என்னுடைய இந்த ‘எனக்குப் பிடித்தவை’ யில்- வழக்கமாக என்னுடைய டைரியில் இருக்கும் ரவுசு எதுவும் இருக்காது. So படித்து விட்டுத் திட்ட வேண்டாம். இப்போதே சொல்லி விட்டேன்.
இவனுக்கு இதெல்லாம் பிடிக்குமாமே, நமக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று உங்களை ஒரு பட்டியலிடத் தூண்டும் ஒரு சின்ன முயற்சி , அவ்வளவுதான்.
எனக்கு எம்.எஸ் அம்மா, யேசுதாஸ் பாடல்கள் பிடிக்கும் என்றால் எனக்கு ஏதோ உயரிய ரசனை இருப்பது போலவும், ஒருத்தருக்கு “கானா பாலா ” பாடல்கள் பிடிக்கும் என்றால் அவருக்கு ஏதோ மட்டமான ரசனை இருப்பது போலவும் நமக்கு நாமே ஒரு மாய வலை பின்னிக் கொண்டு ஒரு கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . தப்புங்க. ரசனைக்கு பெஞ்ச் மார்க் என்னும் அளவுகோல் ஒன்றும் கிடையாது . இது என் ரசனை, அது உன் ரசனை என்று வேண்டுமானாலும் பிரித்துக் கொள்ளலாம்.
சரி விஷயத்திற்கு வருகிறேன்…
இந்த “எனக்குப் பிடித்தவை” எழுத முடிவு செய்தவுடன், ஒரு பெரிய குழப்பம். எதில் இருந்து தொடங்குவது ? ஏனென்றால், எனக்கு அவ்வ்வ்வ்வ்வ்வளவு விஷயங்கள் பிடிக்கும்.
நாமெல்லோரும் இந்த மரண ஓட்டம் ஓடுவது இந்த மூணு வேளை சாப்பாட்டிற்குத்தானே…So சாப்பாட்டிலிருந்தே தொடங்குவோம்.
எனக்கு 5 நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்று, அந்த கும்மிருட்டில் தட்டுத்தடுமாறி என்ன சாப்பிடுகின்றோம் என்றே தெரியாமல் சாப்பிடும் பஃபே பிடிக்கும். காரணம் அவர்கள் வைத்திருக்கும் மெயின் கோர்ஸ் இல்லை. அவர்கள் வைத்திருக்கும் வகை வகையான Dessert . அருகில் என் மனைவி இல்லையென்றால் , மெயின் கோர்ஸை லேசாக ஒரு கொறி கொறித்து விட்டு Dessert – இல் புகுந்து விளையாடி விடுவேன். என் மனைவி அருகில் இருந்தால் ??? மூச்……Dessert பக்கமே செல்ல மாட்டேன் ( அது எல்லாத்துலேயும் சுகர் இருக்குதாமாம் சுகர் ).
Europe செல்லும்போதெல்லாம் அங்குள்ள Hi-Fi Coffee Shop – க்குச் சென்று வாய்க்கு வெளங்காத அந்தக் கட்டங் காப்பியைக் குடித்து விட்டு 500 (அ) 1000 ரூபாய் மொய் எழுதப் பிடிக்கும். அதே சமயம் இந்தியா செல்லும்போதெல்லாம் அங்குள்ள கையேந்தி பவனில் போய் கம்மங்கூழும் மோர் மிளகாயும் அல்லது பருத்திப் பால் குடித்து விட்டு அங்குள்ள பிளாஸ்டிக் குடத்தில் இருக்கும் தண்ணீரில் கை கழுவி விட்டு வாய் கொப்புளிக்க ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ( இவன் எதுலடா சேர்த்தின்னு தோணுதோ ? ).
இவையெல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு இன்னொரு ஐட்டம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும் (என்னுடைய நைரோபி நண்பர்கள் தயவுசெய்து இதை நோட் பண்ணிக் கொள்ளவும் ).
தண்ணீர் சாதம் (பழைய கஞ்சி) + சுண்ட வைத்த பழைய குழம்பு + மோர் மிளகாய்+ சின்ன வெங்காயம் . சான்ஸே இல்லை . உலகில் இதை விட பெட்டர் காம்பினேஷன் இருக்கவே முடியாது.
இவை போக கடலை மிட்டாய், கோக்கோ மிட்டாய், அதிரசம், காரா பூந்தி, பால்கோவா, ஆமை வடை போன்றவை யாருக்கும் பிடிக்காமல் இருக்காது ( ஹி…ஹி…ஹி..).
எனக்குப் புத்தகங்கள் படிக்க ரொம்பப் பிடிக்கும். ஒரு டயத்தில் ஜே.கே. , பி.டி.சாமி , சிக்மன் ஃப்ராய்ட், ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், கல்கி , பாலகுமாரன் , ஜெயகாந்தன், லெக்ஷ்மி , வாஸந்தி, இந்துமதி, அனுராதா ரமணன் என்று வகை தொகையில்லாமல் கையில் கிடைத்த புத்தகங்கள் எல்லாம் படித்திருக்கிறேன் .
இவர்களில் எஸ். ராமகிருஷ்ணன், மதன், சுஜாதா , ஜெயகாந்தன், கல்கி மற்றும் அகிலன் பிடித்தமான எழுத்தாளர்கள். எஸ். ராவின் தேசாந்திரி, கேள்விக்குறி , மதனின் வந்தார்கள் வென்றார்கள், கி.மு., கி.பி.,, மனிதனும் மிருகமும் சுஜாதாவின் நம்ப முடியாத கதைகள் , ஏன் எதற்கு எப்படி, தலைமைச் செயலகம், மேகத்தைத் துரத்தியவன் , ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பு ( பாகம் 1) , ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் , கல்கியின் பொன்னியன் செல்வன் , அகிலனின் வெற்றித் திருநகர் , பாலகுமாரனின் உடையார் & கரையோர முதலைகள் + சமீபத்தில் படித்த ஜெயமோகனின் யானை டாக்டர் (இதை பரிந்துரை செய்த நண்பர் ஜெயகுமாருக்கு என் ஸ்பெஷல் நன்றி ) என்றென்றும் நினைவில் நிற்பவை .
ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக என்னை அதிசயக்க வைத்த ஒரு புத்தகம், டாக்டர் பி.இராமன் எழுதிய அச்ச ரேகை தீர்வு ரேகை. வாழ்க்கையில் தமிழ் படிக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒரு பைபிள் . இன்னும் நிறைய நிறைய புத்தகங்கள் உள்ளன. எல்லாவறையும் பட்டியலிட்டால் மற்றவற்றை எழுத முடியாது .
எனக்குப் பயணிக்கப் பிடிக்கும்ங்க . இது பற்றி எழுதத்தான் நிறைய விஷயங்கள் உள்ளன.
பிடித்த இடங்கள் ……
கங்கை கொண்ட சோழபுரம்….இந்தக் கோவில் அமைந்த ஏகாந்தமான இடம் பிடிக்கும். அந்தக் கோவிலில் உள்ள படிக்கட்டுக்கள் அனைத்தையும் கைகளினால் தடவி இவையெல்லாம் ராஜேந்திர சோழன் கால்கள் பதிந்த இடம் என்று நினைத்து மெய் சிலிர்க்கப் பிடிக்கும். ராஜ ராஜ சோழன் பற்றித் தெரிந்த நம்மில் பலருக்கு அவனுடைய புதல்வன் ராஜேந்திர சோழன் பற்றித் தெரியாது. ராஜேந்திர சோழன், தகப்பன் எட்டடி பாய்ந்தால் குட்டி 32 அடி பாயும் என்று நிரூபித்தவன். நிர்வாகத் திறமையில் தன் தந்தையை விட ஒரு படி மிஞ்சியவன் . ஆனாலும் எனக்கு அவன் மீது ஒரு சின்ன வருத்தம் உண்டு . தன் தகப்பனைப் போல ஒரு மிகப் பெரிய கோவில் கட்ட வேண்டும் என்று நினைத்தவன், அதில் தன்னுடைய தனி முத்திரையை (தனித்துவத்தை) ப் பதிக்க விட்டு விட்டானோ என்று.இந்தக் கோயில் தஞ்சாவூர் கோயிலின் இரண்டாவது பதிப்பு – சிறு சிறு மாறுதல்களுடன்.
வெனிஸ் – மிதவை நகரம். இதன் அழகையும், அற்புதத்தையும் விவரிப்பது மிக மிகக் கடினம். இதுவரை வெனிஸுக்கு மூன்று முறை சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும் ஏதோ ஒரு கனவுலகத்திற்கு சென்று வந்தது போலவே இருக்கும். எனக்கு கடவுளின் ஆசிர்வாதத்துடன் இன்னும் இரண்டே இரண்டு முறை (மட்டும்) வெனிஸுக்கு சென்று வர ஆசை. ஒரு முறை புகைப்படம் மட்டும் எடுக்க ( 3 நாள் போதும்) . இரண்டாவது முறை கேமராவை வீட்டில் வைத்து விட்டு அந்த இடத்தை சும்மா உட்கார்ந்து என்ஜாய் மட்டும் பண்ணி விட்டு வர வேண்டும் ( ஒரு வாரம் போதும்), யாராவது என்னுடைய இந்த இரண்டு ட்ரிப்பையும் ஸ்பான்ஸர் செய்ய விரும்பினால், தயவுசெய்து கூச்சப்படாமல் வெளிப்படையாகத் தெரிவிக்கவும். இவனிடம் சொன்னால் தப்பாக நினைத்து விடுவானோ என்றெல்லாம் தயங்காதீர்கள் – ப்ளீஸ்.
ஸ்விட்சர்லாந்து – எனக்கு மிகவும் பிடித்த நாடுகளில் இதுவும் ஒன்று. ஒரு நாடு முழுவதிலும் இயற்கை அழகு கொட்டிக் கிடக்க முடியுமா என்று யாரேனும் சந்தேகப்பட்டால், ஸ்விட்சர்லாந்திற்கு ஒரு முறை சென்று வாருங்கள். வெனிஸைப் போலவே இதையும் வர்ணிப்பதும் ரொம்பக் கடினம். Simply, One of the most beautiful countries in Earth.
நயாகரா (நன்றாகப் படியுங்கள் – “ந” வுக்குப் பதிலாக “வ” வைப் போட்டு விடப் போகிறீர்கள்) நீர்வீழ்ச்சி – நாங்கள் கனடா போய் இறங்கியதும், உடன் வேலை செய்த ஒரு பங்களாதேஷ் நண்பனைக் கேட்டேன்- நீ நயாகரா சென்றிருக்கிறாயா, எப்படியிருக்கும் என்று. அவன் சொன்ன பதில் எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை, அதிர்ச்சியைத் தந்தது. நயாகரா சுத்த போர். சும்மா தண்ணி கொட கொடவென்று கொட்டிக்கிட்டிருக்கும். அவ்வளவுதான், என்றான். எனக்கு அவன் மீது நம்பிக்கை வரவில்லை. உடனே கிளம்பிவிட்டோம். அங்கு அருகில் போய் நிற்கும்போது நமக்கு நாம் பூமியில் இருக்கிறொம் என்பதே மறந்து போகும். அது ஒரு அற்புதம். அதில் அடிக்கும் சாரலில் போய் நனைவது ஒரு பேரின்பம். அங்குள்ள மெக்டோனல்ஸில் கிடைக்கும் ஒரு வெளங்காத காப்பியை வாங்கிக் கொண்டு நான் அந்த இடத்தில் நிற்கும்போது என்னிடம் என்ன கேட்டாலும் கொடுத்து விடுவேன் (அதனால்தான் நான் என்னுடைய செக் புத்தகத்தை கையில் வைத்துக் கொள்வதில்லை ). அதேபோல் அவர்கள் Organize செய்யும் Journey Behind the Falls- ம் Maid of the Mist – ம் நம் சுஜாதா எழுதிய ஆலீஸின் கற்பனை உலகத்திற்கே அழைத்துச் சென்று விடும். இங்கு என் பங்களாதேஷ் நண்பனின் ரசனையும் என் ரசனையும் வேறு வேறு என்பது முக்கியம். அதற்காக அவனுக்கு ரசனையில்லை என்று சொல்வது தவறு.
இதேபோல் ஒரு அனுபவம் எனக்கு எகிப்து பயணத்திலும் உண்டு. 2004 – இல் எகிப்து செல்லலாம் என்று முடிவு செய்தவுடன், அங்கு சென்று வந்த நண்பர் ஒருவரை அணுகி , எகிப்து எப்படிங்க என்றேன். அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் “சுத்த வேஸ்ட் முரளி” என்றார். ஏங்க என்றேன். தடுக்கி விழுந்தா ஒரே பொணமா (பிரமிட்) இருக்குய்யா என்றார். ஆனால் என்னுடைய எகிப்து பயணம் என்னை ஒரு டைம் மெஷினில் 5000 வருடத்திற்கு பின்னே அழைத்துச் சென்றது மறக்க முடியாத ஒரு அனுபவம்.
அம்போஸலி நேஷனல் பார்க், கென்யா …..இதுவரை இந்த இடத்திற்கு எத்தனை முறை சென்றிருக்கிறேன் என்று கணக்கு வைத்துக் கொண்டதில்லை. காரில் நம்ம இளையராஜா, எஸ்.பி.பி பாடல்களை மிகவும் லோ வால்யூமில் வைத்துக் கொண்டு இந்த பார்க்கில் சுற்றி சுற்றி வந்து யானைகளைப் படம் பிடிக்க ரொம்ப ரொம்பப் பிடிக்கும். மாலை வேளைகளில் அங்கு உள்ள ஓல் டுக்காய் லாட்ஜில் உள்ள திறந்தவெளி புல்வெளியில் உட்கார்ந்து கொண்டு காப்பி அருந்திக் கொண்டே அந்த ஏகாந்தத்தில் உலா வருல் யானைக் கூட்டங்களையும், கிளிமஞ்சரோவையும் ரசிக்க மிகவும் பிடிக்கும். வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத மற்றும் ஒரு இனிய அனுபவம் ( By the Way, Ol Tukai Lodge கடந்த இரண்டு வருடங்களாக The Best Hotel in Africa Award வாங்கிக் கொண்டிருக்கிறது ).
இவை தவிர எனக்குப் பிடித்த இடங்கள் இன்னும் ஏராளமாக உண்டு. பொறுமையாக இன்னொரு சமயம் எழுதுகிறேன். சரியா ?
பாடல்கள்…..நான் பாதி நேரம் நாட்களைக் கடத்துவது நம்ம இளையராஜா, யேசுதாஸ் மற்றும் எஸ்.பி.பியுடன் தான். அதற்காக எனக்கு மற்ற பாடல்கள் பிடிக்காது என்று அர்த்தமில்லை. இதிலும் எனக்கு எந்த வரை முறையும் கிடையாது. சில இரவு நேரங்களில் எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டு T.M.S- இன் தத்துவ / சோகப் பாடல்களைக் கேட்க மிகவும் பிடிக்கும்.
வார இறுதிகளில் Bose Speaker- இல் A.R. ரஹ்மானின் பாடல்களை சத்தமாக வைத்துக் கொண்டு சமையல் செய்ய ரொம்ப ரொம்பப் பிடிக்கும் ( வீடே சும்மா அதிரும்ல ) .
மனசு கனமாக இருக்கும் நாட்களில் பங்கஜ் உதாஸின் கஸல் பாடல்களை லோ வால்யூமில் வைத்துக் கொண்டு கண்ணை மூடிப் படுத்திருக்கப் பிடிக்கும்.
மனசு உற்சாகமா இருக்கும்பொழுது நம்ம மைக்கேல் ஜாக்ஸனின் Bad, Thriller, History போன்ற ஆல்பங்களை சத்தமாக வைத்துக் கொண்டு வீட்டில் தனிமையில் பிரேக் டான்ஸ் ஆடப் பிடிக்கும் ( ம்க்கும் …அது வேறயா ????).
இவை தவிர Stevie Wonder பாடல்கள் மிகவும் ரசிப்பேன். I just called to say I love you – one of my most favourite Songs.
சமையல் எனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று. ஆனால் வெஜிட்டேரியன் சமைக்கும் அளவுக்குப் பொறுமை கிடையாது ( எங்களுக்குத் தெரியாது என்பதையும் நாங்க டீஸண்டாக சொல்லுவோம்ல ). So, என்னுடைய சாய்ஸ் நான்வெஜ்தான்.
சனிக்கிழமை…..என்ன வேலை இருந்தாலும் சரி, மதியம் வெயிட்டாக ஒரு ரவுண்டு சாப்பிட்டு விட்டு, ஒரு தூக்கம் போடுவது ஒரு சுகம். 1 (அ) 2 மணி நேரம் Solid- ஆக தூங்கி விடுவேன். நல்ல Deep Sleep. இந்திரலோகம், தேவர்கள், ரம்பா (நம்ம நடிகை இல்லீங்கோ ) , ஊர்வசி, மேனகா எல்லோரையும் ஒரு விசிட் அடித்து விடுவேன்.
புகைப்படம்…..என் மனைவி, மகளுக்கு ஈடாக நான் நேசிக்கும் ஒரு விஷயம் உண்டு என்றால் அது என் கேமராதான் ( என் மனைவியை விட ஒரு படி மேலாகவே நேசிக்கிறேன் என்று சொல்லத்தான் ஆசை. ஆனால் சொன்னால் கொன்றே விடுவாள். அதற்காக பயம் எல்லாம் கிடையாது. ஒரு அன்பு அவ்வளவுதான் – ஹி…ஹி…ஹி…(எனக்கு லேசாக வியர்ப்பது தெரியுதோ ?).
இதில் புகைப்படம் எடுப்பதைத்தவிர வேறு பல சுவாரசியமான விஷயங்களும் உண்டு. காடுகளின் உள்ளே தங்கியிருக்கும்போது, இரவு, சிங்கம், கழுதைப் புலி போன்ற விலங்குகளின் உறுமல்களும், அதிகாலையில் பறவைகளின் சத்தங்களும் ஒரு சங்கீதம். இந்த சப்ஜெக்டைப் பற்றி மிகவும் விரிவாக ஒரு புத்தகம் எழுதும் ஐடியா உள்ளது. எனவே…..இங்கு இது போதும்.
இவையெல்லாம் அனுபவித்தது போக நேரம் இருந்தால் என் மனைவியையும், மகளையும் வம்பிழுத்து சண்டை போட மிகவும் பிடிக்கும்…( நிவி : அப்பா, நைரோபியில் என்னப்பா விசேஷம் ? நான் : போன மாசம் கொஞ்சம் டர்ன் ஓவர் குறைஞ்சிருச்சு. அலெக்ஸ் கொடுத்த செக் பவுன்ஸ் ஆயிருச்சு. BAT யில் இருந்து 1 மில்லியன் டாலர் ஆர்டர் இன்னும் வரலை. இன்று காலை டேவிட் போட்ட டீ நல்லாவேயில்லை. நேற்று எனக்கும் என் க்ளையன்ட் சார்லஸூக்கும் பயங்கர சண்டை. இன்று என் பாஸ் வந்து ஒரு டோஸ் கொடுத்துப் போனார். …ஹலோ…ஹலோ….என் பெண் ஃபோனை டொக்கென்று வைத்து விட்டு அடுத்த மூன்று நாளுக்குப் பேச மாட்டாள்).
இவ்வளவு “பிடிக்கும்” களை எழுதியவுடன், “ ச்சே…கொடுத்து வைத்தவன். எல்லாவற்றையும் ரசிக்கிறான். இவனுக்குப் பிரச்சினையே இல்லை போலிருக்கு” என்று சில நண்பர்கள் நினைக்கலாம். நான் என்னுடைய “சில இனிய நினைவுகள்” டைரியில் கண்னதாசனின் “தேன்” கதை ஒன்றைச் சொல்லியிருந்தேன். அதையே இந்த முறையும் நினைவுபடுத்துகிறேன். “ கடவுளே…எனக்குக் கொடுத்திருக்கும் வலிகளை தயவுசெய்து என் எதிரிகளுக்குக் கூடக் கொடுத்து விடாதே ப்ளீஸ்” என்று இறைவைனைக் கேட்டுக் கொள்ளும் அளவிற்கு எனக்கும் வலிகளும், பிரச்சினைகளும் உண்டு. அதற்காக நல்ல விஷயங்களை ரசிக்காமல் இருப்பது என்னங்க நியாயம் ?
வெ.பாலமுரளி