முள்றியின் டைரி 34 : காலம் அழித்த சுவடுகள் – Part I

என்னதான் ” மாற்றம் ஒன்றே உலகில் மாறாத ஒன்று”, “பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபு” போன்ற தத்துவங்களைச்  சொன்னாலும் கூட, நாம் ரசித்து, அனுபவித்த சில விஷயங்கள் காலப் போக்கில் மறையும் போது மனதில் இனம் புரியாத ஒரு சோகம் பரவுவதைத் தவிர்க்க முடிவதில்லை. 

இந்த பீலிங் எனக்கு மட்டும்தானா இல்லை நிறையப் பேருக்கு உண்டா என்று தெரியவில்லை. 

காலம் அழித்த அது போன்ற நிறைய விஷயங்களில் என்னை நிறையவே பாதித்தது கடிதங்கள்.

நீங்கள் கடைசியாக யாருக்கு, எப்போது கடிதம் எழுதினீர்கள் என்று ஞாபகம் உள்ளதா ? ( போன மாசம்தான் எங்க பாஸூக்கு Resignation Letter எழுதினேன் என்று மொக்கை போடாதீர்கள் ப்ளீஸ் ).

என்னுடைய வாழ்க்கையில், கடிதங்களுக்கு ஒரு மிகப் பெரிய இடம் உண்டு. எனக்கு சின்ன வயதில் பக்கம் பக்கமாக கடிதங்கள் எழுதுவது மிகவும் பிடிக்கும் ( ஓஓஓஓஓஓ ….அப்போதிருந்தே உனக்கு செய்வதற்கு சோலி இருந்ததில்லையா ? ). 

அவற்றில் என்னால் மறக்க முடியாதது 3 கடிதங்கள். 

1. நான் எங்க அப்பாவுக்கு எழுதிய கடிதங்கள்.
2.நானும் எங்க அக்கா பையன் பிரபுவும் சேர்ந்து தூர்தர்ஷனுக்கு எழுதிய ஒரு கடிதம்.
3. நான் காதலித்த ஒரு பெண்ணுக்கு எழுதிய முதல் கடிதம் ( கா…….த……லி……யா…….?????மொதல்ல அதச் சொல்லு ராசான்றீங்களா.. .? பொறுங்க ……பொறுங்க…..சொல்லுவோம்ல ……) 

நான் எங்க அப்பாவை எந்த அளவிற்கு நேசித்தேன் என்பது நான் ரஷ்யா போன பிறகுதான் எனக்கே தெரிந்தது. முதல் பிரிவு. அங்கு போய் முதல் 6 மாதங்கள் Home Sick – இல் நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். அப்போது எனக்கு கடிதம் எழுதுவது ஒன்றே வடிகால். எங்க அப்பாவிற்கு பக்கம் பக்கமாய் கடிதங்கள் எழுதுவேன். மனதில் தோன்றியதெல்லாம் வார்த்தைகளாகவும், கண்ணீராகவும் வடிவெடுக்கும். கடிதங்களில் சிந்திய கண்ணீர் துளிகளை, பேனாவால் ஒரு வட்டம் போட்டு ” இது என் கண்ணீர் துளி ” என்று எழுதுவேன் – இந்தியா சென்றடையும்போது அது காய்ந்திருக்கும் என்பதோ , அதைப் பார்த்தவுடன் என் அப்பா மனது எவ்வளவு வருத்தப் படும் என்பதோ புரியாமல். ஒவ்வொரு கடிதம் எழுதும்போதும் நான் இந்தியா வருவதற்கு இன்னும் இத்தனை நாட்கள் இருக்கின்றன என்று எண்ணிக்கையையும் குறிப்பிடுவேன் – அந்த முதல் பயணம் ரொம்பவே சோக மயமாக இருக்கப் போகிறது என்பது தெரியாமலே . பற்றாக்குறைக்கு, நான் சாப்பாட்டிற்கு ரொம்பவே கஷ்டப்படுவதையும் எழுதுவேன். அதைப் படித்து விட்டு அவர் ரொம்பவே டென்ஷன் ஆவார் என்று நான் கொஞ்சம் கூட யோசித்துப் பார்த்தில்லை.

எங்க அப்பாவும் சளைக்காமல் பதில் எழுதுவார். “நீ அங்கு படிக்கப் போய் இருக்கிறாய். மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதே. வேளா வேளைக்கு கிடைப்பதை சாப்பிட்டுக் கொள். தனிமையைத் தவிர். நண்பர்களுடன் Foot Ball , Basket Ball விளையாடு . நன்றாகத் துங்கு. புத்தகங்கள் படி ” என்று அவரும் பக்கம் பக்கமாய் ஆறுதல் சொல்லுவார் .

நான் ஒரு கடிதத்தில் ” உங்களைத் தவிர எனக்கு வேறு யாருமே கடிதம் எழுதுவதில்லைப்பா ” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தேன். அதைப் படித்தவுடன் , ஒரு 10 ஏரோகிராமை வாங்கி, அவை அனைத்திலும் என் முகவரியை எழுதி, அவற்றை என் நண்பர்கள் எல்லோரிடமும் கொடுத்து, ப்ளீஸ்ப்பா , முரளிக்கு கொஞ்சம் லெட்டர் எழுதுங்கப்பா. அவன் ரொம்பவே வருத்தப் படுகிறான் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் ( அதற்குப் பிறகும் கூட அந்த Dogs யாரும் எனக்கு லெட்டர் எழுதவில்லை என்பது  வேறு  விஷயம் ). 

1988 – ஜூன் மாதத்தில் ஒரு நாள், மிக நன்றாக நீச்சல் தெரிந்த நான், அங்குள்ள வோல்கா ஆற்றில் ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொன்டு உயிருக்குப் போராடிய அதே நாளில் எங்க அப்பாவிற்கு ஸ்ட்ரோக் வந்து படுக்கையில் விழுந்தது எப்படி என்பது இன்று வரை எனக்குப் புரியாத ஒரு ஆச்சரியம்.  

அதற்குப் பிறகு நான் அடித்துப் பிடித்து இந்தியா சென்றதும், நான் சென்ற சில நாட்களிலேயே அவர் எங்களைப் பிரிந்து விண்ணுலகம் சென்றதும், நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே புரியாமல் எங்களுடைய கடிதங்கள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தியதும், நான் இன்று வரை மறக்க முடியாத ரணங்கள். நான் எப்படிங்க கடிதத்தை மறக்க முடியும் ? 

இரண்டாவது, தூர்தர்ஷன் கடிதம். 1993 – இல் நான் எங்க மாமா வீட்டில் தங்கிக் கொண்டு பட்டர்ஃபிளையில் வேலை செய்து கொண்டிருந்தேன். அபோதெல்லாம் மெட்ரோ 1, மெட்ரோ 2 என்று இரண்டே இரண்டு டி.வி.சேனல்கள்தான் வரும். வாரத்தில் ஒரிரு நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எதுவும் பார்க்கும்படியாக இருக்காது. அதில் மெட்ரோ பிரியா என்று ஒரு கேரக்டர் வேலை செய்தது. நம் கண்களைக் குத்த வருவது போல கையை நீட்டி நீட்டி ஸ்டைலாகப் பேசுவதா நினைத்துக் கொண்டு கிக்கி, பிக்கி என்று ஏதாவது பேசிக் கொண்டிருக்கும். வெறுப்பாக இருக்கும். முடிந்த வரைக்கும் டி.வி. ப்ரோக்ராம்கள் பார்ப்பதைத் தவிர்த்து விடுவோம். 

ஒருதடவை, பொழுதுபோகாமல், நானும் எங்க அக்கா பையன் பிரபுவும் சேர்ந்து தூர்தர்ஷனில் ஒரு நாடகம் பார்த்தோம். த்ராபை என்றால் த்ராபை உலக மகா த்ராபை. அந்த நாடகத்தில் வந்த ஒவ்வொரு கேரக்டரும் போட்டி போட்டுக் கொண்டு கொன்றார்கள். முதலில் பிரபுதான் வெகுண்டெழுந்தது. ” மாமா, இது டூ மச். இவெய்ங்கெல விடக்கூடாது மாமா. வாங்க இவெய்ங்கெல கிழி கிழின்னு கிழிச்சு ஒரு லெட்டர் எழுதுவோம் ” என்றான். ” சரிடா. எழுதுவோம். ஆனால், திட்டி எழுத வேண்டாம். நக்கல் பண்ணி எழுதுவோம். என்ன சொல்கிறாய்” என்றேன். இருவரும் ஒத்துக் கொண்டு ஒரு கடிதம் எழுதினோம் – அந்த நாடகத்தைப் பற்றியும் , அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களைப் பற்றியும் , அதில் வரும் ஒவ்வொரு வசனங்களை பற்றியும் ஆகா ஓகோவென்று புகழ்ந்து தள்ளி விட்டோம். 

அந்த நாடகத்தைப் பார்த்து விட்டு எங்கள் கடிதத்தைப் படித்தால், சின்னக் குழந்தை கூட சொல்லி விடும், இவெய்ங்கெ செமயா ஓட்றாய்ங்கென்னு. So அந்தத் தைரியத்தில் லெட்டரைப் போஸ்ட் பண்ணி விட்டோம். போஸ்ட் பண்ணி விட்டு கிட்டத்தட்ட அதைப் பற்றி மறந்தே போய் விட்டோம்.

ஒரு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் சென்றிருக்கும். தூர்தர்ஷனில் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அதைப் படித்து விட்டு நாங்கள் இருவரும் மயக்கம் போட்டு விழாத குறைதான் . கடிதத்தின் சாராம்சம் இதுதான் : ” அன்புள்ளம் கொண்ட நேயர்கள் பாலமுரளி மற்றும் பிரபுவிற்கு, தூர்தர்ஷனின் அன்பான வணக்கங்கள். உங்கள் கடிதம் கிடைத்துப் பாராட்டு மழையில் நனைந்தோம் (போய் குடையைப் பிடிங்கடா பருப்புங்களா ….). எங்களுக்கு இந்த நாடகத்தைப் பற்றி, இது போன்று இன்னும் நிறைய பாராட்டுக் கடிதங்கள் வந்துள்ளன ( அட ….ங்கொக்க மக்கா….நம்மள மாதிரி ஏழரைகள் இன்னும் ரொம்பப் பேர் இருப்பாய்ங்கெ போலிருக்கே ….). உங்கள் அனைவரையும் இன்னும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் விதத்தில் இது போன்ற நாடகங்கள் இன்னும் நிறைய ஒளி பரப்ப உறுதி பூண்டிருக்கிறோம். நன்றி. வணக்கம் (ஆமா…. ரொம்ப முக்கியம்…. ) “.

எங்கள் இருவருக்கும் டோரா டோராவில் உட்கார்ந்திருப்பது போல ஒரு ஃபீலிங். இவெய்ங்கெ சீரியஸாகத்தான் எழுதியிருக்காய்ங்கெலா , இல்லை நம்மை, நம்மை விட பயங்கரமா ஓட்றாய்ங்கெலா என்று ஒரே குழப்பம். நமக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கிடைக்காமலா போகும். கிழிச்சு தொங்கப் போட்ருவோம்டா, கவலைப் படாதே , என்று பிரபுவிற்கு ஆறுதல் சொன்னேன். நீங்க சொன்னா நம்ப மாட்டிங்கங்க . தூர்தர்ஷனின் அந்த ரெக்கார்டை அவர்களும் சரி, மற்ற டி.வி. சானல்களும் சரி, இது வரை யாருமே முறியடிக்க முடிந்ததில்லை . அதைப் பற்றி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். 

மூன்றாவது…என் காதலிக்கு நான் எழுதிய கடிதம் ( கடவுளே.. கடவுளே…. அர்ச்சனா இந்த டைரியைப் படிக்கக் கூடாது ) . 

காதலிக்கு கடிதம் எழுதுவதைப் பற்றி, பாரதிதாசனில் இருந்து கண்ணதாசன், வாலி, வைரமுத்து என்று எல்லா கவிஞர்களும் பாடல் இயற்றியிருக்கிறார்கள் (அதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ” நான் எழுதுவது கடிதம் அல்ல …” என்ற வாலியின் பாடல் ). ஆனால் என் வழி த……னி……….வழி.

எங்கள் காதல் ” Love at First Sight ” (சத்தியமாக கல்யாணத்திற்கு முன்னால்தான். திருமணத்திற்குப் பிறகு நெஜம்மாலுமே நல்ல பையனாகி விட்டேன். நம்புங்க ப்ளீஸ்) . பார்த்தவுடன் இரண்டு பேருக்கும் பிடித்து விட்டது ( ம்க்கும் …). அப்போது கென்யாவில் இருந்தேன். லீவுக்கு இந்தியா சென்றிருந்தபோதுதான் இந்தக் கூத்து. நைரோபி வந்த பிறகு அவ்வப்போது ஃபோனில் பேசுவேன். ஜாலியாகத்தான் போய்க் கொண்டிருந்தது – நான் அவளுக்கு ஒரு கடிதம் எழுதலாம் என்று முடிவு செய்யும் வரை.

கடிதம் என்றவுடன், ஏதோ காதல் சாம்பார், ஸாரி….காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதியிருப்பான் போலிருக்கு என்று கற்பனை ஹார்ஸை தட்டி விட வேண்டாம். அது மாதிரி ஒரு புண்ணாக்கும் இல்லை. (வழக்கம் போல ) சுய தம்பட்டம் மட்டுமே பிரதானம் ( ஹி…ஹி…ஹி..). எழுதி போஸ்ட்டும் பண்ணி விட்டேன். அத்தோடு சும்மா இருந்திருக்கலாம்.

அதை அவளுக்கு ஃபோன் பண்ணி சொன்னேன். அவள் அதற்கு எந்த ரியாக்ஷனும் காண்பிக்காமல் ” ஓ….அப்படியா ” என்றாள் ரொம்ப Flat ஆக (அப்போதும் சரி , இப்போதும் சரி, பெண்கள் என்னவோ கூலாகத்தான் இருக்கிறார்கள். ஆண்கள்தான் ரொம்ப உணர்ச்சிவசப்படுவது ). எனக்கு புஸ்ஸென்று போய் விட்டது. நம்ம கமல் சொன்ன மாதிரி, எனக்குள் இருந்த மிருகம் லேசாக எட்டிப் பார்த்து. இவளை விடக் கூடாது என்று முடிவு பண்ணி, By the way, எனக்கு உங்கள் வீட்டு முகவரி தெரியாதலால், உங்க அண்ணனின் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன், உனக்கு கிடைத்து விடும்தானே ? என்றேன் அப்பாவியாகக் குரலை வைத்துக் கொண்டு. 

அங்கிருந்து “ஐயய்யோ ” என்ற குரல் மட்டும் வந்தது, ஆனால் அங்கே ஹார் பீட் எகிறுவது இங்கே கேட்டது ( ஹா…ஹா…நாங்கல்லாம் யாரு ?????). (கடவுளே ..கடவுளே…..உன்னை மாதிரி ஜடத்தை எல்லாம் யாரு ராசா லவ் பண்ணச் சொன்னது ? பேசாம நீ உண்டு உன் கேமரா உண்டுன்னு இருந்திருக்கலாம்லன்றீங்களா ? கரீக்ட்டு. இப்பப் புரியுது. ஆனா அப்பப் புரியலையேப்பா …அப்பப் புரியலையே ….)

அதற்கு அடுத்த 10 நாட்கள் அவள் தன்னுடைய அண்ணன் அலுவலகத்திற்கு நடையாய் நடந்ததும், அவள் அண்ணன் அவளை வித்தியாசமாகப் பார்த்ததும், அதற்குப் பிறகு எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையில் என்ன ஆனது என்பதெல்லாம் ” நடந்தது என்ன ? ” என்ற ( விஜய் டி.வி.)  தலைப்பில் எழுத வேண்டிய இன்னொரு டைரிக்கான விஷயங்கள். இது வெறும் கடிதத்தைப் பற்றிய டைரி மட்டுமே….So, இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் ( மறுபடியும் கேட்டுக் கொள்கிறேன்….யாரும் அர்ச்சனாவிற்கு ஃபோன் போட்டு இந்த விஷயத்தை போட்டுக் கொடுத்து விடாதீர்கள் மக்காஸ் ப்ளீஸ் ).

சரி …விஷயத்திற்கு வருகிறேன்…..

நான், கடிதம் எழுதும் பழக்கம் மறைந்து போனதற்கு ஏன் இவ்வளவு வருந்துகிறேன் என்று இப்போது புரிகிறதா ? 

எங்கள் தேவகோட்டையில், வைத்தி என்று ஒரு போஸ்ட்மேன் இருந்தார் . அண்ணே, லெட்டர் இருக்கா என்று எப்போது கேட்டாலும் இல்லை என்றே சொல்ல மாட்டார். ” நாளைக்கு” என்று மட்டுமே சொல்லுவார். எனக்கு முதலில் Positive Approach – ஐக் கற்றுக் கொடுத்தது அவர்தான் – கடிதங்கள் மூலமாக. 

ஒரு சிறிய இடைச் செருகல்.

நான் சென்ற மாதம் எங்க மாமா பையன் கார்த்திக்கிற்கு ஃபோன் பண்ணி பேசினேன். என்னடா ஒரு ஈ மெயில் கூட அனுப்ப மாட்டேன் என்கிறாய் என்றேன் ரொம்ப கேஷுவலாக. நான் என்னவோ உலக மகா ஜோக்கைச் சொன்னது போல ஹா…ஹா என்று பயங்கரமாகச் சிரிக்க ஆரம்பித்து விட்டான். ஏண்டா சிரிக்கிறாய் என்றேன். நீங்க எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள் மாமா ? ஈ மெயில் எல்லாம் போய் ரொம்பக் காலமாச்சு மாமா. இப்போதெல்லாம் வாட்ஸப் தான். நான்தான் அதில் அவ்வப்போது ஹாய், ஹவ் ஆர் யூ , என்கிறேனே . நீங்கள்தான் பதிலே அனுப்புவதில்லை என்றான் (Back fire ). ஹி…ஹி…ஹி….நான் வாட்ஸப் ரெகுலராக செக் பண்ணுவதில்லை. இனி பார்க்கிறேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டேன். நல்லவேளை. ஏண்டா, கடுதாசியே போடுவதில்லை என்றுதான் முதலில் கேட்பதாய் இருந்தேன். அப்படி மட்டும் கேட்டிருந்தால் You Old Man என்று சொல்லி என்னைக் கொன்றே போட்டிருப்பான் .

இது போன்ற காலம் அழிக்கும் சுவடுகளுக்கு முடிவு என்பதே கிடையாது.

எனவே தொடரும்.

வெ.பாலமுரளி. 

பி.கு: இது பீலிங் வரிசை டைரி என்பதால் காமெடி எதுவும் இல்லை. கோபித்துக் கொள்ளாதீர்கள் ப்ளீஸ் ….