முள்றியின் டைரி 30 : பல்பு வாங்கலியோ பல்பு ……

வேணாங்க எங்கிட்ட ரொம்ப இருக்குதுங்கன்னு எவ்வளவு சொன்னாலும் கேக்க மாட்டேன்றாய்ங்கெ. தேடி  வந்து தேடி  வந்து குடுக்குறாய்ங்கெ. என்ன பண்றதுன்னே தெரியலை. ஒரு கடை போடலாம்னு பார்த்தா ஓவர் ஸ்டாக்கா ஆயிரும் போலிருக்கு. 

இந்த ( 2014) செப்டம்பரில் இந்தியா சென்றிருந்தேன். வரும்பொழுது சென்னையில் இருந்து கத்தாருக்கு ப்ளைட். வெயிட் பண்ணிக் கொண்டிருந்தேன். நான் பொதுவாக, காலையில் சென்று மாலையில் திரும்பும் Official  பயணங்கள் தவிர , மற்ற அனைத்துப் பயணங்களிலும் கேஷுவலாக ட்ரெஸ் பண்ணுவதையே விரும்புவேன். அதே போல் ஷூ போடுவதையும் தவிர்த்து விடுவேன்.  ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்வார்களே அதை எனக்கு  இந்த ட்ரிப் உணர்த்தியது.

 மிகவும் அதிகாலையில் ( 3 அல்லது 4 மணிக்குக்) கிளம்பும் பிளைட் ரொம்பப்  படுத்தி விடும். தூங்கவும் முடியாமல் முழித்திருக்கவும் முடியாமல் ஒரு மாதிரி  அவஸ்தையாக இருக்கும். கண்ணெல்லாம் ஒரே எரிச்சலாக இருக்கும். 

அந்த மாதிரி ஒரு எரிச்சலில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதாங்க  அவர் வந்து என் பக்கத்துல  உட்கார்ந்தார். வந்தவுடனே , முன்னப் பின்னத் தெரியாத என்னிடம் ஏகத்துக்கும் புலம்ப ஆரம்பித்து விட்டார். “ஏண்டா இந்தியா வர்றோம்னு இருக்குங்க. இவ்வளவுக்கும் மூணு வருஷத்துக்கு ஒரு தடவதான் வர்றேன். ஒவ்வொருதடவ வரும்போதும் மூணு வருஷத்துல சேர்த்து வச்சதெல்லாம்  ஸு …ஸுன்னு பறந்துருங்க”.  எனக்குத் தலையும் புரியலை காலும் புரியலை. இருந்தாலும் ஏதோ நியூஸ் இருக்குன்னு எனக்குள்ளே இருக்கும் ஜர்னலிஸ்ட் பட்சி சொன்னது . ( ம்க்கும்…ஜர்னலிஸ்ட்டாம்ல ஜர்னலிஸ்ட்டு  . ஊர் வம்புன்னு  சொல்லு ராசா ).          

நான் ஏதேனும் பேச்சுக் கொடுக்கும் நோக்கத்தில் , நீங்க எங்க வேலை செய்யிறீங்க என்றேன். அவ்வளவுதான். அவர் மடை  திறந்த வெள்ளம் போல கொட்ட ஆரம்பித்து விட்டார். தான் தோஹாவில் பரோட்டா மாஸ்டராக  வேலை செய்வதாகவும் வாரத்தில் ஏழு நாட்களும் அனலில் கிடந்து கஷ்டப்படுவதாகவும், ஒரு ஆத்திரம் அவசரம் என்றால் கூட தன் முதலாளி இந்தியா போக அனுமதிப்பதில்லை என்றும், வாங்கும் பணம் வாய்க்கும் வயிற்றிற்குமே சரியாகி விடுகிறதென்றும் வருத்ததுடன் பேசினார். 

அப்போதாங்க என் Tongue – இல் Saturn வந்து உட்கார்ந்து அந்தக் கேள்வியைக் கேட்க வைத்தது – ” உங்களுக்கு எவ்வளவுங்க சம்பளம் ?” என்று. அவர் கொஞ்சம் கூடத்  தயங்காமல்,  முப்பதாயிரம் ரூபாய்ங்க – தங்குவதற்கு இடமும் சாப்பாடும் ஃப்ரீ என்றார். சொல்லி விட்டு டமாலென்று உங்க சம்பளம் எவ்வளவுங்க என்றார். நான் என் கேள்வியைக் கேட்கும்போதே அவரும் அந்தக் கேள்வியை என்னிடம் கேட்கக் கூடும் என்று எதிர்பார்த்திருக்க வேண்டும். ஏனோ எதிர்பார்க்கவில்லை.

ஒரு நிமிடம் திகைத்து விட்டு சும்மா ஒரு குத்து மதிப்பாக “இருபதாயிரம் ரூபாய்ங்க” என்றேன் – அவர் அத்துடன் விட்டு விடுவார் என்ற எண்ணத்தில். அப்போதான் நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத மாதிரி இன்னொரு  குண்டைப் போட்டார் – ” நீங்க பரோட்டா மட்டும்தான் போடுவீங்களா  இல்லை தோசையும் சுடத்தெரியுமா” என்று.  முதல் அதிர்ச்சியில்  இருந்தே விலகாத  நிலையில் இருந்த எனக்கு இந்த இரண்டாவது அதிர்ச்சி பேரதிர்ச்சியாக இருந்தது. என்னைப் பார்த்தவுடனேயே கண்டிப்பாக இவனும்  ஒரு பரோட்டா மாஸ்டராகத்தான் இருக்க வேண்டும்  என்று ஏனோ அவருக்குத் தோன்றி   விட்டது. இந்த நிலையில் நான் ஒரு இஞ்சினியர் என்று சொன்னால் அவர் நம்புவார் போலத் தெரியவில்லை.

So அவர் போக்கிலேயே போகலாம் என்று முடிவு பண்ணி, ” பரோட்டா மட்டும்தான்” என்றேன். ஆ…ங்…நெனச்சேன்….அதனால்தான் வெறும் 20,000 ரூபாய் தருகிறார்கள். கொஞ்சம் தோசையும் சுடக் கத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு, அதன் செய்முறையையும் விளக்க ஆரம்பித்து விட்டார். தோசை ஒண்னும் கஷ்டமில்லிங்க – ஒன்னுக்கு மூணுன்னு அரிசியையும் உளுந்தையும் அரைச்சு ஒரு  நைட் ஊற விட்டுட்டு மறு நாள் காலையில ஊத்துங்க . சொய்ங்….சொய்ங் – னு ஆட்டோமேட்டிக்கா  வந்துரும்னு அவர் இசையுடன் விளக்க, எனக்கு கும்கி படத்தில் வரும் சொய்ங்…சொய்ங் பாடல் ஏனோ ஞாபகத்திற்கு வந்தது. சரிங்க என்றேன்…..( எனக்குத் தூக்கம் சுத்தமாகப் போய்  விட்டது ). அவர் என்னை விடுகிற மாதிரித் தெரியவில்லை….அது சரி நீங்க எந்த ஊருல இருக்கீங்க என்றார் – விடாப்பிடியாக. நான் நைரோபி என்றேன். தோஹாவிலிருந்து எப்படிப் போவீங்க – பஸ்ஸா ? என்றார் . ம்ம்க்கும்….ஒட்டகத்தில் போவேன் என்று நினைத்துக் கொண்டு, “ஆமாம்…பஸ்ஸூலதான்  போகணும் ” என்றேன்….பாத்துண்ணே கொஞ்சம் சூதானமாக இருந்துக்குங்க என்றார் . என்னதான் அவர் என்னை ஒரு பரோட்டா மாஸ்டராக நினைத்துப் பேசினாலும் அவருடைய வெள்ளந்தியான அன்பு எனக்குப் பிடித்திருந்தது. 

அத்துடன் நிற்காமல், ” அதுசரி இன்னும் எத்தினி நாளைக்குத்தான் இன்னொருத்தனுக்கே வேலையைப்  பார்ப்பீங்க . நீங்களா   ஒரு கடையைப் போடுங்கண்ணே  . நாலு காசு பார்க்கலாம்” என்றார். ம்க்கும் ..கடையைப் போடலாம்தான்  . ஆனால் எங்க ராஜி அக்கா கொன்று விடுவார்களே என்று நினைத்துக் கொண்டு, சரிங்க யோசிக்கிறேன்….பாத்ரூம்  போகணும் அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லி விட்டு  ஒரே ஓட்டமாக ஓடி  வாஷ் ரூம் சென்று கண்ணாடியைப் பார்த்தேன். சும்மா சொல்லக் கூடாது….கொஞ்சம் “பரோட்டா மாஸ்டர் லுக் ” தெரிந்ததென்னவோ  உண்மைதான். இனி என்னோட டிரெஸ்ஸிங் ஸ்டைலை கொஞ்சம் மாத்திக்  கொள்ள வேண்டும்.

ஒரு முறை ஃபேஸ் புக்கில் என்னுடைய ப்ரொஃபைல்     ஃபோட்டோவைப் பார்த்து விட்டு என்னுடைய “உயிர்” நண்பன் ஒருவன் ” நண்பா , உன்  கையில் கேமரா மட்டும் இல்லையென்றால் உன்னைப் பார்த்தால் அச்சு அசலில் அப்படியே பான்பராக் விக்கிறவன் மாதிரியே இருக்குடா ” என்று சொன்னது ஏனோ சம்பந்தம் இல்லாமல் ஞாபகத்திற்கு வந்தது. நான் கூட அவன்  ஏதோ சும்மா கிண்டலுக்குச்  சொல்லுகிறான் என்று நினைத்திருந்தேன். இப்பல்ல தெரியுது…….

வெ.பாலமுரளி.  

பி. கு: இந்த டைரியை எழுதி முடித்தவுடன் , முதலில் என் மனைவிக்குத் தான் ஈ மெயிலில் அனுப்பி வைத்தேன். அது கையில் கிடைத்து படித்த மறு விநாடியே   எனக்கு ஃபோன் பண்ணி விட்டாள். ஃபோன் பண்ணி ஒரே சிரிப்பு. தான் நேரில் சொல்ல முடியாததை யாரோ ஒருவர் ஏர்போர்ட்டில் வைத்து சொல்லி விட்டாரே என்று சந்தோஷம்னா சந்தோஷம் அப்படி ஒரு சந்தோஷம் .  நீங்க எழுதுனதிலேயே இதுதான் பெஸ்ட் டைரி என்று சர்ட்டிஃபிகேட் வேறு. இதற்குப்பெயர்தான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது என்பதோ ?