நான் சென்ற ( 2014) டிசம்பரில் மதுரை சென்றிருந்தேன். வழக்கம்போல் பருத்திப் பால் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.
நீங்கள் பருத்திப்பால் விற்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா ? ஒரு பெரிய எவர்சில்வர் பானையை ( எங்கள் ஊர்ப் பக்கம் அதைத் தவலை என்பார்கள்) , நன்றாகக் கழுவி, அதன் இரு பக்கத்திலும் திருநீற்றில் நன்றாகப் பட்டை போட்டு அதன் நடுவில் சந்தனம் , குங்குமம் வைத்து பக்தி சுக்தியாகத்தான் விற்பார்கள். இதுபோல் மற்ற பதார்த்தங்கள் விற்பதை நான் பார்த்ததில்லை.
நான் ஒவ்வொரு முறையும் பருத்திப்பால் குடிக்கப் போகும்போதெல்லாம், அர்ச்சனாவிடம் வாக்கிங் போகிறேன் என்று சொல்லி விட்டுப் போய்விடுவேன் ( பொய்யாஆஆ????? …நீயாஆஆ ????? இல்லை. நான் நடந்து போய்த்தான் பருத்திப்பால் வாங்குவேன். So , இது பொய்யுடன் சேர்த்தியாகாது ). அதேபோல், இந்தியாவில் இருக்கும் நாட்களில் சுகர் செக்க பண்ணவும் மாட்டேன் (நாங்கல்லாம் யாரு …..).
சரி …விஷயத்திற்கு வருகிறேன். இந்தமுறை, பெண்ணை பள்ளியில் இறக்கி விட்டு விட்டு ஒரு பருத்திப்பால் அடித்து (???) வரலாம் என்று காரில் கிளம்பினேன். எனக்கு போர் அடிக்கிறது, நானும் வருகிறேன் என்று என் மனைவியும் கிளம்பி விட்டாள். வரும் வழியில், வழக்கமாக பருத்திப்பால் விற்பவரைக் காணவில்லை. அவர் ஒரு வயதானவர். அவர் சமீப காலமாக வியாபாரத்திற்கு வருவதில்லை என்று அருகில் உள்ள பெட்டிக் கடைக்காரர் சொன்னார். அவருக்கு உடல்நிலை ஏதும் சரியில்லாமல் போய் விட்டதோ என்ற வருத்தத்துடன் நான் வேறு எங்கும் பருத்திப் பால் கிடைக்குமா என்று விசாரித்தேன் . நான் தினமும் கம்பாக வாக்கிங் வரும் ரகசியம் என் மனைவிக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது. சரி, வாங்க எனக்கும் பருத்திப்பால் சாப்பிட ஆசையாக இருக்கிறது என்று என் மனைவி சொல்ல, உற்சாகமாகத் தேட ஆரம்பித்து விட்டேன்.
ஆச்சரியம். ஒரு காலத்தில், தடுக்கி விழும் இடத்தில் எல்லாம் பருத்திப் பால் கிடைத்தது போக, இப்போது தேடோ தேடு என்று தேடியும் ஒரு பருத்திப்பால் சாப்பிட முடியவில்லை. என்னடா இது, மதுரைக்கு வந்த சோதனை என்று சோர்வுடன் திரும்ப எத்தனித்தோம். எங்களைப் பார்த்து பரிதாபப்பட்டு (????????) ஒருவர், கொஞ்ச நேரம் யோசித்து விட்டு, நேரே போய், லெஃப்டில் திரும்பி, ரைட்டில் திரும்பி, ஒரு U அடித்து என்று நீட்டி முழக்கி ஒரு இடத்தைச் சொல்ல, கடைசியில் அங்கு போய் குடித்தோம் (ஒரே சர்க்கரைப் பாகு….).
ஒண்ணா ரூவா பருத்திப்பாலுக்கு ஒன்றரை மணி நேரம் காரில் சுத்திய பிரகஸ்பதி உலகத்திலேயே நானாகத்தான் இருக்க முடியும் ( இது போல ஒரு முறை பதனீர் குடிக்க ஆசைப்பட்டு , அது கிடைக்காமல் வருத்தப் பட்டிருக்கிறேன் ( இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி…. எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே…அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே… ).
இந்த ஒன்றரை மணி நேரத்தில் நான் அவதானித்த சில விஷயங்கள்.
1. மாடர்ன் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம், கையேந்தி பவனுக்கும் நன்றாகவே தொற்றிக் கொண்டு விட்டது.
2. நிறைய இடங்களில் காளான் சூப் விற்கிறார்கள் – காளான்களில், விஷ வகைக் காளான்களும் உண்டு என்பது நிறையப் பேருக்குத் தெரியாது ( புத்தர், பன்றிக் கறி உண்டுதான் இறந்தார் என்று சில வதந்திகள் இருந்தாலும், அவர் காட்டில் வளரும் ஒரு வகைக் காளான் சாப்பிட்டு , அது ஒத்துக் கொள்ளாமலே இறந்தார் என்கிறது உண்மைச் சரித்திரம் ).
3. பாணி பூரி, பாவ் பாஜி போன்ற வட இந்திய உணவுகள் கையேந்தி பவன்களில் பிரபலமாகி வருகிறது.( இப்பல்லாம் இதுக்குத்தான் சார் கிராக்கி என்றார் ஒரு கையேந்தி பவன் வண்டிக்காரர் )
4. மேலை நாட்டினரின் சான்ட் விச்சுகள் , எங்கள் மதுரையிலும் படு பிரபலமாகி வருகிறது. மதுரையின் ஒரு ஒதுக்குப்புற ஏரியாவான ஊமச்சிகுளத்தில் , ஒரு கையேந்தி பவனில் ” இங்கு அனைத்து வகை சான்ட் விச்களும் கிடைக்கும் என்பதைப் படித்து ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டேன். ஒரு நாலு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஊமச்சி குளம் என்பது மதுரையுடன் சேராத ஒரு சிறிய கிராமம்.
செம முன்னேற்றம்….
அதே போல் நாம் மறந்த இன்னொரு விஷயம் கல் உப்பு. நான் சிறுவனாக இருக்கும்போது கல் உப்பு விற்பவர்கள், சைக்கிளில், ஒரு சாக்கில் உப்பை எடுத்துக் கொண்டு, உப்பே …உப்பே என்று ராகம் போட்டுக் கொண்டு வீதி வீதியாக வருவார்கள். மிகவும் சுவாரசியமாக அவர்களை நான் வேடிக்கை பார்த்திருக்கிறேன். அவர்கள் அந்தச் சாக்கை மிக நேர்த்தியாக மடித்து வைத்திருக்கும் அழகு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதற்குள், அவர்கள் உப்பை ஒரு கூம்பு போல குவித்து வைத்திருப்பார்கள். அதை அவர்கள், ஒரு, படி வைத்து ( படி என்றால் என்ன என்பது இந்தக் காலத்துக் குழந்தைகளுக்குத் தெரியுமா என்பது சந்தேகமே ) அளந்து கொடுக்கும் விதமும், இன்னும் கொஞ்சம் சேர்த்து போடுங்கைய்யா என்று நம் பெண்கள் அவர்களிடம் (வழக்கம் போல் )அடாவடி பண்ணுவதும் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
கல் உப்பைப் பற்றி, எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய தேசாந்திரியில் ஒரு கட்டுரை எழுதியிருப்பார். தண்டி உப்புச் சத்தியாகிரகத்தின் மூலம், ஒரு மிகப்பெரிய புரட்சியே ஏற்படக் காரணாமாயிருந்த கல் உப்பு, நம் வாழ்வில் இருந்து ஸ்லோ மோஷனில் மறைந்து கொண்டிருக்கிறது என்று வருத்தப் பட்டு எழுதியிருப்பார். அதைப் படித்து விட்டு, அந்த முறை இந்தியா சென்றிருந்தபோது ஓரிரு கடைகளில் விசாரித்தேன். கல் உப்பா ???? கல்லு மட்டும் வேண்டுமானால் இருக்கு ஆனால், கல் உப்பு இல்லை என்றார்கள்( என்னைய கலாய்க்கிறாய்ங்கெலாம்…..). தேர் முட்டியில் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்றார் ஒரு வயதானவர் – பழசுக்கு இப்பல்லாம் எங்கெப்பா மரியாதை என்று எங்கோ வெறித்த ஒரு பார்வையுடன். வருத்ததுடன் அங்கிருந்து நகர்ந்தேன், அவர் சொன்னதின் இரட்டை அர்த்தம் புரிந்து.
வால்வு ரேடியோ……
ப்ளூ டூத், ஆன் லைன் ரேடியோ என்று பழக்கப் பட்ட இந்தத் தலைமுறைக்கு, வால்வுகளுடன் கூடிய பழைய காலத்து ரேடியோ பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அப்போதெல்லாம், ரேடியோ பெரிய பெரிய சைஸ்களில்தான் இருக்கும். நான் சொல்வது ட்ரான்ஸிஸ்டர் எல்லாம் வருவதற்கு முன்னால். ரேடியோவின் பின்புறம், ஏகப்பட்ட ஓட்டைகளுடன் கூடிய ஒரு காட்போர்டு கவர் இருக்கும். அதைத் திறந்தோமானல், நீள நீளமாக கண்ணாடியில் செய்த வால்வுகள் இருக்கும். அவை ரேடியேட்டருக்குச் சமமாக வெப்பத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கும். அதைப் பார்க்கும்போதே தமாஷாக இருக்கும். அவற்றில் இருந்து இசை வராவிட்டால், அதைப் பக்கவாட்டிலும், மேல்புறமும் தட்டித் தட்டி நாங்கள் இசை உண்டாக்குவோம் ( இன்னுமொரு இசைக் கலைஞன் சமுதாயத்தால் புறக்கணிக்கப் பட்டு விட்டான். இல்லா விட்டால் இளையராஜாவிற்கு பயங்கரப் போட்டி வந்திருக்கும். தப்பித்து விட்டார் ).
அதிலும் இரண்டே இரண்டு Brand தான் ரொம்ப ஃபேமஸ். மர்ஃபி மற்றும் ஃ பிலிப்ஸ். ட்ரான்ஸிஸ்டரின் வரவுக்குப் பின்னால் அவை மறையத் தொடங்கி விட்டாலும், அதில் கேட்ட சிலோனின் இசைச் செல்வம், அப்போது வந்த படங்களின் ஒலிச்சித்திரம், சிவாஜி குரலோன் கே.எஸ். ராஜாவின் சிறப்புப் பாடல் நிகழ்ச்சிகள், அப்துல் ஹமீது மற்றும் மயில்வாகனன் நிகழ்ச்சிகள், சரோஜினி நாராயணசாமியின் செய்திகள் மறக்க முடியாதவை.
அடுத்த முறை இந்தியா செல்லும் போது, அது போன்ற வால்வு ரேடியோ ஒன்று வாங்கி பத்திரப் படுத்த வேண்டும் .
என்னதான், நவீன தொழிற்நுட்பத்துடன் வளைய வரும் இன்றைய சாதனங்களின் தரத்திற்கோ, தொழிற்நுட்பத்திற்கோ ஈடு இணையில்லை என்றாலும் கூட, அன்றைய ரேடியோவின் மூலம் ரசித்தமாதிரி இசையை, இன்றைக்கு ரசிக்க முடிவதில்லை என்பதே நிஜம். வெறும் பத்து (அ) பதினைந்து ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டு 100 பாடல்களுக்கு மேல் தரும் MP 3- யின் வருகை கூட ஒரு காரணமாக இருக்கலாம் (ரொம்ப மலிவாகக் கிடைத்து விட்டாலும் ஒரு சில விஷயங்களுக்கு மதிப்பு இல்லாமல் போய் விடும் போலிருக்கு ).
எது எப்படியோ, ரேடியோக்களுக்கு முன்னால் பாப்புலராக இருந்த ரெக்கார்டு ப்ளேயரில் தொடங்கி, இன்று விளங்கும் ப்ளூடூத் வரை சகலத்திலும் இசையை ரசித்த தலைமுறை என்ற முறையில் எனக்குப் பயங்கர சந்தோஷம்.
அதே போல், என்னை அடிக்கடி பழைய நினலைகளுக்குள் இழுத்துச் செல்லும் இன்னொரு விஷயம், ஃபிலிம் கேமராக்கள். நான் ஓரளவுக்கு புகைப்படம் கற்றுக் கொண்டது, ஃபிலிம் கேமராக்கள் மூலமாகத்தான். அதிலும் Zenith ET என்னும் ஒரு ரஷ்யன் கேமரா வைத்துதான். அதில் Manual Mode மட்டுமே இருக்கும். அதில் ஒவ்வொரு முறையும் படம் எடுத்து விட்டு, பரீட்சை எழுதி விட்டு ரிசல்ட்டுக்கு காத்திருக்கும் மாணவன் போல், வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருப்பேன். கருப்பு வெள்ளை படங்களை ஓரிரு முறை நானே கழுவி ப்ராசஸ் பண்ணியிருக்கிறேன். ரொம்ப இண்ட்ரஸ்ட்டிங்காக இருக்கும்.
ஆனால், கலர் ஃ பிலிம்தான் கொஞ்சம் பிரச்சினை. தாஷ்கெண்டில், ஊர்க் கடைசியில் ஒரு ஸ்டுடியோ உண்டு. அங்கு மட்டும் தான் கலர் ஃபிலிம் ப்ராசஸ் பண்ணுவார்கள் (80 களின் இறுதிகளில் ). ஒவ்வொரு முறையும் நல்ல கூட்டம் இருக்கும். காலையில் கடையைத் திறக்கும் போது, ஃபிலிமைக் கொடுத்து விட்டு, தண்ணீர், ஆகாரம் எதுவும் இல்லாமல் அங்கேயே பழியாய்க் கிடப்பேன். மாலை 5 மணிக்கு என்னுடைய புகைப் படங்களைக் கொடுப்பார்கள். ஒண்ணும் பார்க்கும் படியாக வந்திருக்காது. அனைத்தையும் அங்கேயே கிழித்துப் போட்டு விட்டு, சோர்வுடன் ஹாஸ்டல் திரும்புவேன். வெறுப்பாக இருக்கும்.
அந்தச் சோர்வு ஒரு நாள் மட்டுமே இருக்கும், மறு நாள், முன்னால் எடுத்த அதே புகைப்படங்களை, திரும்பவும் அதே இடத்திற்குச் சென்று மறுபடியும் எடுப்பேன். இந்தமுறை வேறு செட்டிங்கில். நான் எங்கே தவறு செய்தேன் என்று கண்டு பிடித்து புகைப் படம் திருப்தியாக வரும் வரை விட மாட்டேன். அதேபோல், ஒவ்வொரு முறை புகைப்படம் எடுக்கும் போதும், ஒரு சிறிய பாக்கெட் நோட்டுப் புத்தகத்தில் அனைத்து செட்டிங்க்ஸ், எந்த நேரம், அப்போதைய லைட்டிங் கண்டிஷன் எல்லவற்றையும் குறிப்பு எடுத்துக் கொள்வேன்.
இன்று, டிஜிட்டல் உலகத்தில், ஒரு புகைப்படம் எடுத்த மறு வினாடியே, கேமரா ஸ்க்ரீனில் அதைப் பார்த்து விடுவதுடன் மட்டுமல்லாமல், அதை அக்கு வேறு ஆணிவேறாக அலசி விடவும் முடிகிறது. Automatic ஆக EXIF Details- ம் பதிவாகி விடுகிறது. Amazing Technology .
பற்றாக் குறைக்கு, அதில் ஏதேனும் தவறு நேர்ந்திருந்தால் கூட, அதை கம்ப்யூட்டரில் உட்கார்ந்து சரி பண்ணி விட முடிகிறது. இது போன்ற தொழிற் நுட்பங்களை, நான் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை.
இது காலத்தின் அற்புதம் என்றாலும் கூட, ஒரு குட்டியூண்டு த்ரில்லிங் மிஸ்ஸிங். அந்த த்ரில்லிங்கை ரொம்பவும் ரசித்தவன் என்ற முறையில் எனக்கு அந்த ஒரு வருத்தம் உண்டு. அப்புறம் என்ன…..டிஜிட்டல் கேமராவைத் தூக்கிப் போட்டு விட்டு, பழைய ஃபிலிம் கேமராவைத் தூக்கிக் கொண்டு போவதுதானே ராசான்கிறீர்களா ? ஹி…ஹி…ஹி…ஹி….அது கொஞ்சம் கஷ்டம்.
எனக்கு நாணயங்கள் சேகரிக்கும் பழக்கம் கிடையாதுங்க. ஆனால், கடந்த முறை இந்தியா சென்றிருந்த போது, மதுரை ரயில்வே டேசனுக்கு ( நாங்க அப்படித்தான் ஸ்டைலாகச் சொல்லுவோம் எங்க ஊர்ப்பக்கம் ) எதிர்ப்புறத்தில், நடைப்பாதை கடை ஒன்றில் பழைய காசுகள் விற்பதைப் பார்த்தேன். பழைய ஒரு காசு, இரண்டு காசு நாணயங்களைப் பார்த்ததும், கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு, ஒரு செட் நாணயங்கள் வாங்கினேன், நூறு ரூபாய் கொடுத்து ( உங்களுக்கும் ஆர்வம் இருந்தால் உடனே வாங்கி விடுங்கள், அவை 1000 ரூபாய் ஆவதற்குள்).
வீட்டுக்கு வந்து அவற்றைப் பார்க்கும்போது, வழக்கம்போல் சுருள் சுருளாக ஃ பிளாஸ்பேக் நினைவலைகள் – அந்தக் காசுகளுக்கு என்னென்னவெல்லாம் வாங்கி என்ஜாய் பண்ணினோம் என்று.
ஒரு காசு – ஒரு தேன் மிட்டாய் (அ) இலந்தைப் பழம் வாங்குவோம்.
இரண்டு காசு – ஆரஞ்சுக் கலர் புளிப்பு மிட்டாய் (அ) சிவப்புக் கலர் ஜவ்வு மிட்டாய்
மூன்று காசு – நான் சிறுவனாக இருக்கும் போது, எங்க அம்மாவிற்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போய் விடும். அப்போதெல்லாம் காலைச் சாப்பாடு எங்கள் தெரு முக்கில் ( தெரு முனை என்பதை, எங்க ஊர்ப்பக்கம் தெரு முக்கு என்றுதான் சொல்லுவோம்) இருக்கும் ஒரு பாட்டியின் வீட்டில் தான். அந்தப் பாட்டி , இட்லி சுட்டு விற்கும். ஒரு இட்லி மூணு காசு. ராமன் எத்தனை ராமனடி படத்தில் ” ரெண்டு இட்லி போட்டு, நெர்றைய சாம்பார் ஊத்துங்க ” என்று பக்கோடா காதர் சொல்லுவதாய் ஒரு வசனம் வரும். நான் அந்தப் பாட்டியிடம் அந்த வசனத்தை அடிக்கடி சொல்லியிருக்கிறேன்.
ஐந்து காசு – ஒரு கல்கோனா .
பத்துப் பைசா – ஒரு மீடியம் சைஸ் கடலை உருண்டை
பதினைந்து காசு – ஒரு பால் ஐஸ் (அ) சேமியா ஐஸ் (அ) பால் பன்
இருபது காசு – ஒரு பெரிய சைஸ் கடலை உருண்டை
இருபத்தைந்து காசு – கிராமங்களில் டூரிங் டாக்கீஸில் படம் ( படம் ஆரம்பிப்பதற்கு கொஞ்சம் முன்னால் போனால் , மணல் குவித்து வசதியாக உட்காரலாம்)
நாற்பது காசு – எங்கள் தேவகோட்டையில் உள்ள லெக்ஷ்மி (அ) சரஸ்வதி தியேட்டரில் பெஞ்ச் டிக்கெட் வாங்கி படம் பார்க்கலாம்.
50 காசு, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் – கையில் வைத்து ரொம்பப் புழங்கியது கிடையாது.
5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய் , 50 ரூபாய் மற்றும் 100 ரூபாய் – அப்படின்னா ????????
வெ. பாலமுரளி.