முள்றியின் டைரி 26: நானும் ஒரு தேசாந்திரி – II

திக் …திக்…திக்…

மணியனின் பயணக் கட்டுரைகள் பற்றித் தெரிந்த நம்மில் பலருக்கு ஏ.கே.செட்டியாரைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏ.கே .செட்டியார், விமான வசதிகள் இல்லாத காலத்திலேயே நம்ம முருகப் பெருமானைப் போல உலகத்தையே ஒரு வலம் வந்தவர். அது மட்டுமில்லாமல், தான் பார்த்த இடங்கள் , சந்தித்த நபர்கள் அனைத்தையும் புகைப்படம் எடுத்து பதிவு செய்தவர். அவர் ஒருவர்தான் மகாத்மா காந்தியை நேரிலேயே படம் பிடித்து ஆவணப் படம் எடுத்தவர் (அதன் ஒரிஜினல் பிரதி தொலைந்து விட்டது- நமது அஜாக்கிரதையால் . இப்போது இருப்பது Edited Version தான்). அதேபோல், சுபாஷ் சந்திரபோஸ் தன்  கேப்டன் லக்ஷ்மியுடன் இருப்பது போல் உள்ள புகைப்படத்தையும் எடுத்ததும் அவர்தான். நம்ம எஸ். ராமகிருஷ்ணன் போல ஏ.கே. செட்டியாரும் என்னுடைய மிகப் பெரிய Inspiration – Travel  பண்ணுவதற்கு. சரி, விஷயத்திற்கு வருகிறேன்.  

நான் எப்போது ட்ராவல் பண்ணினாலும், ட்ராவல் ஏஜண்ட் மூலமாகப்  போகாமல் தங்குமிடம் , சாப்பாடு, லோக்கல் பயணங்கள் , சைட் சீயிங் எல்லாம் இன்டர்நெட்டில் உட்கார்ந்து நானே பண்ணி விடுவேன். அப்படிப் பண்ணுவது கொஞ்சம் Expensive  என்றாலும் கூட அதில் ஒரு சில வசதிகள் உண்டு. நமக்கு ஒரு இடம் பிடித்தது  என்றால் , கூடக் கொஞ்சம் நேரம் செலவழிக்கலாம். சில இடங்கள் பிடிக்கவில்லையென்றால் உடனே நகர்ந்து விடலாம். Package Tour -இல் சென்றால் அது முடியாது. கூட்டத்தோடு கோவிந்தா போட வேண்டும். ஆனால், அதில் உள்ள Disadvantage – ஐ எனக்கு ஒரு டூர் கற்றுக் கொடுத்தது.

அப்படித்தான் , ஜூலை 2008 -இல் குடும்பத்தோடு யூரோப் டூர் ஒன்று போகலாம் என்று முடிவு செய்து , பயண ஏற்பாடுகள் எல்லாம் செய்ய ஆரம்பித்தேன். எங்க வீட்டுக்காரனும் கச்சேரிக்குப் போறான்னு 12 நாட்களில் 10 நாடுகள் போகாமல் , மூன்றே மூன்று நாடுகள் மட்டும் போவோம் என்று முடிவு செய்தோம். அப்படி முடிவு செய்தவுடனேயே என் நினைவுக்கு வந்த நாடுகள் இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்த். உடனே, இந்த நாடுகளில் உள்ள சுற்றுலா தளங்களைக் கண்டுபிடித்து அதற்குத் தகுந்தாற்போல என்னுடைய புக்கிங்களைப் பண்ண ஆரம்பித்தேன். விமான டிக்கெட்டுகள் வாங்கி, விசா அப்ளை பண்ணி அவையும் வந்து விட்டன. கிட்டத்தட்ட எல்லாம் ரெடி. எங்கெங்கு, எந்தெந்த லைட்டிங்கில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ப்ளானிங்கும் ரெடி. கிளம்ப வேண்டியது ஒன்றுதான் பாக்கி.

ஆனால், எதிர்பாராத விதமாக கிளம்புவதற்கு மிகச் சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு ஹார்ட் அட்டாக். (அதைப் பற்றி விரிவாக “ என் ICU அனுபவங்கள்” டைரியில் எழுதிருக்கிறேன்). ஹார்ட் அட்டாக் வந்த அதிர்ச்சி ஒரு பக்கம், கிட்டத்தட்ட 10,000 டாலரை Pay பண்ணி வைத்திருக்கிறோமே என்ற கவலை ஒரு பக்கம் – வாழ்வின் இருட்டான நாட்கள். எங்கள் ட்ரிப்பை கேன்சல் செய்ததைக் கூட யாரிடமும் தெரிவிக்க முடியாத ஒரு எமர்ஜென்ஸி. 

அந்தா இந்தா என்று என்னுடைய ட்ரீட்மெண்ட் எல்லாம் முடிந்து பழைய நிலைமைக்கு வர ஒரு இரண்டு மாதம் ஆனது. முதல் காரியமாக ஏர்லைன்ஸ், ஹோட்டல் , ட்ரெய்ன்  என்று நான் புக்கிங் பண்ணிய அனைத்து மக்களையும் காண்டாக்ட் பண்ணி விபரத்தைத் தெரியப்படுத்தி பணத்தை Refund பண்ண முடியுமா என்று கோரிக்கை விடுத்தேன் ( …….க் கட்டி மலையை இழுப்போம். வந்தால் மலை , போனால்…….)

ஆச்சரியமாக, கிட்டத்தட்ட எல்லோருமே என் நிலையைப் புரிந்து கொண்டு, கொஞ்சூண்டு கேன்சலேஷன் சார்ஜை மட்டும் எடுத்துக் கொண்டு நான் செலுத்திய பணத்தைத் திரும்ப தந்து விட்டார்கள் (நல்ல மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று புரிய வைத்த தருணம்). இருந்தாலும் இவ்வளவு ப்ளான் பண்ணிய ட்ரிப் கேன்சல் ஆனதில் எனக்கு மனசு  ஆறவேயில்லை.

மிகச் சரியாக ஒரு வருடம் மட்டுமே காத்திருந்தேன். ஜூலை 2009- மறுபடியும் அதே Exercise ( “ இவன்லாம் அடங்க மாட்டான்” என்று நீங்கள் சொல்வது கேட்குது மக்காஸ் கேட்குது…).  ஜூலை முதல் வாரம் கெளம்பிட்டோம்ல.

முதலில் போய் இறங்கிய இடம் – மிலான், இத்தாலி. அங்கு ஒருநாள் மட்டும் தங்கி விட்டு பைசா நகரத்து சாய் கோபுரத்திற்கு செல்வது ப்ளான். மிலானில் ஒரு இந்தியன் ரெஸ்டாரெண்டில் இரவு டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொது, ‘பைசா’ வில் நல்ல ரெஸ்டாரெண்ட் ஒன்றும் இருப்பது போலத் தெரியவில்லையே, என்ன செய்யலாம் என்று எங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தோம். அதைக் கேட்டுக் கொண்டிருந்த சர்வர்” ஆமாம். அங்கு நம் சாப்பாடு கிடைக்காது” என்று சொல்லி எனக்கும் எங்கள் பெண் நிவிக்கும் சிக்கன் பிரியாணியும் , என் மனைவிக்கு வெஜிடபிள் பிரியாணியும், அப்பளம், ஊறுகாய், தயிர் பச்சடி எல்லாம் கட்டிக் கொடுத்து விட்டார். பைசா நகரத்து ட்ரிப் சூப்பராக அமைந்து விட்டது. பைசா கோபுரத்தில் வைத்து சிக்கன் பிரியாணி சாப்பிட்டு ஒரு சகாப்தம் பண்ணி விட்டோம் ( எங்க போனாலும் சரி…நாமெல்லாம் தமிழய்ங்கென்னு ஒரு முத்திரை பதிச்சிருவோம்ல …)

அங்கிருந்து வெனிஸ். வெனிஸ் தண்ணீரில் மிதக்கும் ஒரு மிதவை நகரம். வாழ்வில் அனைவரும் ஒரு தடவையாவது பார்த்து விட வேண்டிய ஒரு அற்புதம்.  எழுதவோ வர்ணிக்கவோ வார்த்தைகள் இல்லை. புகைப்படங்கள் மூலம் கொஞ்சம் புரிய வைக்கலாம் . அதுவும் கூட ஓரளவுதான். 

அங்கிருந்து நேரே ஸ்விட்சர்லாந்து சென்றோம். அங்குதான் வழக்கம்போல் என்னுடைய Close Friend Mr 7 1/2 தன் வேலையைக் காட்டினார். முதல் நாளே அங்குள்ள ஒரு ஹோட்டல்காரனுடன் தகராறு – ஒரு அல்ப விஷயத்திற்காக. மறுநாள் Mount Titlis சென்றோம். வெனிஸ் போல அதுவும் ஒரு அற்புதம். அந்த மலை உச்சியில் போய் சில வீர விளையாட்டுகளில் (அதற்காக ஜல்லிக் கட்டு என்று நினைத்து விடாதீர்கள்) கலந்து கொண்டு என்சாய்  பண்ணினோம். அந்த நேரத்தில் , இதயத்தில் வைத்திருந்த 3 Stunts  பத்தி ஞாபகமே வரவில்லை. அந்த மலை உச்சியிலும் நம் இந்தியன் ரெஸ்டாரெண்ட் ஒன்று இருந்தது. சாம்பார், உருளைக்கிழங்கு மசாலா, அப்பளம், ஊறுகாய் என்று கலக்கி விட்டார்கள். எல்லாம் எடுத்து முடித்தவுடன் தட்டை ஒரு தராசில் வைத்து வெயிட்டைப் பார்த்துத்  தான் பில் போட்டார்கள் . அதுதான் புரியவில்லை. ( அதுசரி …வெறும் அப்பளமா எடுத்து வைத்தா எப்படி பில்லு போடுவாய்ங்கெ ? மதுரக்காரெய்ங்கெ யோசிப்போம்ல ……). 

மறுநாள் Jungfrajoch சென்றோம் . அதன் மலை உச்சிதான் யூரோப்பிலேயே மிக உயரமான இடம். அழகு என்றால் அப்படி ஒரு அழகு. அதற்கு செல்லும் வழியே அபரிமிதமான ஒரு அழகு ( எனக்கு மிகவும் பிடித்த புகை வண்டி புகைப்படம் அங்கு எடுத்ததுதான் ). திரும்பும் வழியில் ஒரு ஸ்டேஷனில் இறங்கி , அந்த ஊரின் அழகில் மயங்கி இங்கு ஒரு காப்பி அருந்தி விட்டு செல்லலாம் என்று முடிவு பண்ணினோம் . அடுத்தடுத்துதான் ட்ரெய்ன் வருகிறதே என்று ஒரு தைரியம். ஆனால், மெயினான ஒரு கனெக்ஷன்  இந்தக் காப்பியினால் பிடிக்க தாமதமாகி விடும் என்று தோணவில்லை. மெதுவாக காப்பி குடித்து முடித்து, அந்த வரலாற்று (???) இடத்தில் காப்பி குடிப்பது போல சில ஃபோட்டோக்களும் எடுத்துக் கொண்டு   கிளம்பினோம்.     

பொதுவாகவே, இந்த உலகத்தில் நான் மட்டும்தான் பெரிய பருப்பு என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. அதனால் , நாங்கள் எப்போது டூர் போனாலும் பாஸ்போர்ட் , டிக்கெட், பணம் , செல்ஃபோன் எல்லாம் என்னிடம் மட்டும்தான் இருக்கும் ( எக்ஸ்ட்ரா ஜாக்கிரதையாக இருக்கேனாம்)  . எப்போதும்தான் உடன் இருக்கிறானே என்று என் மனைவியும் கண்டு கொள்ளாமல்  விட்டு விடுவாள். 

அடுத்த ஸ்டேஷனில் இறங்கும்போதுதான் தெரிந்தது நாங்கள் (காப்பி குடித்து) செய்த தவறு. Zurich  செல்ல வேண்டிய ட்ரெய்ன் கிளம்பத் தயாராக நின்று கொண்டிருந்தது.  அங்கெல்லாம் ட்ரெய்னை டாண் என்று எடுத்து விடுகிறார்கள். அங்கு தாமதமெல்லாம் விநாடிகளில்தான் இருக்கிறது. கேமரா, ட்ரைப்பாட் எல்லாம் எடுத்துக் கொண்டு அடித்துப் பிடித்து ஓடினோம். முதலில் என் மனைவியையும் , பின்னர் என் மகளையும் ஏற்றி விட்டு நான் ஏறுவதற்குள் கதவு மூட ஆரம்பித்தது. சில லிஃப்ட்டுகளில் கதவு மூடிக்கொண்டிருக்கும் போது கையை நீட்டினால் கதவு டமாலென்று திறந்து கொள்ளுமே அந்த ஞாபகத்தில் கொஞ்சம் கூட யோசிக்காமல் என் ஒரு காலை தடாலென்று உள்ளே வைத்தேன். எப்படிடா முரளி.????…ச்சே …கலக்குறடா என்று என்னை நானே பராட்டிக்கொண்டேன் (நம்மளைத் தான் வேறு யாரும் பாராட்ட மாட்டாய்ங்கெளே). என்னோட நேரத்துக்கு அந்த பய புள்ள கதவு தொறக்க மறுத்து விட்டது. கையில் கேமராவையும், ட்ரைப்பாடையும் வைத்துக் கொண்டு கொஞ்ச தூரம் ட்ரெய்னோடேயே நொண்டி அடித்து சென்று கொண்டிருந்தேன் ( இந்த வயசில் பாண்டி விளையாட்டு கொஞ்சம் டூ மச்தான்) . விட்டா, நாம் வெளியில் பறந்து கொண்டே (???) ட்ராவல் பண்ணுவது போல் ஆகி விடும் என்று என் எனர்ஜியை எல்லாம் திரட்டி என் காலை வெடுக்கென்று இழுத்தேன். ட்ரெய்ன் முழு ஸ்பீடில் போக ஆரம்பித்தது. 

நான் என் போராட்டத்திலேயே முழுக் கவனம் செலுத்திக் கொண்டிருந்தலால் , என் மனைவியும், மகளும் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க முடியவில்லை. கால் வெளியே வந்தவுடனேயே முதலில் அவர்களைத்தான் பார்த்தேன். இருவரும் செம டென்ஷனோடு கதவுக்கு அருகிலேயே நின்று கொண்டு பதறிக் கொண்டிருந்த காட்சி இன்று வரை என் மனதில் அப்படியே இருக்கிறது. கொடுமையிலும் கொடுமையான ஒரு காட்சி. ஒரு விநாடிக்குள், அவர்கள் பாஸ்போர்ட், ட்ரெய்ன் டிக்கெட், பணம், செல்ஃபோன் எல்லாம் என்னிடம் மாட்டிக் கொண்டிருப்பது நினைவுக்கு வந்தது. எனக்கு அந்த இடமே தலை கீழாக சுற்ற ஆரம்பித்து விட்டது. போதாததற்கு நாங்கள் எந்த ஸ்டேஷனில் இறங்க வேண்டும் என்ற விபரத்தையும் அவர்களிடம் சொல்லவில்லை. அவர்கள் எங்கு இறங்குவார்கள், அவர்களை எங்கு போய் எப்படித் தேடுவது என்றெல்லாம் நினைக்க நினைக்க எனக்கு கண்ணை இருட்ட ஆரம்பித்து விட்டது. இந்த லட்சணத்தில், நான் ‘பாண்டி’ விளையாடியதில் என்னுடைய ஒரு காலும் சுளுக்கிக் கொண்டிருந்தது. கெரகம் சரியாக இல்லாவிட்டால் எல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்ந்து வரும் என்பது புரிந்தது.

அந்த சமயத்தில், ஆபத்பாந்தவனாக ஸ்டேஷன் மாஸ்டர் என்னை நோக்கி ஓடி வந்தார். Any Problem?  என்றவரிடம் நான் பதட்டத்துடன் என் நிலையைச் சொன்னேன். ‘ப்பூ ..இவ்வளவுதானா, நான் கூட ஏதோ சீரியஸ் ப்ராப்ளம் என்று நினைத்து விட்டேன்’ என்றார் அசால்ட்டாக. ‘என்ன சார் சொல்றீங்க, அவர்கள் எந்த ஸ்டாப்பில் இறங்க வேண்டும் என்று கூட அவர்களுக்குத் தெரியாது’ என்றேன் செம கடுப்பில். அவரோ ரொம்ப கூலாக , “ ஹலோ நீங்கள் இருப்பது ஸ்விட்ஸர்லாந்தில்” என்றார். ம்ம்க்கும்.. ‘நாங்க என்ன அமெரிக்கான்னா சொன்னோம். மூஞ்சியப் பாரு’ என்று நினைத்துக் கொண்டு, “ SO ?????” என்றேன் பயங்கர எரிச்சலில். “So… no tension” என்றார் – ‘ஏதோ ஹமாம் சோப்பை யூஸ் பண்ணினால் நம்ம வீட்டுல 10 ஸ்கின் ப்ராப்ளம் நோ டென்ஷன்’ கிற மாதிரி.   

எனக்கு அதெல்லாம் தெரியாது,  ஒண்ணு அந்த ட்ரெயினை நிப்பாட்டுங்க, இல்லாட்டி அந்த ட்ரெய்னை முந்திப் போற மாதிரி எனக்கு உடனே ஒரு ட்ரெய்னை அரேஞ்ச் பண்ணுங்க என்றேன் விடாப்பிடியாக. ‘என்னவோ கால் டாக்ஸியை அரேஞ்ச் பண்ணுங்குற மாதிரி ட்ரெய்னை அரேஞ்ச் பண்ணுங்றானே, சரியான 7 ½ -யிடம் மாட்டிக் கொண்டோம்’ என்பது அவருக்குப் புரிந்தது. (இப்படித்தான், நான் எங்கே போனாலும் “……க் கட்டி மலையை இழுக்க முயற்சி செய்வேன்….”. நானே எதிர்பார்க்காத மாதிரி இந்த முறை மலையே வந்தது).

அந்த ஸ்டேஷன் மாஸ்டர் யார் யாருக்கோ வாக்கி டாக்கியில் பேசினார். பேசி விட்டு என் அருகில் வந்து “I have a good news for you. இன்னும் ஒரு நிமிடத்தில் இந்த ஸ்டேஷனைக் கடக்கப் போகும் ஒரு Express Train –ஐ இங்கு நிப்பாட்டுவதற்கு Special Permission வாங்கி விட்டேன். இனி உன் பாடாச்சு உன் ஃபேமிலி பாடாச்சு. என்னை ஆளை விடு ராசா “ என்று ஓடியே போய் விட்டார். நாங்கல்லாம் யாரு…..மதுர …தெரியும்ல……என்று நினைத்துக் கொண்டு Thank You so much Sir, என்றேன்.

எனக்காக, வழக்கமில்லாத வழக்கமாக அந்த Bullet Train அந்த குட்டியூண்டு ஸ்டேஷனில் நினறது. பெயர்தான் புல்லட் என்று நினைத்தேன். ஆனால் ஸ்பீடும் அப்படித்தான் இருந்தது. ஒரு பத்தே நிமிடத்தில், என்னுடைய (????) ட்ரெய்ன் என் மனைவி சென்ற ட்ரெய்னை அலட்சியமாகத் தாண்டியது. நானும் கதவுக்கு அருகில் நின்று கொண்டு அவர்களைத் தேட , அவர்களும் இவன் இந்த ட்ரெயினில் வந்து விட மாட்டானா என்ற ஒரு தவிப்புடன் கதவுக்கு அருகில் நின்று கொண்டு என்னைத் தேட, ராமன் கண் பார்க்க சீதையும் மண் பார்க்காமல், அவளும் கண் பார்க்க (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…இவன் கொடுக்குற ரவுசு தாங்கலையே….சாரி மக்காஸ்), நாங்கள் மூவரும் கண்களாலேயே சந்தித்துக் கொண்டோம். அடுத்த ஸ்டேஷனில் இறங்கி விடுங்கள் என்று நான் சைகை காண்பிக்க அவர்கள் முகத்தில் ஒரு அபாரமான நிம்மதி தெரிந்தது.

நான் எத்தனையோ முறை என் ஃபேமிலியை விட்டு ஒரு மாதம் இரண்டு மாதம் என்று பிரிந்திருக்கிறேன். ஆனால், அந்த 30 நிமிடப் பிரிவை என் வாழ்நாளில் மறக்க முடியாது.

வெ.பாலமுரளி  

பி.கு: இப்போதெல்லாம் அவரவர் பாஸ்போர்ட் அவரவர் கைகளில். எல்லோர் கைகளிலும் அட்லீஸ்ட் ஒரு 100 டாலராவது இருக்கும். அதுபோல எல்லோர் கைகளிலும் நாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலின் பிஸினஸ் கார்டு இருக்கும். பட்டால்தானே புரிகிறது.