முள்றியின் டைரி 37 : பாலாஸ் ஜிகர்தண்டா

சமீபத்தில் என்னைச் சந்தித்த நண்பர் ஒருவர், என் அருகில் வந்து ரொம்ப ரகசிய டோனில், ” பாலா எங்கிட்ட மட்டும் சொல்லுங்க….நீங்க எழுதும் எல்லா டைரியுமே உடான்ஸ்தானே” என்றார்.
சத்தியமாக என

க்கு அவர் மீது கோபமே வரவில்லை. காரணம் எனக்கே அந்தச் சந்தேகம் உண்டு. அந்த அளவிற்கு என் வாழ்க்கையில் ஏராளமான சுவாரசியமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. நடந்து கொண்டிருக்கின்றன.


சென்ற மாதம் (செப் 2015) இந்தியா சென்றிருந்தேன். மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போய் விட்டு, நான், என் மனைவி, என் பெண் நிவி மூவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். என் மனைவி, ரொம்ப வெயிலாக இருக்கிறது, ஒரு ஜிகர்தண்டா குடித்து விட்டுப் போவோமே என்றாள். நான் ஒன்றும் ஜிகர்தண்டா ஃபேன் கிடையாது. இருந்தாலும் உள்துறை அமைச்சர் சொல்லி விட்டால் மறுப்பேது…..


கோவிலுக்கு எதிர்புறத்தில் ஒரு ஜிகர்தண்டா கடைக்குள் நுழைந்தோம். மூன்று ஜிகர்தண்டா ஆர்டர் பண்ணி விட்டுக் காத்திருந்தோம். வழக்கம் போல், என் நாவில் பல வருட காலமாக அரியாசனம் போட்டு ஜம்மென்று அமர்ந்திருக்கும் உயர்திரு ஏழரை அவர்கள் என்னை ஒரு கேள்வி கேட்க வைத்தார், “ஏங்க ஜிகர்தண்டா எதில் இருந்து பண்ணுகிறீர்கள் ?” என்று. அவருக்கு உடனே சுர்ரென்று கோபம் வந்து விட்டது. “அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. ஒரு ஆள் ரெடி மேடாக வந்து சப்ளை செய்வார். நான் வெறும் ஐஸ்க்ரீம் மட்டும் கலந்து விற்பேன்” என்றார். அவர் குரலில் இருந்த கோபமும் , எரிச்சலும் எனக்கு விளங்காத புதிராக இருந்தது.


நானும் விடுவதாக இல்லை. “நான் என்னங்க அப்படிக் கேட்டுட்டேன், எதுக்கு இவ்வளவு கோபமாக பேசுறிங்க ?” என்றேன் விடாப்பிடியாக. ” ஆமா இப்படித்தான் முதல்ல கேப்பிங்க, அப்புறம் தெரிஞ்சிக்கிட்டு எங்க கடைக்கு எதிரேயே இன்னொரு கடையைப் போட்ருவிங்க” என்றார். வழக்கம்போல் எனக்கு ஒரு நிமிஷம் என்ன ரியாக்ஷன் கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் பக் பக்கென்று முழித்துக் கொண்டிருக்க, என் மனைவியும், மகளும் உடனே புரிந்து கொண்டு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். ” ஆமாப்பா…..உங்களைப் பார்த்தால் ஒரு ஜாடையில் அப்படித்தான் இருக்கு ” என்றாள் நிவி.


நான் உடனே சூடாக “ஏங்க என்னைப் பார்த்தா ஜிகர்தண்டா விற்பவன் போலவா இருக்கு?” என்றேன். அவர் ஒரு நொடி கூட யோசிக்காமல் “ஆமாங்க” என்றார். என் மனைவிக்கு ‘வெறும் வாய்க்கு அவல் தின்றது போலாகி’ விட்டது. “நான் அப்பவே சொன்னேன். கேஷுவலாக இருக்கிறேன் பேர்வழி என்று கேக்கரே பிக்கரே என்று ட்ரெஸ் பண்னாதீர்கள் என்று. கேட்டாத்தானே” என்றாள் சிரிப்பை அடக்க முடியாமல்.


ஆபத்பாந்தவனாக அந்தக் கடையின் ஓனர் அங்கு வந்து சேர்ந்தார். நானும், அந்தக் கடையில் வேலை செய்பவரும் , ‘அக்னி நட்சத்திரம்’ பிரபு, கார்த்திக் போல முறைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, ” என்ன சார் பிரச்சினை?” என்றார். “ஜிகர்தண்டா எப்படி செய்யுறதுன்னு கேக்குறார் சார்” என்றார், நான் என்னவோ ” நயன்தாராவோட புது பாய் ஃ ப்ரெண்டு யாரு ” என்பது போல ஏதோ ஒரு ஏடா கூடமான விஷயத்தைக் கேட்டு விட்டதைப் போல.
” கேட்டா சொல்ல வேண்டியதுதானய்யா . அதுக்கு ஏன்யா இவ்வளவு கோபப் படுற?” என்றார் சமாதானப் படுத்தும் முயற்சியில். சொல்லி விட்டு அது எப்படி செய்வது என்னும் செய்முறையையும் விளக்கினார். நான் இருந்த டென்ஷனில், அவர் சொன்னது ஒன்றுமே மேல் மாடியில் ஏறவில்லை (ம்க்கும் ….இல்லாட்டியும்…. ஏறிட்டுத்தான் மறு வேலை பார்க்கும்………)


எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே மாட்டேங்குதுங்க . என்னைப் பார்த்து நீ பரோட்டா மாஸ்டரான்றாய்ங்கெ, இல்லை பான் பராக் விக்கிறவனான்றாய்ங்க்கெ , இல்லாட்டி ஜிகர்தண்டா கடை வச்சிருக்கியான்றாய்ங்கெ, ஆனா ஒரு பய புள்ள கூட என்னைப் பார்த்து நீ என்ஜினியரான்னோ Wild life Photographer ஆன்னோ கேக்க மாட்டேங்குதே .
அதுக்காக நான் என்ன Mini Drafter ருடனோ, இல்லாட்டி கேமராவுடனோவா எப்பப் பார்த்தாலும் சுத்த முடியும் ?


ச்சே என்ன பொழப்போ ……

வெ.பாலமுரளி.