முள்றியின் டைரி 42: வனங்களில் ஒரு தேடல் IV – பாகம் 1

ரொம்பப் பேருக்குத் தெரியாத ஒரு விஷயம், வனங்களுக்குப் பேசத் தெரியும் என்பது. அதைப் புரிந்த கொள்ள, வனங்களைப் பற்றி நிறையப் புரிதலும், நிறையப் பொறுமையும் தேவை. நமக்கு இந்த இரண்டுமே கொஞ்சம் குறைவுதான் என்பதால், வனங்களைப் புரிந்து கொள்வது நமக்கு ஒரு தேவையற்ற விஷயமாகவும், எட்டாக் கனியாகவுமேl இருந்து வருகிறது.

சாது மிரண்டால் காடு தாங்காது என்பார்கள். ஆனால், காடு மிரண்டால் ???? வேண்டாம். நாம் தாங்க மாட்டோம்.

காடுகள் பற்றியும், அவற்றிற்கு நாம் இழைக்கும் தீங்குகள் பற்றியும் டாக்டர். பி. இராமன் அவர்கள் தன்னுடைய ” அச்ச ரேகை தீர்வு ரேகையில்” மிகவும் அழகாக பதிவு செய்திருக்கிறார். நேரம் கிடைத்தால் படியுங்கள்.
O
நான் கடந்த 20 ஆண்டுகளாக காடுகளைப் படிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும் ஒரு புதிய அனுபவம் கிடைக்கிறது. ஒரு புதிய பாடம் படிகிறேன். ஆரம்பத்தில் அவற்றின் அமானுஷ்ய அமைதி பயமாக இருக்கும். அது புரிதலின்மையின் விளைவு. இப்போதெல்லாம், அதே அமைதி ஒரு நெருங்கிய நண்பனின் தோழமைபோல்தான் தெரிகிறது.

சில நேரங்களில், வேலைப் பளுவின் காரணமாக எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள நைரோபி நேஷனல் பார்க்குக்கு அடிக்கடி செல்ல முடிவதில்லை. சில வாரங்கள் கழித்துச் செல்லும்போது, அந்த வனம் என்னைப் பார்த்து ” என்ன முரளி எங்களை மறந்து விட்டாயா ? ” என்று வருத்தத்துடன் கேட்பது போலத் தோன்றும்.

என்ன சொல்வது? குற்ற உணர்ச்சியுடன் அமைதியாக உள்ளே போய் விடுவேன்.

கானகங்கள் ஒளித்து வைத்திருக்கும் அற்புதங்களையும் , கதைகளையும், வாழ்க்கைப் போராட்டங்களையும், சோகங்களையும் ஒருவன் எழுத நினைத்தால் , அவனுக்கு ஒரு ஜென்மம் பத்தாது.

இருந்தாலும் முயற்சிக்கிறேன்.


இந்த முறை ( ஃபிப்ரவரி 2017 ல்) , நாங்கள் தான்சானியா சென்றது வாழ்க்கையில் மறக்க முடியாதஒரு அனுபவம்.


கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னரே தூசி அலர்ஜியின் காரணமாக பயங்கர வறட்டு இருமல் ஆரம்பித்து விட்டது. தான்சானியாவில் இருந்த 10 நாட்களும் ஒரு பொட்டு தூங்கவில்லை. அங்கிருந்த காடுகள் அனைத்திலும் கன்னா பின்னாவென்று தூசி. அது வேறு என்னுடைய இருமலை இன்னும் அதிகமாக்கி விட்டது. எனக்கு இரண்டு முறை நிமோனியா வந்திருந்ததால், என் மனைவி ரொம்பவே பயந்து விட்டாள். அந்த அவஸ்தைக்கிடையிலும் நான் கண்ட காட்சிகள், கண்முன்னே நடந்த நிகழ்ச்சிகள் அப்பப்பா….இருமலும், தூக்கமும் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.


நாங்கள் முதலில் சென்ற பார்க்கின் பெயர் Ndutu.
Ndutu மிகவும் காய்ந்து போய் ஒரு வறண்ட வனமாக இருந்தது, ஏமாற்றத்தை அளித்தது. வனங்கள் யாரையும் ஏமாற்றாது. ஆனால், நாமாகவே ஏதேனும் ஒரு கற்பனை செய்து கொண்டு ஒரு தவறான எதிர்பார்ப்புடன் போனால், அவையென்ன செய்யும், பாவம்.


அது என்னைப் பார்த்து மௌனமாக ஒரு ஏளனப் புன்னகையை அள்ளி வீசியதின் அர்த்தம் அப்போது எனக்கு விளங்கவில்லை. ஆனால், ஒரு இரண்டு மணி நேரத்திலேயே அந்தப் புன்னகையின் அர்த்தம் தெளிவாகப் புரிந்தது.


Ndutu Safari Lodge என்னும் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம். வெள்ளையர்கள் நடத்தும் ஒரு டிப்பிக்கல் சஃபாரி ஹோட்டல். அங்கு தண்ணீர் பிரச்சினை. நிறைய மினரல்கள் கலந்த தண்ணீர்தான் குழாயில் வருகிறது. விழுவிழுவென்று விளக்கெண்ணெய்போலவே இருந்தது. அலுப்பாய் இருக்கிறது என்று குளித்தால், குளிக்காமல் இருந்தால் நன்றாயிருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. மற்றபடி நல்ல ஹோட்டல்தான்.


மதியம் சாப்பிட்டு விட்டு, ஒரு சஃபாரி கிளம்பினோம். காட்டுக்குள் போய் ஒரு அரை மணி நேரத்திலேயே அந்தக் காட்சியைக் காண நேர்ந்தது. ஒரு நாலைந்து சிங்கங்கள் , ஒரு காட்டெருதுவைக் கொன்று அதன் நாலாபுறங்களிலும் அமர்ந்து தின்று கொண்டிருந்தன. அதில் ஒரே ஒரு சிங்கம் மட்டும், அந்த எருதுவின் பின் புறத்தில் தனது இரண்டு கால்களையும் வைத்து அழுத்திப் பிடித்த படி உட்கார்ந்து கொண்டிருந்தது மிகவும் வித்தியாசமாக இருந்தது. மற்றபடி , அது அந்த எருதுவைக் கடிக்கவோ, உண்ணவோ இல்லாமல் எதற்காகவோ காத்துக் கொண்டிருந்தது.


நான் பாட்டிற்கு பட படவென்று க்ளிக்கிக் கொண்டிருந்தேன். ஒரு 15 நிமிடங்கள் போயிருக்கும். ஒரு சிங்கம் அந்த எருதுவின் பின்னங்காலை குதறி, கீழே உள்ள படத்தில் உள்ளது போல இழுக்க, எருதுவின் பின்புறம் கொஞ்சம் இளகியது. அப்போது, பின்னால் இருந்த சிங்கம் தன் வாயை எருதுவின் பின் புறத்தில் நுழைத்து வெடுக்கென்று இழுக்க, அன்றோ இல்லை மறு நாளோ பிறக்கவிருந்த அந்த எருதுவின் குட்டி டமாலென்று வெளியே வந்து விழுந்தது. அப்போதுதான் அந்த எருது, நிறை மாத கர்ப்பிணியாக இருந்ததும், விட்டிருந்தால் அன்றோ அல்லது மறு நாள் காலையோ அந்தக் குட்டியை ஈன்றிருக்கும் என்பதும் எங்களுக்குப் புரிந்தது.

ஒரு இரண்டு நாள் தாமதித்திருந்தால், அந்தக் குட்டி தப்பித்து இந்த உலகைப் பார்த்திருக்குமோ ? யார் கண்டது. அந்த நொடியில் அந்தக் குட்டி என்ன நினைத்திருக்கும்? ” அம்மா, நீ இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாமேயம்மா” என்று பதறியிருக்குமோ?


உடனே அந்த சிங்கம் அந்தக் குட்டியை கடக்கு மொடக்கென்று கடித்துத் தின்ன ஆரம்பித்தது.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் கூட, புகைப்படம் எடுப்பதை மட்டும் நிறுத்தவில்லை. என் மனைவிதான் புலம்பித் தள்ளி விட்டாள். ” அடக் கண்றாவியே, இந்தச் சனியன் ஒரு ரெண்டு நாள் கழிச்சு அத அடிச்சிருக்கக் கூடாதா. குட்டி பொழச்சிருக்குமே. இதெல்லாம் ஒரு பொழப்பு, தூ” என்று காறி உமிழ, அவளை அடக்குவதற்குள் எனக்குப் போதும் போதுமென்றாகி விட்டது.
நான் முன்பு ஒரு டைரியில் எழுதியிருப்பது போல, இது போன்ற நிகழ்ச்சிகள் ஒரு புகைப்படக் கலைஞனுக்கு எப்போதுமே ஒரு பெரிய சவால். அந்தக் காட்சியின் உக்கிரத்தையும், கொடூரத்தையும் உள் வாங்கிக் கொள்ளாமல் படம் எடுக்க வேண்டும். மனதைக் கல்லாக்கிக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம், உங்கள் மனைவியை பக்கத்தில் வைத்துக் கொள்ளாமலாவது இருக்க வேண்டும்.


இல்லையென்றால், ” உங்களுக்கு மனசு கல்லா? உங்களுக்கு ஈரமே கிடையாதா ?” என்று நீங்கள்தான் ஏதோ ப்ளான் பண்ணி அந்தச் சிங்கத்தை வைத்து அந்த எருதுவையும் அதன் குட்டியையும் கொன்றது போல் திட்டு வாங்க நேரிடும். அப்போதுதான் நீங்கள் இன்னும் திடமாக இருக்க வேண்டும், நான் இருந்ததைப் போல.


ஒரு மணி நேரம் அந்த இடத்தில் இருந்து விட்டு, பாரமான மனதுடன் அங்கிருந்து நகர்ந்தோம்.


தொடரும்……..