எனக்குக் கதை சொல்லத் தெரியாதுங்க. சின்ன வயதில் நான் யாரிடமும் கதை கேட்டதில்லை. பின்னாளில் என்னிடமும் யாரும் கதை கேட்டதில்லை. So, எனக்குக் கதை சொல்ல வேண்டிய அவசியமே வரவில்லை – எனக்குத் திருமணமாகி என் மகள் நிவி பிறக்கும் வரை.
அவளுடைய மூன்றாவது வயதிலிருந்தே என்னை கதை சொல்லச் சொல்லி நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள். நானும் கொஞ்சம் யோசித்து விட்டு, நான் சின்ன வயதில் படித்த ருஷ்ய நாட்டு கதைகளில் இருந்து ஏதேனும் ஒரு கதை சொல்வேன். அவளும் சந்தோஷமாகி விடுவாள். அதிலும் “கேப்பைக் கூழ் ” கதை அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்.
வழிப்போக்கன் ஒருவன் , வெகு தொலைவு நடந்து ஒரு கிராமத்துக்கு வருகிறான். அங்கு ஒரு வீட்டுத்திண்ணையில் தங்குகிறான். அந்த வீடு வயதான ஒரு பாட்டியின் வீடு. பாட்டி பயங்கரக் கஞ்சம். அது தெரியாமல், நம்ம ஹீரோ , பாட்டி கொஞ்சம் சாப்பாடு கிடைக்குமா என்கிறான். பாட்டிக்குப் பயங்கர கோபம் வந்து விட்டது. என்ன… கொஞ்சம் இடம் கொடுத்தால் சாப்பாடெல்லாம் கேட்கிறாய் என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டது. Mr. வழிப்போக்கன் கொஞ்சம் கூட டென்ஷன் ஆகாமல், சாரி பாட்டி நான் தெரியாமல் கேட்டு விட்டேன், கோபித்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்லி விட்டு, உங்களுக்கு முடிந்தால் கொஞ்சம் தண்ணீரும் ஒரு அடுப்பும் மட்டும் கொடுங்கள் நான் கேப்பைக் கூழ் பண்ணி சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றான்.
பாட்டிக்கோ ஒரே குழப்பம், எப்படி வெறும் தண்ணீரை மட்டும் வைத்து கேப்பைக் கூழ் பண்ண முடியும் என்று. சரி, காசா பணமா, அவன் கேட்டத்தைத்தான் கொடுப்போமே என்று கொஞ்சம் தண்ணீரையும் விறகு அடுப்பு ஒன்றையும் கொடுத்தது. நம்ம ஆள் , அந்தத் தண்ணீரை சூடு பண்ணி விட்டு கொஞ்சம் வாயில் விட்டு ” ஆகா கேப்பைக் கூழ் என்ன டேஸ்ட் என்ன டேஸ்ட் ” என்று அவனே சொல்லிக் கொண்டான். பாட்டிக்கோ ஆச்சரியம்னா ஆச்சரியம் அப்படி ஒரு ஆச்சரியம். இருந்தாலும் அவனிடம் வாய் விட்டு கேட்க ஒரு கூச்சம். நம்ம ஆள் கொஞ்சம் தயங்கித் தயங்கி …கொஞ்சம் உப்பு மட்டும் இருந்தால் கூழ் இன்னும் டேஸ்ட்டாக இருக்கும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல பாட்டிக்கு ஒரு நூல் விட்டான்.
அவன் எதிர்பார்த்தது போலவே , பாட்டியும் உடனே உப்பு டப்பாவை எடுத்து வந்து கொடுத்தது. அதைக் கொஞ்சம் கலந்து மறுபடியும் கொஞ்சம் வாயில் விட்டுக் கொண்டு ” ஆகா கூழ் செம டேஸ்ட் . என்ன… கொஞ்சம் கேப்பை மாவு மட்டும் இருந்தால் இதன் டேஸ்ட்டை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது” என்றான். அடுத்த ஒரு நிமிடத்தில் கேப்பை மாவும் வந்து சேர்ந்தது. அது போல ஒவ்வொன்றாகக் கேட்டுக் கேட்டு வாங்கி அவன் ஒரு சூப்பர் கேப்பைக் கூழ் பண்ணி சாப்பிட்டு அந்தப் பாட்டிக்கும் கொடுத்தானாம் என்று முடிப்பேன். இந்தக் கதையில் என்ன இருக்கின்றது என்று எனக்குப் புரிந்ததேயில்லை. ஆனால் நிவிக்கு இந்தக் கதை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். இந்தக் கதையைக் கிட்டத்தட்ட ஒரு 100 முறை கேட்டிருப்பாள்.ஒரு சமயத்தில் எனக்கே இது ரொம்பப் போரடித்ததால் நிறுத்தி விட்டேன்.
பிறகு, மசை மாராவில் சில குட்டிப் பசங்க தொலைந்து போய் சில சிங்கங்களிடம் மாட்டிக் கொண்டதாகவும் , அவர்களை நிவி என்னும் ஒரு சிறு வீராங்கனை சிங்கங்களோடு போராடிக் காப்பாற்றி அவர்கள் பெற்றோர்களிடம் கொண்டு சேர்த்ததாகவும், அதைப் பாராட்டி பாரக் ஒபாமா அங்கிள் ( ???????) நிவியை அமெரிக்காவுக்குக் கூப்பிட்டுப் பாராட்டி ஏராளமான பரிசுப் பொருட்களைக் கொடுத்ததாவும் ஒரு கதை சொல்வேன். அந்தக் கதையைச் சொல்லும்போது, அது என்னவோ நிஜமாகவே நடந்தது போல நிவியின் முகத்தில் அப்படி ஒரு கர்வமான சந்தோஷம் தெரியும். ஒவ்வொரு முறையும் அவள் கதை கேட்கும் போது அந்தக் காட்டின் பெயரை மட்டும் மாற்றி விட்டு அதே கதையைச் சொல்லி விடுவேன். அவளும் சந்தோஷமாகி விடுவாள். ஒரு டயத்தில் அந்தக் கதையும் (எனக்கு) போரடித்து விட்டது.
அதிலிருந்து அவள் எப்போது கதை கேட்டாலும், அவளுக்கு ஒரு கதைப் புத்தகம் வாங்கிக் கொடுத்து என்னை விட்டு விடுடி குண்டம்மா என்று சொல்லி விடுவேன். அவளும் சரி என்று என்னை விட்டு விடுவாள். இந்த Arrangement ரொம்ப வருடங்களாக நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
சமீபத்தில் அவள் திரும்ப என்னிடம் வந்தாள் – ரொம்ப நாளாச்சு உங்களிடம் கதை கேட்டு, ஒரு கதை சொல்லுங்கப்பா என்று. நானும் தப்பிக்க எனென்னவோ சொல்லிப் பார்த்தேன். அவள் ரொம்ப சாரிப்பா, இன்று உங்களிடம் கதை கேட்காமல் விட மாட்டேன் என்று சொல்லி விட்டாள்.
நானும் ரொம்ப யோசித்துப் பார்த்தேன். ஒண்ணுமே மாட்டவில்லை. அப்போதுதான், நம்ம எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘கதை சொல்லி’ என்னும் ஒரு கட்டுரை ஞாபகத்திற்கு வந்தது. அவர் அதில், இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கும் கதை கேட்கப் பிடிக்கிறது. ஆனால், அவர்களுக்கு , பீட்ஸா , கோக் போன்ற பொருட்களை எல்லாம் உபயோகப் படுத்தி ஆங்கிலத்தில் கதை சொன்னால் தான் பிடிக்கிறது, என்று எழுதியிருப்பார். உடனே எனக்கு ஒரு ஐடியா வந்தது.
“அடியே குண்டம்மா, உனக்கு ஒரு கதை சொல்கிறேன். ஆனால், எனக்கு பிசினஸ் கதைதான் தெரியும், பரவாயில்லையா ?” என்றேன். அவள் உடனே சந்தோஷமாக “டபுள் O.K.” என்றாள். நானும் சொல்ல ஆரம்பித்தேன்.
நைரோபியில் Margaret என்னும் ஒரு Old Lady, Mama’s Donuts என்னும் ஒரு Bakery Shop நடத்திக் கொண்டிருந்தார்களாம். அவர்கள் செய்யும் Donuts பயங்கர Popular ஆகி கூட்டம் ஏகத்துக்கும் வர ஆரம்பித்து விட்டதாம். ஆனால், Mama Margaret – க்கு வயதாகி விட்டதால், வருகிற கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லையாம். ஒரு நண்பர் சொல்லி, www.mamasdonuts.com என்னும் ஒரு Web site ஆரம்பித்து Online மூலமாக வியாபாரம் பண்ண ஆரம்பித்து விட்டதாம் அந்தப் பாட்டி. எல்லோரிடமும் Credit Card இருந்ததால் Customers – ஐ நேரில் பார்க்காமலேயே Business அமோகமாக நடந்ததாம். அந்தப் பாட்டி பண்ணும் Donuts , மனிதர்களுக்குப் பிடித்தது மட்டுமல்லாமல் அருகில் உள்ள அனைத்து National Parks – களிலும் இருந்த Animals ,Birds எல்லாவற்றிற்கும் ரொம்பப் பிடித்து விட்டதாம். அவைகளிடமும் Credit Card இருந்ததால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அவைகளும் Online – இல் order பண்ணி நன்றாக வாங்கி சாப்பிடனவாம்.
ஒரு நாள் அந்தப் பாட்டிக்கு E Mail – இல் ஒரு Inquiry வந்ததாம். ” Hi There….I am a White Pelican from Lake Naivasha. I would like to order half a dozan of Donuts. Although I have a Visa card, I do not usually prefer to use it online for obvious reasons. So, if you don’t mind, could you please keep them ready & I will come tomorrow morning at 10, make the payment through my Visa card & pick up the Donuts? Your favorable response would be greatly appreciated”. பாட்டி Margeret – க்கு அதில் ஒன்றும் சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை. ” Your request has been accepted. I will keep the Donuts ready by 10. Please come & pick them up ” என்று ஒரு Reply Mail அனுப்பியதாம்.
மறு நாள் டாண் என்று 10 மணிக்கு அந்த White Pelican வந்து சேர்ந்தது. ” என்ன….Mama Margeret, என்னுடைய Donuts ரெடியா? ” என்று கேட்டதாம். உடனே Mama Margaret ” Oh…yes. Your Donuts are ready. I have packed them in such a way that you can easily pick it up through your Beak. By the way, can I have your credit card please ? ” என்றதாம். உடனே அந்த White Pelican தன்னுடைய Visa Card – ஐ எடுத்து நீட்டியதாம். அதை Mama Margaret Check பண்ணாமலே Machine – இல் Swipe பண்ணுவதற்காகத் திரும்பியதாம். அந்த இடைப்பட்ட நேரத்தில் நம்ம White Pelican தன்னுடைய Donut Box -ஐக் கவ்விக் கொண்டு போயே போய் விட்டதாம். அப்போதுதான் அந்தப் பாட்டி அந்த Card – ஐப் பார்த்ததாம். அது Expiry – ஆன கார்டாம். Mama Margaret – க்கு பணமும் போச்சாம். Donuts – ம் போச்சாம், என்று கதையை முடித்து விட்டு , கதை எப்படியிருந்தது நிவி என்று கேட்டேன். அவளுக்கு சந்தோஷத்தில் கண்ணெல்லாம் கலங்கி ” சூப்பர்ப்பா ….சூப்பர், என்று கட்டிப் பிடித்து ஒரு முத்தம் வேறு கொடுத்தாள். எனக்கும் அப்பாடா என்று இருந்தது. அப்போது அவள் மெதுவாக ” அப்பா ….” என்று கூப்பிட்டாள். எனக்குத் திடுக்கென்று இருந்தது. ” என்ன …இன்னொரு கதையா…? இன்னைக்கு முடியாது . இன்னொரு நாளைக்கு சொல்கிறேன்” என்று திரும்பினேன். ” அது இல்லைப்பா. இப்ப நீங்க சொன்ன கதை, நம்ம ஊரில் சொல்கிற ‘பாட்டி வடை சுட்ட கதைதானே? அதை தமிழிலேயே சொல்லியிருக்கலாமே, எதுக்குப்பா இவ்வளவு தூரம் English – இல் சொல்லக் கஷ்டப் பட்டீங்க?” என்றாள்.
எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் , நம்ம எழுத்தாளர் ராஜேந்திரக் குமார் ஸ்டைலில் ‘ஙே’ என்று விழித்தேன்.
வெ. பாலமுரளி