந்த பிறகும், அது அங்கே இங்கே கால்களை வீச சிங்கங்கள் பயந்து போய் ஓடி இங்கேதான் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்க வேண்டும்.
உடனே காரைக் கிளப்பிக் கொண்டு தேட ஒரு 50 மீட்டர் தூரத்திலேயே, ஒரு மூன்று சிங்கங்கள் ஒரு புதருக்கிடையில் அமர்ந்து கொண்டு அந்த நீர் யானையை உற்றுபார்த்துக் கொண்டு “Murali, you were right ” என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன.வெளிச்சம் மங்கத் தொடங்கியதால், நாங்கள் கொஞ்ச நேரம் மட்டும் காத்திருந்து பார்த்து விட்டு ஹோட்டலுக்குக் கிளம்பி விட்டோம். மறு நாள் காலை, அந்த ஹிப்போவிற்கு என்னவாயிற்று என்று பார்க்கலாம் என்று போனோம். ஆச்சரியம். அது தன்னுடைய உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு , மிகவும் லேசாக மூச்சு விட்டுக் கொண்டு இன்னும் உயிருடன்தான் இருந்தது. சிங்கங்களும் அதே இடத்தில் காத்துக் கொண்டு அது எப்படா உயிரை விடும் என்று காத்துக் கொண்டிருந்தன. நம்பிக்கைதானே எல்லாம் ( இதை நம்ம பிரபு ஸ்டைலில் படிக்கவும்) . இன்று என்ன எழுதியிருக்கிறதோ என்று எண்ணிக் கொண்டே காரை வேறு வழியில் செலுத்தினோம்.
தொடரும்……