உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீட்டில் தீ விபத்து நடந்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா ? இல்லை என்றால், இனிமேலும் அந்த அனுபவம் உங்களுக்குக் கிடைக்க வேண்டாம் என்று, உங்களுடன் சேர்ந்து நானும் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். அது ஒரு கொடூரமான அனுபவம். அதிலும், அந்த விபத்தினை நீங்கள் புகைப்படம் எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அது அதிலினும் கொடூரமான விஷயம். அந்தக் கொடுமையான அனுபவம் எனக்கு 2011 – இல் கிடைத்தது.
நக்குரு என்னும் ஒரு சின்ன ஊர் , நைரோபியில் இருந்து 160 கி.மீ. தூரத்தில் உள்ளது. காரில் 2 1/2 மணி நேரத்தில் போய் விடலாம். அங்கு ஒரு நேஷனல் பார்க் உள்ளது. அதன் நடுவில், அழகாக சின்ன ஏரி ஒன்று இருக்கும். இந்த பார்க் தொடங்கும் போது இது வெறும் பறவைகள் சரணாலயமாக மட்டுமே இருந்திருக்கிறது . ஆனால், இன்று, யானையைத் தவிர்த்து கிட்டத்தட்ட மற்ற அனைத்து விலங்குகளும் & ஏராளமான பறவைகளும் இங்கு இருக்கின்றன. அம்போஸலிக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த பார்க் இதுதான். இதற்கு அடுத்துத்தான் மசை மாரா கூட.
2011 – ஃபிப்ரவரியில், இந்த ஊருக்கு ஒரு பிஸினஸ் விஷயமாக சென்றிருந்தேன். இது போல, பிஸினஸ் விஷயமாக எந்த ஒரு ஊருக்குச் சென்றாலும், கையில் கேமராவும் எடுத்துக் கொள்வது என்னுடைய வழக்கம். பின்னே….க்ளையண்ட்டோட ஃ போட்டோ எடுத்துக் கொள்ளணும்ல ( ஹி…ஹி…ஹி…).
கஸ்டமரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று ஒரு புகை மூட்டம் அவர் அலுவலகத்தைச் சூழ ஆரம்பித்தது. நாங்கள் பதறி அடித்துக் கொண்டு வெளியே வந்து பார்த்தால், அவர் அலுவலகம் மட்டுமல்ல, அந்த ஊரே புகை மூட்டத்தால் சூழப்பட்டிருப்பது தெரிந்தது . நக்குரு நேஷனில் பார்க்கில் , காட்டுத்தீ பரவிக் கொண்டிருக்கும் விஷயம், அந்தக் காட்டுத்தீயை விட வேகமாகப் பரவி எங்களை வந்தடைந்தது. மீட்டிங்கை உடனே முடித்துக் கொண்டு பார்க்கிற்குப் பறந்தேன் ( நம்ம கஸ்டமர்தானே…..எங்க போயிரப் போறாரு ….).
நான், ஒரு 5 நிமிடத்திற்குள் அங்கு போய் விட்டேன். வழக்கம் போல் இயற்கை சதி செய்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக, பார்க்கை உடனே மூடி விட்டார்கள். இவ்வளவுக்கும், அந்த பார்க்கிற்குள்ளே, இரண்டு மூன்று ஹோட்டல்கள் வேறு உண்டு. நான் கொஞ்சம் கூட யோசிக்காமல், நான் ஒரு ப்ரெஸ் ஃபோட்டோகிராஃபர் என்றேன். எனக்குப் பொய் சொல்லி பழக்கம் இல்லாதலால் ( ஹி…ஹி…ஹி…) உடனே மாட்டிக் கொண்டேன். எங்கே I.D. யைக் காட்டு என்றார்கள். அப்போது என்னிடம் வெள்ளை நிறத்தில் ஒரு டப்பா டயோட்டா கார் இருந்தது. நான், சும்மாகாச்சும் கார் முழுவதும் தேடோ தேடு என்று தேடி விட்டு, “ஆஹா …இப்பத்தான் ஞாபகம் வருது. என்னோட I.D. யை என்னோட Land Rover இல் ( ம்க்கும்..) வைத்து விட்டு அவசரத்தில், இந்தச் சின்ன காரை எடுத்து வந்து விட்டேன்” என்றேன். தேடும்போது, இயல்பாக பண்ணுவது போல, என்னுடைய கேமரா, பெரிய லென்ஸ் மற்றும் ட்ரைப்பாடை அவர்கள் கண்ணில் எதேச்சையாக படும்படி காண்பித்தேன் ( அதுதான் நமக்கு இயல்பாக வருமே …).
அவன் என்ன நினைத்தானோ, சரி போ, என்று என்னை உள்ளே விட்டு விட்டான். உள்ளே போனால், ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டேன்.எங்கு பார்த்தாலும் காட்டுத்தனமான தீ. அங்கு ஏராளமாக White Pelicans எனப்படும் அழகான ஒரு பறவையினம், தீக்குள் மாட்டிக் கொண்டு பரிதவித்தது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. அவை அனைத்தும், பார்க்கின் நடுப்புறத்தில் ஒன்று கூட ஆரம்பித்து விட்டன. என்ன நடக்கிறது என்று புரியாமல் ஒரு குழப்பமான சூழ்நிலை அந்தப் பறவைகளுக்கிடையில் நிலவியது. “பறந்து விடுவோமா” என்று ஒரு பறவை கேட்பது போலவும், ” பறப்பதா ? பறந்து? எங்கே போவது? ” என்று ‘தண்ணீர் தேசத்தில்’ நம் வைர முத்து கேட்பது போல ஒரு பறவை பதில் கேள்வி கேட்பது போலவும்,” வேண்டாம். பொறுப்போம்.இந்த மனிதர்கள் ஏதாவது செய்து , இந்தத் தீயை அணைத்து விடுவார்கள்” என்று ஒரு பறவை நம்பிக்கையுடன் மற்ற பறவைகளுக்கு ஆறுதல் சொல்லுவது போலவும் எனக்குத் தோன்றியது ( இன்னுமா இவெய்ங்கெ நம்மளை நம்புறாய்ங்கெ…. ).
பறவைகளாவது பரவாயில்லை. ஒரு நிலையில் அவைகளால் பறந்து விட முடியும். ஆனால், அங்கு காண்டாமிருகத்தின் பாடுதான் இன்னும் பரிதாபமாக இருந்தது. அவை பாட்டுக்கு ஸ்லோ மோஷனில் வளைய வந்து கொண்டிருந்தன.
நான் என்னுடைய கையாலாகாதனத்தை நொந்து கொண்டே, சுற்றி சுற்றி வந்து அவைகள் அனைத்தையும் படம் எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால், நான் உள்ளே போய் சிறிது நேரத்திலேயே, KWS ( Kenya Wildlife Service ) மக்களும், அருகில் இருந்த கென்யா ஆர்மி மக்களும், முழு வேகத்தில் உள்ளே நுழைந்து தீயை அணைக்க ஆரம்பித்து விட்டார்கள். உள்ளே நுழையும்போது வெள்ளையாக இருந்த கார், வெளியில் வரும்போது கன்னங்கரேல் என்று கரிய நிறத்தில் இருந்தது. அவ்வளவு பெரிய காட்டில் நடந்த தீ விபத்து , அதில் மாட்டிக் கொண்ட பறவை மற்றும் விலங்கினங்கள், அதை அணைக்கப் போராடிய கரிய நிறத்தில் இருந்த வெள்ளை உள்ள மக்கள்….. என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது.
அதேபோல் இன்னொரு மறக்க முடியாத சம்பவம் இதே நக்குரு நேஷனல் பார்க்கில் நடந்தது. ஒரு இரண்டு வருடத்திற்கு முன்னால், புகைப்படம் எடுக்க அங்கு சென்றிருந்தேன். தற்செயலாக, தண்ணீருக்குள் ஒரு பெலிக்கன் பறவையைப் பார்த்தேன். அது மீன் கொத்திப் பறவையைபோல் அவ்வப்போது தலையை தண்ணீருக்குள் முக்கி எதையோ எடுத்து, நம்ம ரஜினி ஸ்டைலில் தூக்கிப் போட்டு காட்ச் பிடித்து முழுங்கிக் கொண்டிருந்தது. அது ஏதோவொரு விளையாட்டுப் போலவே எனக்குத் தோன்றியதால், அந்தப் பறவையை கொஞ்ச நேரம் ரசிக்கலாம் என்று காரைப் பார்க் பண்ணி விட்டு, அதன் ஒவ்வொரு நடவடிக்கையையும் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன்.
அதை நான் தூரத்தில் இருந்து கண்காணித்ததால், அது என்ன சாப்பிடுகிறது என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை. நான், நேரமாகி விட்டது என்று கிளம்ப எத்தனிக்கையில், அது பச்சை கலரில் ஏதோவொன்றை ஸ்டைலாக தூக்கிப் போட்டு விழுங்கிக் கொண்டிருந்தது. அதையும் ஒரு ஷாட் எடுத்து விட்டு கிளம்பி விட்டேன். வீட்டுக்கு வந்து எல்லா ஃபோட்டோக்களையும் கம்ப்யூட்டரில் அப்லோட் பண்ணி விட்டுத்தான் கவனித்தேன், அது கடைசியில் முழுங்கியது உடைந்து போன ஒரு பியர் பாட்டில் என்று. எனக்கு மனசே சரியில்லை. அது, அந்த பாட்டிலை முழுங்கி ஓரிரு மணி நேரத்திலேயே தன் உயிரை விட்டிருக்கும் என்று நினைக்கும்போது எனக்குத் தூக்கமே வரவில்லை. என்னதான், இந்த மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களும் ஒரு நாள் மறையத்தான் போகிறது என்றாலும் கூட, அவை நமது அஜாக்கிரதையால் சாகும்போது மனதை என்னவோ செய்கிறது. நமது குழந்தைகள் மண்ணில் கிடக்கும் பொருட்களை வாயில் போட்டுக் கொள்ளும்போது நாம் என்ன பதறு பதறுகிறோம் ? அது போலத்தானே மற்ற இனங்களும். நமக்கு ஏனோ அது புரிவதில்லை.
சென்ற வருடம், ஒரு நாள் நைரோபி நேஷனல் பார்க் சென்றிருந்தேன். உள்ளே சுற்றிக் கொண்டிரும்போது, எந்த ஒரு இடத்தில் ஒன்று அல்லது அதிகமான கார்கள் ஒரே இடத்தில் நிறைய நேரம் நிற்கின்றதோ , அந்த இடத்தில் ஏதோ ஒரு ஆக்ஷன் இருக்கிறது என்று அர்த்தம். தூரத்தில் இருந்தே அதைக் கவனித்து விட்டு, குத்து மதிப்பாக அந்தத் திசையை நோக்கி செலுத்துவது வழக்கம். அப்படித்தான், அந்த கறுப்பு நிற லெக்ஸஸைப் பார்த்து விட்டு , அதை நோக்கி விரைவாக சென்றேன். ஓரளவு நெருங்கியவுடன், அதில் ஒரு இந்தியக் குடும்பம் இருப்பது தெரிந்தது. 8 அல்லது 10 வயதில் இரண்டு குழந்தைகள், கணவன் மற்றும் மனைவி. அனைவரும், அருகில் புதர் ஒன்றில் (பயந்து போய் ) ஒதுங்கியிருந்த ஒரு சிங்கத்தை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அதிலும் அந்தக் கணவன் கேரக்டர், காரின் ஜன்னலை முழுவதுமாகத் திறந்து வைத்துக் கொண்டு, சத்தம் போட்டு அந்தச் சிங்கத்தை ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கு அழைத்துக் கொண்டிருந்தான். அத்தோடு நில்லாமல், அந்தச் சிங்கத்தின் தாய் மற்றும் சகோதரிகளின் நடத்தையைப் பற்றி படு கேவலமாக ஹிந்தியிலும், குஜராத்தியிலும் உரக்கத் திட்டிக் கொண்டிருந்தான். இதில், வருத்தமான ஒரு விஷயம் என்னவென்றால், அவன் திட்டத் திட்ட, அவன் குழந்தைகளும், அவன் மனைவியும் அதை என்ஜாய் பண்ணி கை கொட்டி சிரித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு பயங்கர கோபமாகவும் வருத்தமாகவும் இருந்தது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு, முடியாமல், என்னுடைய காரை அவன் காருக்கு அருகில் கொண்டு சென்று, “ நண்பா, நீ செய்வது உனக்கே நன்றாகயிருக்கிறதா? நாம் இருப்பது, அவைகளின் இடமில்லையா ? இப்படி சத்தம் போட்டு அவைகளைத் தொந்தரவு செய்வது , நியாயமா ?” என்றேன் அமைதியான டோனில். நான் பொதுவாக இப்படியெல்லாம் அமைதியாகப் பேசிக்கொண்டிருக்கும் கேரக்டர் இல்லை. இருந்தாலும், நாம் இருப்பது காடு. இங்கு எதற்கு வம்பு என்று அமைதியாக ஹேண்டில் பண்ண முயற்சித்தேன்.
அதைத் தவறாகப் புரிந்து கொண்ட அவன், எனக்கு எல்லாம் தெரியும். போய் , உன்னுடைய சொந்த சுய தொழிலைக் கவனி என்று சொல்லி விட்டு, தன்னுடைய வலது கையைத் தூக்கி தன்னுடைய அழகான நடு விரலைக் காண்பித்தான். எனக்கு வந்த கோபத்திற்கு, வந்தது வரட்டும், என்று காரை விட்டுக் கீழே இறங்கி அவனைக் கீழே தள்ளி விட்டு விடுவோமா என்று கூட யோசித்தேன். வேண்டாம், சிங்கத்திற்கு முன்னால், சண்டை போட்டுக் கொண்டால், அவை நம்மைப் பற்றி கேவலமாக நினைத்து விடும் என்று அந்த யோசனையைப் புறம் தள்ளினேன் ( ம்க்கும்….இனி கேவலமாக நினைப்பதற்கு என்ன மிச்சம் இருக்கு ?). ஒரு நிமிடம் யோசித்து விட்டு, நடத்துடா மகனே என்று நினைத்துக் கொண்டு, என்னுடைய வலது கையைத் தூக்கி, என்னிடம் இருக்கும் அழகான கட்டை விரலைத் தூக்கிக் காண்பித்து விட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.
அதே போல் இன்னொரு சம்பவமும் சமீபத்தில் நடந்தது. இதுவும் நைரோபி நேஷனல் பார்க்கில்தான். ஒரு வெள்ளைக்கார இளைஞன் தன்னுடைய ஆப்பிரிக்கத் தோழியுடன், காரை விட்டு வெளியில் வந்து, அவள் தோளில் கையைப் போட்டுக் கொண்டு ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தான். நான் மெதுவாக காரில் சென்று, “நண்பா, ஃபோனை ம்யூட்டில் வைத்து எடு. பக்கத்துப் புதரில் ஒரு சிங்கம் தன்னுடைய ஃபேமிலியுடன் தூங்கிக் கொண்டிருக்கிறது. பாவம், முழித்துக் கொள்ளப் போகிறது” என்றேன். அவ்வளவுதான். நம்ம விட்டலாச்சாரியார் படத்தில் வருவது போல “ டஷ்ஷ்ஷ்” என்று ஒரு நொடியில் காணாமல் போய் விட்டார்கள். அ……..து……..
இன்னொரு சுவாரஸ்யமான அனுபவம், சென்ற (2014 ) ஆகஸ்டில் மசை மாராவில் கிடைத்தது. நாங்கள் அங்கு போய்ச் சேரும்போது மதியம் 1.30 மணியாகி விட்டது. சாப்பிட்டு, ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு, Evening Safari கிளம்பினோம். எங்களுடைய அதிர்ஷ்டம், போய் கொஞ்ச நேரத்திலேயே சிறுத்தை (Cheetah ) ஒன்று நல்ல லைட்டிங்கில் நடந்து வந்து கொண்டிருந்தது. தட தடவென்று நானும் என் நண்பர்களும் அதை படம் எடுக்க ஆரம்பித்தோம். எங்கள் வண்டியில் மொத்தம் நான்கே பேர்தான் இருந்தோம். அதில் நான் மட்டும் கடைசி வரிசை முழுவதையும் ஆக்கிரமித்திருந்தேன் – என்னிடம் நிறைய Accessories இருந்ததால். இந்த சிறுத்தை நமது காரில் வந்து ஏறப் போகிறது என்று எனக்கு ஏதோ ஒரு பட்சி சொன்னதால் , என்னுடைய 10- 22 MM Super Wide Angle Lens ஐ எடுத்து கேமராவில் ஃபிட் பண்ணி விட்டுத் தயாராக இருந்தேன். Bingo. !!!! அது ஒரே தாவலில் எங்கள் வண்டியில் தாவி ஏறி உட்கார்ந்தது (அடிக்கடி காடுகளுக்குச் சென்றால், இதுபோல Raghavan Instinct மிகச் சரியாக வேலை செய்யும் ) . எங்களில் யாரும் எதிர்பாராதவண்ணம், அது வண்டியின் பின்புறம் ஏறி தன் இரையைத் தேட ஆரம்பித்து விட்டது.
நான் வண்டியின் பின்புறம் நின்றிருந்ததால், எனக்கும் அந்தச் சிறுத்தைக்கும் இடைவெளி 2 அடிக்கும் குறைவாகவே இருந்தது. கொஞ்சம் கூட யோசிக்காமல் Burst Mode – இல் போட்டு பட படவென்று க்ளிக்கித் தள்ளி விட்டேன். பற்றாக்குறைக்கு கொஞ்சம் முன்னால் சென்று காரில் கையை ஊன்றி சில ஷாட்டுக்களூம் எடுத்தேன் ( Camera Shake ஐ Avoid பண்ணுவதற்கு ). அதுவும் ஒரு ஐந்து நிமிடம் எங்களுக்கு போஸ் கொடுத்து விட்டு பக்கத்தில் இருந்த இன்னொரு காருக்குத் தாவி விட்டது. அங்கிருந்த ஒரு ஜோடியை அந்தச் சிறுத்தையுடன் சேர்த்து சில படங்கள் எடுத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம். வாழ்க்கையில் எனக்கு அன்று போல உச்சத்தில் ஹார்ட் பீட் அடித்ததேயில்லை.
அடுத்த நாள், எங்களை அந்தச் சிறுத்தையுடன் சேர்த்து யாரேனும் ஒரு க்ரூப் ஃ போட்டோ எடுத்திருப்பார்களா என்று தேடி அலைந்தது மற்றுமொரு கிளைக் கதை.
இதுபோல இன்னும் எத்தனை எத்தனையோ அனுபவங்கள். அவை அனைத்தையும் தொகுத்து, ஒரு புத்தகம் மூலமாக உங்களை விரைவில் சந்திக்கிறேன் நண்பர்களே.
வெ.பாலமுரளி



