இந்த (2014) ஆகஸ்ட் மாதத்துடன் நான் இந்தக் கலைப் பயணத்தை ஆரம்பித்து 30 வருடங்களாகின்றன ( க……லை…..ப் பயணமா ???????? எலேய் வாணாம்).
என்னதான் இந்த 30 வருடத்தில் ஒரு புண்ணாக்கும் சாதிக்கவில்லையென்றாலும் கூட, அந்த நாளை நினைத்துப் பார்த்தால் சந்தோஷமாகத்தான் இருக்கிறது.
அ…ந்….த …நா…….ள்……(இதை நம்ம அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் படிக்கவும் ப்ளீஸ்).
1984- ம் வருடம். நான் +1 படித்துக் கொண்டிருந்தேன். அந்த வருட ஜூலை இறுதியில், ஒரு நாள் என் நண்பன் ஈஸ்வரமூர்த்தி எங்கள் வீட்டிற்கு வந்தான் – ரொம்ப சோகமான மூஞ்சியுடன். என்னடா என்று விசாரித்ததில், அவன் அப்பாவிற்கு திருநெல்வேலிக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகிவிட்டதாகவும் இன்னும் ஓரிரு மாதத்தில் தேவகோட்டையைக் காலி பண்ணி விட்டு போகப் போகிறார்கள் என்றும் தெரிந்து என்னுடன் சேர்ந்து என்னுடைய இன்னொரு நண்பன் ரவியும் (எங்கள் கிரிக்கெட் டீம் கேப்டன். என்னுடைய “வீழ்வெனென்று நினைத்தாயோ “ டைரியில் இவனைப் பற்றி எழுதிருக்கிறேன்) சோகமாய் விட்டான். நாங்கள் மூவரும் இணை பிரியா நண்பர்கள். இந்த எதிர்பாராத அதிர்ச்சியை எப்படி எதிர்கொள்வது என்று எங்கள் யாருக்கும் தெரியவில்லை. இப்போதென்றால், FEELING SAD என்று அதையும் ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டு அதற்கும் ஒரு 10 லைக்கை வாங்கி ஊர் முழுவதும் டமாரம் அடிக்கலாம். அப்போது அதுவும் கிடையாது…
ஈஸ்வரமூர்த்திதான் அந்த யோசனையை முதலில் சொன்னான் – ஏண்டா நாம் மூவரும் ஏதேனும் ஒரு ஸ்டுடியோவிற்குப் போய் ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொள்ளக் கூடாது என்று. அந்த நொடியில்தாங்க எனக்குள்ளிருக்கும் மிருகம்…சாரி எனக்குள்ளிருக்கும் கலைஞன் விழித்தது ( சரி…. சரி… விடு. ரெண்டும் ஒண்ணுதான்).
அந்த சமயத்தில் எங்க அப்பாவிடம் 120 MM கேமரா ஒன்று இருந்தது . பெயர் “ Dyana F” – Hong Kong Made கேமரா . எங்க அப்பாவுக்கு புகைப்படக்கலையில் பெரிய ஆர்வம் இல்லாவிட்டாலும் கூட , எந்த டூர் சென்றாலும் தன்னுடைய கேமராவில் சில பல க்ரூப் ஃபோட்டோ எடுத்து அதை பிரிண்ட் போட்டு பத்திரப் படுத்தி விடுவார். அந்த ஞாபகம் வந்தவுடன், நாம ஏன் அந்தக் கேமராவில் ட்ரை பண்ணக் கூடாது என்று ஒரு நப்பாசை. என் நண்பர்களிடம் அதைச் சொன்னதும், அவர்களுக்கும் பயங்கர சந்தோஷமாகி விட்டது (உண்மையான நிலவரம் புரியாமல்) .
தயங்கித் தயங்கி எங்க அப்பாவிடம் சென்று விஷயத்தைச் சொன்னேன்- அவர் கேமராவைத் தருவாரோ மாட்டாரோ என்ற சந்தேகத்தில் . அவர் கொஞ்சம் கூடத் தயங்காமல். கேமராதானே ????? மேல நெல்லு கொட்டி வைக்கிற மச்சு (பரண்) ல கெடக்கும், போய் எடுத்துக்க என்றார். அந்தக் காலத்தில் எல்லார் வீட்டிலேயும் நெல்லு கொட்டி வைக்க ‘குலுமை’ என்ற பெரிய கிடங்குகள் (Silos) இருக்கும். அதன் பிறகு அந்த கான்செப்ட் போய், “மச்சு” கான்செப்ட் வந்தது. எங்க வீட்டு மச்சுல நெல்லை அல்லது அரிசியை மூட்டை மூட்டையாகக் கொட்டி வைத்து விடுவோம். அவை தேவைப்படும்போது, மச்சின் கீழே உள்ள Wooden Sliding Door –ஐத் திறந்து விட்டால் நெல்லோ, அரிசியோ தப தபவென்று கீழெ கொட்டும். ஓரிரு வருடங்களாக மழை சரியாக இல்லாதலால், விளைச்சல் இல்லாமல் போய் பழைய தட்டு முட்டு சாமான்களை அதில் போட்டு வைத்திருந்தோம். அதுல போய் ஏன் கேமராவைப் போட்டு வைத்திருந்தார் எங்க அப்பா என்று புரியவில்லை.
நானும் விடாமல் உடனே மச்சு மேல ஏறி விட்டேன். ஒரு 10 (அ) 15 நிமிடத் தேடலுக்குப் பிறகு சோப்பு டப்பா மூடி போலத் தெரிந்த ஒன்று கையில் பட்டது. அதைப் பார்த்தால் கேமரா போலவோ அல்லது கேமராவின் பாகம் போலவோ தெரியவில்லை. இருந்தாலும் கேட்டு வைப்போமே என்று கீழே இறங்கி வந்து “ அப்பா இது கேமராவைச் சேர்ந்ததா” என்று கேட்டேன் -கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாமல். “ஆமாண்டா….இதுதான் கவர். மெயின் கேமரா அங்குதான் இருக்கும் , போய் தேடு” என்றார். I could see the light in the tunnel. உடனே மறுபடியும் மச்சு மீது ஏறினேன்.
விடாமல் தேடியதின் பலனாக கேமராவின் மெயின் பாடி கிடைத்தது ( என்னடா இது, ஏதோ டெட் பாடியைச் சொல்வது போலச் சொல்கிறானே என்று பார்க்கிறீர்களா ? உண்மையிலேயே அது டெட் பாடி போலத்தான் இருந்தது ). அதிலும் , ஃபிலிமையும், ரீவைண்டிங்கையும் இணைக்கும் ஒரு லீவர் வேற மிஸ்ஸிங். கடைசியில் அதுவும் கிடைத்த பிறகே இறங்கினேன் ( விட மாட்டோம்ல). கீழே இறங்கிய பின்னர்தான் என் சந்தேகத்தைக் கேட்டேன், “ஏம்ப்பா, கேமராவைத் தூக்கி மச்சுல போட்டீங்க “ என்று. “அதுல ரொம்ப லைட் பாஸ் பண்ண ஆரம்பிச்சிருச்சுடா , அதனால்தான்” என்றார். நம்மலாலேயே ஒழுங்கா பாஸ் பண்ண முடியல, ஆனா லைட் மட்டும் ப்ராப்பராக பாஸ் பண்ணுதாம்ல, நேரம்தான் என்று நினைத்துக் கொண்டேன்.
அது மட்டுமில்லாமல், நமக்கு மட்டும்தான் டனலில் லைட் தெரியும்னு பார்த்தா நம்ம கேமராவுக்கும் ஏகத்துக்கும் லைட் தெரியும் போலிருக்கு என்றும் நினைத்துக் கொண்டு, அடுத்து என்ன செய்யலாம்ப்பா என்று எங்க அப்பாவிடமே யோசனை கேட்டேன். பேசாம அதைத் தூக்கிப் போட்டுட்டு , சேகர் ஸ்டுடியோவுல போய் ஒழுங்கா ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் ( ம்க்கும்….அதை மொதல்லேயே சொல்லியிருக்கலாம்ல).
எனக்கு சின்ன வயதில் இருந்தே, ஒரு விஷயத்தை ஆரம்பித்து விட்டால் கடைசி வரை முயற்சி செய்யாமல் பாதியில் விடும் பழக்கம் இருந்ததில்லை. எனவே இந்த முறையும் இறங்கிப் பார்த்து விடுவதென்று முடிவு செய்து, வழக்கம்போல் “……….க்கட்டி மலையை இழுக்கும்” முயற்சியில் இறங்கினேன். அந்த டப்பா கேமராவைத் தூக்கிக் கொண்டு சேகர் ஸ்டுடியோவிற்கு ஓடினேன்.
சலங்கை ஒலி கமலஹாசனிடம் இருந்ததை விட மோசமான ஸ்டேட்டஸில் இருந்த என் கேமராவைப் பார்த்து விட்டு சேகர் ஸ்டுடியோ ஓனர் காறித் துப்பாததுதான் குறை. இது ஒண்ணுத்துக்கும் பிரயோஜனமில்லை, இடத்தைக் காலி பண்ணுப்பா என்று சொல்லி விட்டார். நானும் விடவில்லை . எதற்கும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல , அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். காரைக்குடிக்குப் போய் ட்ரை பண்ணினால் என்ன என்றான் ரவி. எனக்கும் அந்த யோசனை சரியாகப் பட்டது.
காரைக்குடி, தேவகோட்டையில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு டவுன். பஸ்ஸில் போகணும் என்றால் வீட்டில் சொல்லணும், பஸ்ஸூக்கு காசு கேட்கணும், தேவையில்லாத பிரச்சினை வரும் என்று சைக்கிளில் செல்லத் தீர்மானித்தோம். அடித்துப் பிடித்து காரைக்குடிக்கும் சென்று விட்டோம். செஞ்சையில் உள்ள மணிமேகலை ஸ்டுடியோ. அந்த ஓனரும் உதடு பிதுக்குவது போலத் தெரிந்தது. நாங்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் ” அண்ணே …முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்கண்ணே ” என்றோம் கோரஸாக. அவருக்கு என்ன தோன்றியதோ ” சரி….டார்க் ரூமுல போய்ப் பார்த்துட்டு , என்ன பண்ணலாம்னு சொல்றேன்” என்றார். எனக்கு அப்பத்தான் லேசாக மூச்சு வர ஆரம்பித்தது. அங்கு காத்திருந்த அந்த 10 நிமிடமும் வாழ்க்கையில் மறக்க முடியாது- ஏதோ I .A .S பரீட்சை எழுதி விட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் மாணவன் போல. தலைவரும் வந்தார்.” என்ன தம்பி ஏதோ ஒண்ணு ரெண்டு எடத்துலதான் லைட் பாஸாகுதுன்னீங்க, ஆனா லென்ஸைத்தவிர எல்லா இடத்து வழியாகவும் லைட் பாஸாகுதேப்பா ” என்றார். அப்போது அதன் அர்த்தம் எனக்குப் புரியாவிட்டாலும் கூட நிலவரம் சரியில்லை என்று புரிந்து கிட்டத்தட்ட அழும் நிலைமைக்கு வந்து விட்டேன். கடைசி கடைசியாக ட்ரை பண்ணுவோமேயென்று ” ஒண்ணுமே பண்ண முடியாதாண்ணே ?” என்றோம். வேணா டேப் ஓட்டிப் பார்க்கலாம். ஆனா கேரண்டி சொல்ல முடியாது என்றார் ( ஆகா ….மலை வந்துருச்சு ….மலை வந்துருச்சு….) .
கொஞ்சம் கூட யோசிக்காமல் ” பரவாயில்லண்ணே …டேப் ஒட்டித்தாங்கண்னே ” என்றோம் – ரொம்ப சந்தோஷமான குரலில். ஃபிலிமுக்கு மட்டும் ஒரு 15 ரூபாய் வாங்கிக் கொண்டு அவர் மறுபடியும் டார்க் ரூமுக்குள்ளே சென்று விட்டார் . இந்த முறை கிட்டத்தட்ட 30 நிமிடம் ஆகி விட்டது. ஆனால் நாங்கள் மூவரும் ரொம்ப சந்தோஷமாகக் காத்திருந்தோம் – ஏதோ I.A.S எழுதி National Level- இல் ரேங்க் வாங்கி விட்டு போஸ்ட்டிங்கிற்குக் காத்திருப்பது போல. அவரும் வந்தார் கையில் ஒரு கறுப்பு உருண்டையோடு. ஈஸ்வரமூர்த்திதான் முதலில் கேட்டான் ” எங்க கேமரா எங்கண்ணே” என்று. அந்தக் கறுப்பு உருண்டையைக் காண்பித்து, இதுதான் உங்க கேமரா என்றார். அவர், லென்ஸை மட்டும் விட்டு விட்டு அந்தக் கேமரா முழுவதையுமே இன்சுலேலேஷன் டேப்பால் சுற்றி மூடியிருந்தார் . சந்தோஷமாயிருக்கும் I.A.S. Candidates – களிடம் வந்து சாரி தம்பிகளா …..பேப்பருல தப்பா வந்துருச்சு , நீங்க மூணு பேரும் ஃபெயிலுன்னு சொன்னா எப்படியிருக்கும். நாங்கள் மூவரும் அந்த நிலைமையில்தான் இருந்தோம். நம்ம தமிழ் சினிமாக்களில் ஹீரோவை அடித்துப் போட்டு I.C.U.- வில் வைத்திருப்பார்களே, மூக்கில் மட்டும் ஒரு ஓட்டையைப் போட்டு விட்டு உடல் முழுவதும் கை எது கால் எது என்று தெரியாமல் ஒரு பாண்டேஜ் சுற்றி, அதைப் போலவே இருந்தது எங்கள் கேமரா.
சரி, வேற ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு விதியை நொந்துகொண்டே தேவகோட்டை வந்து சேர்ந்தோம். எங்க அப்பாவிடம் போய் விஷயத்தைச் சொன்னேன். அவர் கொஞ்சம் கூட ரியாக்ஷனே கொடுக்காமல், ரொம்ப ஃபிளாட்டாக “அப்படியா” என்றார் . ம்க்கும்….இதுக்கு உங்ககிட்ட சொல்லாமலேயே இருந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு , “அப்ப்ப்ப்ப்ப்பா என்ன செய்யலாம்” என்றேன் கொஞ்சம் அழுத்தத்தோடு.
நாளைக்குக் காலையில அவெய்ங்களையும் வரச்சொல்லுடா, ட்ரைப் பண்ணிப் பார்த்து விடலாம் என்றார். எங்க அப்பாவின் இன்ஸ்ட்ரக்ஷன் படி காலை 7 மணிக்கு எங்கள் வீட்டு மொட்டை மாடியில் நாங்கள் மூவரும் குழுமினோம். எங்கள் மூவரையும் சூரியனைப் பார்த்து உட்காரச் செய்து விட்டு தனக்குப் பின்னால் சூரிய ஒளி இருக்குமாறு பார்த்துக் கொண்டு ஓரிரண்டு படங்கள் எடுத்தார். அந்த வகையில் புகைப்படக்கலையின் அடிப்படையையும், Golden Hours Principle -ஐயும் எனக்குக் கற்றுக் கொடுத்த குரு எங்க அப்பாதான். பிறகு கேமராவை என் கையில் கொடுத்து விட்டு , நீங்க ட்ரை பண்ணுங்க என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.
முதன் முதலில் View Finder – ஐப் பார்த்து கிளிக்கியது வாழ்க்கையில் மறக்க முடியாது. 1/30 Shutter Speed -ம் f 8 Aperture – ம் Fixed. அதில் “சொலக்கு” என்று ஒரு சத்தம் வந்தது பாருங்க….இன்னும் காதுக்குள்ளேயே ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அப்போது, நான் மனதில் ஒரு விஷயம் நினைத்துக் கொண்டேன். ஒருவேளை நான் எடுக்கும் புகைப்படங்களில் பாதி சரியாக வந்து விட்டால் கூட, இந்தப் புகைப் படக் கலையை நன்றாகக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவேளை ஒன்றும் சரியாக வராவிட்டால், தலையைச் சுற்றி இந்தக் கேமராவையும் , புகைப்படக் கலையையும் தூக்கி எறிந்து விட்டு ஒழுங்காக படிப்பைப் பார்த்துப் போய்க் கொண்டேயிருக்க வேண்டும் .
புகைப்படக் கலைக்கு வந்த சோதனை என்று நினைக்கிறேன், நான் எடுத்த எல்லாப் படங்களுமே ஓரளவுக்கு பார்க்கும்படியாக வந்து விட்டன.
வெ.பாலமுரளி
பி.கு: இதில் எங்க அப்பா எடுத்த குரூப் ஃபோட்டோ மட்டும் சென்ற முறை இந்தியாவில் வீட்டை ஒதுங்க வைக்கும் போது கிடைத்தது