என் நண்பர் சுவாமி ஸ்ரீ ஸ்ரீ டர்ரின் ( ஸ்ரீதர் ஏழுமலை ) போஸ்ட்டிங்கைப் பார்த்ததும் எனக்குள்ளும் ‘டொய்ங் …டொய்ங்…டொய்ங்..” என்று சுருள் சுருளாக ஃபிளாஸ் பேக் நினைவலைகள்.
இந்த வருடத்துடன் நான் இந்தியாவில் தீபாவளி கொண்டாடி 28 வருடங்கள் ஆகின்றன. இப்போதெல்லாம் எல்லோரும் டி.வி.யிலேயே தீபாவளி கொண்டாடி விடுகிறார்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம். அந்த அளவுக்கு ஏராளமான நிகழ்ச்சிகள். “ எங்க வீட்டுக்காரம்மா ரொம்ப்ப்ப்ப்ப்ப கெட்டி. அதனால்தான் அவங்க பண்ணும் மைசூர் பாகும் ரொம்ப ரொம்ப கெட்டி” என்று நீட்டி முழக்கி ஜோக் அடிக்கும் சாலமன் பாப்பையா, புதுப் பட டைரக்டர்கள், தாங்கள் இந்த வித்தியாசமான (?????) திரைப்படத்தை எப்படியெல்லாம் எடுத்தோம் என்று (இன்னும் இரண்டு நாளில் ஊத்திக் கொள்ளப் போவது தெரியாமல்) கொடுக்கும் பேட்டிகள் என்று ஒரு மாதிரி சலிப்பாகவே இருக்கிறது…
நான் பொடியனாக இருக்கும்பொது ( ம்க்கும்…இப்போ ரொம்ப பெரிய ஆளாயிட்ட மாதிரி நினைப்பாக்கும் ???), தீபாவளி என்பது ஒரு பிரமாண்டமான திருவிழா. அதிலும் ட்ரெஸ் வாங்கும் வைபவம் இருக்கிறதே, சூப்பராக இருக்கும். நானும் என் சின்ன அண்ணனும் ஒரு 2 மாதத்திற்கு முன்பிருந்தே , எங்க அப்பாவை நச்சரிக்க ஆரம்பித்து விடுவோம், ட்ரெஸ் வாங்கக் கூட்டிப் போகச் சொல்லி. அவர் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், ரொம்ப அசால்ட்டாக தான் மட்டும் போய் ஒரே மாதிரி பூப் பூவாக டிசைன் போட்ட பாப்ளின் என்னும் ஒரு துணியை மொத்தமாக ஒரு மூன்று நான்கு மீட்டர் வாங்கி வந்து விடுவார். எங்களுக்கு, நம்மை கூட்டிப் போகாமல் ட்ரெஸ்ஸை வாங்கி வந்து விட்டாரே என்ற வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும், அதை உடனே தைத்து போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை எங்களால் கட்டுப் படுத்தவே முடிந்ததில்லை .
இனிமேல்தான் Main Fun ஆரம்பிக்கும். தைப்பது. எங்கள் தேவகோட்டையில் சிலம்பனி அக்ரஹாரத்தில்- 8 அடிக்கு 8 அடியில் காளை டெய்லர்ஸ் என்று மகாக் கேவலமான டெய்லர் ஒருவர் இருப்பார். எங்களுக்கு அவர்தான் ஆஸ்தான டெய்லர். நாங்களோ அருகில் காரைக்குடியில் இருக்கும் G Tex ( பின்னாளில் K Tex) டெய்லரிடம் போய் தைக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் எல்லாம் இருப்போம். எங்க அப்பா கண்டு கொள்ளவே மாட்டார் (ரொம்ப பசித்தவுடன் பேசாமல் சாபிட்டு விடுவோம்). சரி போனது போகட்டும், எங்கள் அப்பா இல்லாமல் நாங்கள் மட்டும் தனியாகப் போய் “ நல்லாப் பெரிய (பாபி) காலர் வைத்து மூன்று நான்கு பை வைத்து நல்லா டைட்டாக தச்சுக் கொடுங்கண்னே” என்று சொல்ல Try பண்ணுவோம்.
எங்கள் அப்பா அதற்கும் இடம் கொடுக்காமல், எங்களுடனேயே வந்து “ எப்பா காளை , இவய்ங்கெ எப்படிக் கேக்குறாய்ங்கெளோ அப்படியே நல்ல்ல்லா தச்சுக் கொடுத்திருப்பா, என்று அந்த “நல்லா”- வில் ஒரு அழுத்தம் கொடுத்து விட்டுப் போய் விடுவார். காளைக்குத் தெரிந்து விடும் எப்படித் தைக்க வேண்டும் என்று. ஒரு 10 முறை நடையாய் நடக்க வைத்த பின், எங்கள் ட்ரெஸ் கிடைக்கும்- தொள தொள வென்ற சட்டையில் ஒரே ஒரு பாக்கெட்டும், ஒரு சின்ன காலரும் மட்டும் வைத்து. எனக்கும் என்னுடைய சின்ன அண்ணனுக்கும் அழுகை அழுகையாக வரும். எங்க அம்மாவிடம் போய் அழுவோமே தவிர எங்க அப்பாவிடம் மூச்சு விட மாட்டோம். தோலை உரித்து உப்புக் கண்டம் போட்டு விடுவார் உப்புக் கண்டம். நாங்களும் விடாமல், அதையும் எங்கள் நண்பர்களிடம் எல்லாரிடமும் காண்பித்து உதார் விடுவோம். எங்கள் நண்பர்கள் பலருக்கு இரண்டு மாதத்திற்கு முன்னால் ட்ரெஸ் வாங்குவது என்பதே நம்ப முடியாததாக இருக்கும். So, எங்கள் சோகம் அவர்களுக்குத் தெரியவே தெரியாது.
எங்கள் நண்பர்களில் சில பேர், இழுத்து மூச்சு விட்டா பட்டன் தெறித்து விழுந்து விடுவது போல டைட்டாக போட்டு வரும் சட்டைகளைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமையாக இருக்கும். இருந்தாலும் அன்று அந்த 25 (அ) 30 ரூபாயில் வாங்கிய பாப்ளின் சட்டையைப் போட்ட சந்தோஷம் இன்று 2500 ரூபாயில் வாங்கும் லூயிஸ் ஃபிலிப்பில் இல்லை.
அதே போல் வெடி வாங்குவதும் ஒரு பெரிய Exercise. எங்கள் வீட்டில் எனக்கு மட்டும்தான் வெடி வெடிப்பதில் இன்ட்ரஸ்ட். எங்கள் அப்பாவிற்கு நான்தான் ரொம்ப செல்லம் என்பதால் வெடிக்கு மட்டும் ரொம்பப் பெர்ர்ர்ரிய பட்ஜெட்- நூ……….று ரூபாய். எங்கள் வீதியில் எங்கள் வீட்டில் மட்டும்தான் அவ்வளவு வெடி. So, எங்கள் நண்பர்கள் அனைவரும் என்னை பொறாமையாகப் பார்க்கும்பொது அப்படியே ஜிவ்வென்று பறப்பது போல இருக்கும். ஒரு 10 நாளைக்கு முன்பே வெள்ளையன் ஊருணி என்னும் ஒரு Market Place (ம்க்கும் ) க்குப் போய் லெக்ஷ்மி வெடி, சிவாஜி வெடி, சரஸ்வதி வெடி, அணு குண்டு , சீனி வெடி, சர வெடி, கொஞ்சம் கம்பி மத்தாப்பு எல்லாம் வாங்கி வந்து , அவற்றை டெய்லி வெயிலில் வீட்டின் மாடியில் காய வைப்போம். அப்போதெல்லாம் தீபாவளி ஏன் இவ்வளவு ஸ்லோவாக வருகிறது என்று கோபம் கோபமாக வரும்.
அப்படி ஒரு முறை வெடிகளைக் காய வைக்கும்போது, அவை நன்றாக காய்ந்து விட்டதா என்று ஒரு குச்சி மத்தாப்பைக் கொளுத்தி வெளியில் போட, அது எதிர்க் காற்றில் திரும்ப வந்து வெடிகளின் மீது விழுந்து என் கண் எதிரிலேயே டமால் டுமீலென்று ஒரு பெரிய ஃபயர் வொர்க்ஸே நடந்து விட்டது. நடந்ததைப் பார்த்து நான் மென்டல் ஷாக்கில், ஓட வேண்டும் என்று கூடத் தோன்றாமல், அங்கேயே நின்றிருந்ததால் உடம்பெல்லாம் செம காயம்.
தற்செயலாக எங்கள் அப்பாவும் வீட்டில் இருந்தலால் உடனே எல்லோரும் மாடிக்கு வந்து என்னை ரெஸ்க்யூ பண்னினார்கள். கீழே இறங்கியபின்தான் எனக்கு சுய நினைவே வந்தது. நான் உடனே ஓவென்று அழ ஆரம்பித்தேன். உடனே எங்க அப்பா பதறி விட்டார். ஒண்ணுமில்லடா ஒண்ணுமில்ல….சின்னச் சின்னக் காயம்தான் …சரியாயிடும் என்றார். நான் உடனே “ நான் அதுக்காக அழல . எல்லா வெடியும் போச்சே என்று அழுகிறேன்“ என்றேன். “ என்ன ????” என்று கேட்டு விட்டு மின்னல் வேகத்தில் பொளேர் என்று ஒரு அறை விழுந்தது. இன்று வரை என்னை அறைந்தது எங்க அம்மாவா இல்லை எங்க அப்பாவா என்று எனக்குத் தெரியவே இல்லை. அன்று இரவே என்னை அழைத்துப் போய் இன்னொரு 100 ரூபாய்க்கு வெடி வாங்கிக் கொடுத்தார் எங்க அப்பா. அது ஒரு மறக்க முடியாத தீபாவளி.
தீபாவளி சமயத்தில் பிடிக்காத ஒரு வேலை, கோஆப்டெக்ஸில் போய் ஜமுக்காளம், தலையணை உறை வாங்குவது. எங்கள் அப்பா அரசாங்கத்தில் வேலை பார்த்ததால், கோஆப்டெக்ஸில் நிறைய டிஸ்கௌண்டில் துண்டு , ஜமுக்காளம் வாங்கலாம். கோஆப்டெக்ஸூக்கு நாங்கள் குடும்பம் சகிதமாகத்தான் போவோம். “கோஆப்டெக்ஸூக்கு மட்டும் எங்க எல்லோரையும் கூட்டிட்டு வர்றீங்க, ஆனால் எங்க ட்ரெஸ்ஸை மட்டும் நீங்க மட்டும் போய் வாங்கிட்டு வர்றீங்களே, அது ஏம்பா ?” என்று அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு ஒரு முறை கேட்டு நன்றாக அடி வாங்கியிருக்கிறேன். நாட்டுக்கு சுதந்திரம் வந்து விட்டது ஏண்டா நமக்கு மட்டும் சுதந்திரம் வரலை என்று நானும் என் சின்ன அண்ணனும் சீரியஸாக டிஸ்கஸ் பண்ணியிருக்கிறோம் ( இன்று சுதந்திரம் வந்து விட்டது . ஆனால், மகிழ்ச்சி போய் விட்டது )
அந்தா இந்தா என்று தீபாவளியும் வந்து விடும். முதல் நாள் இரவு போட்ட ஆட்டத்தில் , தீபாவளியன்று காலை அப்ப்ப்ப்படியொரு தூக்கம் வரும். ஆனால், மிகச்சரியாக 4 மணிக்கு என் நெருங்கிய நண்பனும் பக்கத்து வீட்டில் வசித்தவனுமான முத்துராமன் வந்து விடுவான். அவன் எங்க அப்பா அம்மாவை மாமா, அத்தை என்றுதான் அழைப்பான்.” என்ன மாமா, முரளி இன்னுமா தூங்குறான். நான் எண்ணெய் தேய்ச்சு குளிச்சிட்டேன். சீக்கிரம் அவனை எழுப்புங்க. சேர்ந்து வெடி போடணும்” என்று நாரதர் வேலையுடன் வந்து விடுவான். ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று நான் அவன் முகத்தில்தான் விழித்திருக்கிறேன்- அவன் உயிருடன் இருக்கும் வரை. ஆம், நாங்கள் 10 வது படிக்கும்போது ஒரு அற்ப விஷயத்திற்காக அவன் தற்கொலை செய்து கொண்டு விட்டான் , அதுவும் என்னை மட்டும் சாட்சியாக வைத்து விட்டு. என் மனதை ரண களமாக்கிய 3 சம்பவங்களில் அதுதான் முதலில் நடந்த சம்பவம்.எனக்கு நினைவு தெரிந்து அவன் மரணத்திற்குப் பிறகு நான் பெரிய அளவில் தீபாவளி கொண்டாடியதே இல்லை. அதே போல் ஒவ்வொரு தீபாவளியன்றும் அவனை நினைக்காமல் இருந்ததும் இல்லை.
தீபாவளியன்று நண்பர்கள் அனைவருடனும் சேர்ந்து வெடி போடுவதும் , எல்லோர் வீட்டிலும் போய் பலகாரங்களைக் கொடுத்து விட்டு அவர்கள் கொடுக்கும் அதே முறுக்கையும், ரவா லட்டையும், ஸோமஸையும் எங்க வீட்டில் கொடுப்பதும்,பிறகு எல்லா நண்பர்களும் சேர்ந்து அந்த வேகாத வெயிலில் ஒரு மட்டமான படத்தை மேட்னி ஷோ போய் பார்ப்பதும், மாலையில் திரும்பவும் பட்டாசு கொளுத்துவதும், வெடிக்காத வெடிகளைப் பிரித்து அதன் மருந்துகளை எடுத்து புஸ்வானம் கொளுத்துவதும், மறக்காமல் கொஞ்சம் வெடிகளை எடுத்து பெரிய கார்த்திகைக்கு வைப்பதும், இரவு தூங்குவதற்கு முன்னால் செரிமானத்திற்காக வீட்டில் செய்யும் இஞ்சி லேகியத்தைச் சாப்பிட்டு விட்டுத் தூங்குவதும் மிகவும் இனிய அனுபவங்கள்.
இன்று எல்லாமே இருந்தும் மனதில் ஏதோ ஒரு வெறுமை இருப்பதைத் தவிர்க்க முடிவதில்லை.
இது காலத்தின் கோலம் என்றெல்லாம் கதை விட மாட்டேன்.
வெரி சிம்பிள்…நமக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. That is the bottom line.
வெ.பாலமுரளி.
பி.கு: இந்த வருடம் நண்பர் பாலா மற்றும் சகோதரி கனகாவின் புண்ணியத்தில் அதிரசம், பர்ஃபி, வடை, பாயாசம் என்று தடபுடலாக தீபாவளி கழிந்து விட்டது….தனியாக இருக்கிறோமேயென்ற பீலிங்க்ஸேயில்லை….நன்றி பாலா & கோ .