முள்றியின் டைரி 33 : ஆண்..…பாவம்.

சமீபத்தில் ஒரு நண்பி தன்னுடைய பக்கத்தில் ” ஆண்கள் எல்லோரும் சோம்பேறிகள். மனைவிகள் வகை வகையாக சமைத்துப் போட, அதை வக்கணையாக சாப்பிட்டு விட்டு,  டி.வி. யில் கிரிக்கெட் பார்க்க மட்டும்தான் லாயக்கு. கஷ்டம் என்றால் என்னவென்றே தெரிவதில்லை.  Useless  Fellows ” என்று எழுதிருந்தார். மிகவும் வருத்தமாக இருந்தது. நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது.  

(என்னதான் அது உண்மையாக இருந்தாலும் கூட ) அதை எப்படிங்க இப்படி ஓப்பனாக ஃபேஸ் புக்கில்  எழுதலாம் ? 

ஏன்….?

எதற்கு …..?

இப்படி …..? (சாரி சுஜாதா சார்.  கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டு விட்டேன் ….).

நாங்கள் படும் கஷ்டங்கள் உங்களுக்குத் தெரியுமா ? அதைச் சொன்னால் உங்களால்தான் புரிந்து கொள்ள முடியுமா ? பெருசா பேச வந்து விட்டார்கள்….

குழந்தைப் பேறு காலத்தில் ஒரு பத்தே பத்து மாதம் மட்டும் குழந்தையைச் சுமந்து விட்டு, நாங்கள் பத்து மாதம் சுமக்கிறோம் , பத்து மாதம் சுமக்கிறோம் என்று வீணே தம்பட்டம் அடித்துக் கொள்கிறீர்கள். நாங்கள் எங்கள் தொப்பையை வாழ் நாள் முழுவதும் சுமக்கிறோம். ஆனால், எங்களில் யாராவது அதைப் பற்றி பெருமையாக பேசுகிறோமா? இல்லை கம்ப்ளெயின்ட்தான் பண்ணுகிறோமா? 

அதை விடுங்கள். எங்களில் பல பேருக்கு ‘யோகா’ நன்றாகத் தெரியும் என்பது உங்களுக்குத் தெரியுமா ? ( எங்களுக்கே அந்த விஷயம் தெரியாது என்பது வேறு விஷயம் ). எங்கள் ஆஃபிஸிற்கு கொஞ்சம் அழகான , திருத்தமான கஸ்டமர்கள் வந்து விட்டால்  போதும். ஆமை தன் முகத்தை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது போல ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில்  மூச்சை இழுத்துப் பிடித்து எங்கள் தொப்பையை இழுத்து வைத்துக் கொள்வோம். எவ்வளவு நேரம் ஆனாலும் சரி, அந்த விஷயம் (???) வெளியில் தெரியாத படி சிரித்துப் பேசிக் கொண்டேயிருப்போம். யோகா நன்றாகத் தெரிந்திருந்தால் மட்டுமே அது சாத்தியம் ( கஸ்டமர்கள் வெளியில் சென்றவுடன் , இழுத்து ஒரு மூச்சு விடுவோம் பாருங்கள் …..அது ஒரு சொகம் …விவரிக்க வார்த்தையேயில்லை ). எங்களைப்  பார்த்து கஷ்டமே தெரியாதுன்னு சொல்றாங்க….எல்லாம் நேரம்…. 

ஒலகத்துல என்னமோ உசேன் போல்ட்டு மட்டும்தான் வேகமா ஓடுற மாதிரி சொல்றாங்க. மாதம் முழுக்க (சும்மா ) இருந்து விட்டு , தேதி 25 ஆனதும், சேல்ஸ் டார்கெட்டுக்காக  நாங்க ஓடும் ஓட்டம் இருக்கே ….அப்பப்பா…. செம ஸ்பீடு. அதை உசேன் போல்ட்டு மட்டும் பார்த்தார்னா , தன் தோல்வியை பகிரங்கமாக ஒத்துக் கொள்வார். அப்படிப்பட்ட எங்களைப் பார்த்தா சுகவாசி என்கிறீர்கள் ?

நாங்கள் கஸ்டமர்களிடம் ஆர்டர் வாங்கும்போது எங்களைப் பார்க்க வேண்டும்….ஆங்கிலத்தில் உள்ள U , V , S  போன்ற எல்லா கஷ்டமான எழுத்துக்களையும் எங்கள் உடலாலேயே செய்து காண்பிப்போம். இதுவும் கடுமையான யோகப் பயிற்சி செய்திருந்தால் மட்டுமே முடியும். புரிந்து கொள்ளுங்கள் ப்ளீஸ். 

ஃபேஸ்புக்கில், ”  I am feeling excited.  I am very sad. I am frustrated. ( ஆஃபிஸில் உட்கார்ந்து கொண்டு) I am at Java Coffee House என்று ஒரு நாளைக்கு நூறு ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய வேண்டும். பத்தாதற்கு, ஒரு நாளைக்கு  எங்களுக்கு வரும் நூற்றுக் கணக்கான Whats App  மெஸேஜுக்கும் பதில் சொல்ல வேண்டும். மொக்கை மெஸேஜ்ஜுக்குக் கூட, கை தட்டுவது போல ஒரு எமோட்டிக்கான் அனுப்ப வேண்டும். அத்தோடு நின்று விடாமல் , அதை நாலு பேருக்கு ஃபார்வார்டு செய்து வெறுப்பேற்ற வேண்டும் ( நான் சில வருடங்களுக்கு முன்னால்,  ” I am in love with my Job” என்று தொடர்ந்து ஸ்டேட்டஸ் போட்டுக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்துக் கொண்டிருந்த, என் நட்பு வட்டத்தில் இருந்த என்னுடைய பாஸ் , வெறுத்துப் போய் தன்னை Unfriend செய்து கொண்டார்) . இந்த மாதிரி கஷ்டமான வேலையெல்லாம் செய்து கொண்டிருக்கும்போது, கொஞ்சம் கூட நாகரீகமேயில்லாமல், சொல்லாமல் கொள்ளாமல் திடு திப்பென எங்கள் பாஸ் வந்து நிப்பார். டமாலென்று அவரிடம் Sales Projection , Cash Flow Projection, Marketing Plan என்று சரடு விட வேண்டும். இதெல்லாம் என்ன ஈஸியான காரியமென்று நினைத்தீர்களா? நாங்க சோம்பேறியாம்ல சோம்பேறி….. 

இவ்வளவு கஷ்டப்பட்டு,  Cow ஆ ஒழச்சு , சம்பளக் கவரை வாங்கி , அதை ஒரு பார்லி ஜூஸ் குடித்து கொண்டாடத்தான் விடுகிறீர்களா ? நாங்கள் என்னவோ , பழைய பேட்டரியைப் போட்டுச்   செய்த கள்ளச் சாராயத்தைக் குடித்தது போல, வீட்டு வாசலிலேயே நிறுத்தி ஏகப்பட்ட குறுக்கு விசாரணை செய்கிறீர்கள். நாங்களும் ” கஸ்டமர் ஃபோர்ஸ் பண்ணாரும்மா. பாஸ் வேற இருந்ததால மறுக்க முடியலை” ன்னு எங்களுக்குச் சரியாக வராத (??????) பொய்களைச் சொல்லி சமாளிக்கிறோம். அது பத்தாதென்று, ரம்யா கிருஷ்ணன் அம்மனாக நடித்த படத்தில் வருவது போல சூடம் ஏற்றிச் சத்தியம் வேறு பண்ணச் சொல்கிறீர்கள். எங்களைப் பார்த்தா பிரச்சின்னைகளைச் சமாளிக்கத் தெரியாத ஜென்மங்கள் என்று சொல்கிறீர்கள் ? உங்களுக்கே இது அடுக்குமா ? ( அது சரி, சுமலே  வராத பார்லி ஜூஸை யாராவது கண்டு பிடிப்பார்களா ?????? இல்ல …சும்மா தெரிந்து கொள்வதற்காகக் கேட்டேன் ……By the way,  பார்லி ஜூஸ் நிறைய குடித்தால் கிட்னி ஸ்டோன் வரவே வராதாம். எங்கோ படித்தேன். சொன்னால் நம்பவா போகிறீர்கள் ?)          

இதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்….எங்களைப் பார்த்தால் எல்லோரும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக (இதென்ன புது கான்செப்ட்டு ??????), எங்கள் தலைமுடியையும், மீசையையும் டை அடித்துக் கொள்கிறோம். அதில் உள்ள சிரமங்கள் உங்களுக்குத் தெரியுமா ? இல்லை சொன்னால்தான் புரியுமா ? 

டை அடிப்பது ஒரு கலை. நம்ம தி.மு.க காரங்க ஹிந்தி போர்டை தார் வச்சு அடிச்ச மாதிரி ஒரே கறுப்பாகவும் இருக்கக் கூடாது. அதே சமயம், நம்ம விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மாதிரி காற்றில் பறக்கும் பஞ்சு (ஐ..தலைப்பு நல்லாயிருக்கே …) மாதிரியும் இருக்கக் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட மாதிரி , ஒரு சில நரைத்த  முடிகளை விட்டு விட்டு நேச்சுரலாக இருக்குமாறு அடிக்க வேண்டும். அதற்கு ஆகும் நேரம் உங்களுக்குத் தெரியுமா ? அது எவ்வளவு சிரமமான காரியம் என்று தெரியுமா  ? உங்களுக்கு அதெல்லாம் புரியாதுங்க….

அதை விட சிரமம், மீசைக்கு டை அடிப்பது. ரொம்ப ஜாக்கிரதையாக அடிக்கணும். அலர்ஜியாகி விட்டால் வம்பு. நாங்கள் கனடாவில் இருக்கும்போது, எனக்குத் தெரிந்த ஒரு ஸ்ரீலங்கா நண்பர் மீசைக்கு  டை அடிக்கப் போய், அலர்ஜியாகி, சங்கரின் “ஐ” படத்தில் வரும் வில்லனுக்கு ஆனது போல முகமெல்லாம் வீங்கி  விட்டது. ஒரு வாரம் வெளியில் வரவே இல்லை. இதெல்லாம் புரிந்து கொள்ளாமல், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கமெண்ட் அடிக்காதீர்கள், ப்ளீஸ்.   

“காதலித்துப் பார். உன் பின்னால் ஒரு ஒளி வட்டம் தெரியும்” னு நம்ம வைரமுத்து சொன்னார். ஆனால் எங்களில் பாதிப் பேருக்குக் காதலித்துப் பார்க்காமலே , பெரிய ஒளி வட்டம் ஒன்று பின்னால் தெரியுது ( அதாங்க…வழுக்ஸ் ). அதை நம்ம பாலு மகேந்திரா தொப்பி போட்டு மறைப்பதா இல்லை, மைக் பாண்டே தொப்பி போட்டு மறைப்பதா என்று நாங்கள் மனதுக்குள் நடத்தும் போராட்டம் உங்களுக்குத் தெரியுமா. இல்லை தெரிந்தால் தான் ஏதாவது சொல்யூஷன் கொடுக்கப் போகிறீர்களா?   ( அதுசரி, எர்வாமாட்டின் ஒரு டுபாக்கூர் கம்பெனியாம்ல, அப்படியா? யூஸ் பண்ண யாராவது கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன் ப்ளீஸ். சும்மா ஜெனரல்  நாலட்ஜூக்காக் கேட்கிறேன்).

தாய்க்குலங்களே, உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இப்போது சொல்லுங்கள். நாங்கள் சோம்பேறிகளா ? கஷ்டம் தெரியாதவர்களா ? பிரச்சினைகளைச் சமாளிக்கத் தெரியாதவர்களா ? 

வெ.பாலமுரளி.

பி.கு: ஹலோ அர்ச்சனா….இந்தக் கட்டுரையை, என் நண்பர்கள் வாட்ஸ் அப்பில் எழுதியிருந்த புலம்பல்களைப் பார்த்ததால்  எழுதுகிறேன். மற்றபடி இவை எதுவும் என்னுடைய அனுபவம்  இல்லை. சொன்னால் நம்பும்மா. ப்ளீஸ்..ப்ளீஸ்…ப்ளீஸ்…..( டமால் ).