முள்றியின் டைரி 22 : பீலிங்க்ஸ் Part 2. தீராத விளையாட்டுப் பிள்ளை….

எனக்கு,  பசங்க படம் எடுத்த பாண்டிய ராஜ், எனக்குப் பின்னாலேயே வந்து நோட்ஸ் எடுத்து விட்டு அந்தப் படத்தை எடுத்திருப்பாரோ  என்ற ஒரு சந்தேகம் சீரியஸாகவே உண்டு. அந்த அளவிற்கு அந்த சேட்டைகள் அனைத்தும் நானும் பண்ணியிருக்கிறேன் + அவர் சொல்லாத ஏராளமான குரங்குச் சேட்டைகளும் ( ம்க்கும்…. அதை  வேறு நீ தனியே சொல்லணுமாக்கும் ).

ஞாயிற்றுக் கிழமையானாப் போதும்…காலையில் 8 மணிக்கே  கிளம்பி விடுவோம். கிட்டத்தட்ட 4 கி.மீ. தள்ளி உள்ள ஒரு தோப்புக்குப் போய் அங்கு உள்ள ஒரு மிகப் பிரமாண்டமான கிணற்றுக்குள் தொபீல் தொபீல் என்று குதிப்போம் (காவல்காரர்களிடமும் மாட்டிக் கொள்ளாமல்)…ஒரு வினாடி வித்தியாசத்தில் கிட்டத்தட்ட  10 பேர் குதிப்போம். ஆனால் யாருக்கும் அடிபட்டதேயில்லை. அதிசயம். அதுமட்டுமில்லாமல் , குதித்த வேகத்தில் கிணற்றின் அடி வரை சென்று கை நிறைய சேறு எடுத்து மேலே வருவோம் ( ஆமா இவரு பெரிய கங்கை கொண்ட சோழன் ). கீழே சேற்றில் மாட்டியிருந்தால் சங்குதான். இப்போது நினைத்தாலும் நடுக்கமாக உள்ளது. ஆனால் அப்போது பயந்ததேயில்லை. யாரிடமும் கடிகாரமும்  இருக்காது. போவோர் வருவோரிடம் எல்லாம், “அண்ணே  மணி என்னண்ணே”  என்று கேட்டு விட்டு , மணி 2 ஆனதும்  அரக்க பறக்க வீட்டுக்கு ஒடி வருவோம்.

நாலைந்து  மணி நேரம் தண்ணீரிலேயே கிடந்திருப்பதால், கண்கள் இரண்டும் நம்ம கேப்டன் கண்ணு போல செக்கச்செவேலென்று சிவந்து தலை எல்லாம் பரட்டை பிடித்து  ஒரு காட்டுவாசி போலிருப்போம்  ( ஓஓஓஓஓ…..அப்பவே காட்டுவாசி  லுக்  வந்துருச்சா ???? ).வீட்டில் அர்ச்சனை வாங்கிக் கொண்டே எங்கள் அம்மா வைக்கும் கோழிக் குழம்பை ஒரு புடி புடிப்போம் பாருங்கள்…சே …அலாதியான ருசி.

எனக்குப் பிடித்த ஏராளமான விளையாட்டுக்களில், கபடி ( ஏராளமான விழுப்புண்களுடன்), பம்பரம், கோலி, ஹாக்கி & எறி பந்து ரொம்ப Interesting.

பம்பரம்…நாங்கள் அருகில் உள்ள கருவக்காட்டுக்குச் சென்று அதில் வைரம் பாய்ந்த மரத்தைத் தேர்ந்தெடுத்து, அருவாளை வைத்து நாங்களே செதுக்கி பம்பரம் செய்வோம். பின்னர் ஒரு ஆணியை எடுத்து , அதன் கொண்டையை வெட்டி விட்டு , அதை பம்பரத்தில் செலுத்தி, கல்லில் சாணை பிடித்தே கூராக்குவோம். அது ஒரு முக்கோண Shape – இல் “ஙே” என்று இருக்கும். அதற்குப் பெயர் வாழைப்பழக் கட்டை. ஆனால் படு பயங்கர ஸ்ட்ராங்காக இருக்கும். அது தெரியாத சில அப்பாவிப் பசங்க, 1 ரூபாய் 2 ரூபாய் கொடுத்து ரொம்ப காஸ்ட்லியா சட்டிப் பம்பரம் வாங்கிட்டு வருவாய்ங்கெ. எங்களோட Main Aim – ஏ எப்படியாவது அவெய்ங்களெ தோற்க வெச்சு, அந்த சட்டிப் பம்பரத்தை ஆக்கர் வெச்சு ( எங்கள் பம்பரத்தை வைத்து அதை குத்திக் குத்தியே) உடைப்பதுதான். அது இரண்டாக உடையும்போது ஒரு சுகம் வரும்பாருங்க….அதெல்லாம் எழுதிப் புரிய வைக்க முடியாதுங்க. சில சமயம் நாங்களும் மாட்டுவோம். ஆனா, எங்க பம்பரத்தை அவெய்கெளால ஒண்ணுமே பண்ண முடியாது. அதுதான் வைரம் பாய்ந்த கட்டையாச்சே !!

அதே போல்தான் கோலியும். பேந்தா என்று ஒரு விளையாட்டு. எவென்லாம் காஸ்ட்லியான கோலி கொண்டு வாராய்ங்கெளோ, அவெய்ங்கெதான் நம்ம இலக்கு. அது இரண்டா உடைந்து தெறித்து ஓடும் பாருங்க, நமக்கு அப்படியே ஜிவ்வுன்னு பறப்பது போல ஒரு பீலிங் வரும்  ( அது எப்படிங்க, நம்மலால வாங்க முடியாத கோலியை மத்தவெய்ங்கெ கொண்டு வரலாம்? ).

எங்கள் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் முழுப் பரிட்சை முடிந்தவுடன், பள்ளியில் உள்ள விளையாட்டுப் பொருட்களை ஏலம் விடுவார்கள். ஒவ்வொரு வருடமும் நானும் என் அண்ணனும் தவறாமல் அந்த ஏலத்திற்குப் போய் விடுவோம். எங்கள் இருவருக்கும் சேர்த்தே Budget 2- 3 ரூபாய்தான். அதில் Bladder வெச்ச ஃபுட்பால் (அதை உதைத்தால் இரண்டு நாளைக்கு கால் வலிக்கும்ங்க), இன்னைக்கோ நாளைக்கோ என்றிருக்கும் ஹாக்கி மட்டை மற்றும் கிரிக்கெட் பந்து வாங்கி விடுவோம். அதில் ஹாக்கி மட்டும் எங்கள் பலத்தை பரிட்சித்துப் பார்க்கும் ஒரு களம். ரொம்ப அழகாக பிளான் பண்ணி, யார் யாரை பிடிக்காதோ அவர்கள் கால்களை மட்டும் குறி வைத்து விளையாடுவோம். பந்து மிஸ் ஆகுதோ இல்லையோ , அவெய்ங்கெ கால் மிஸ்ஸே ஆனதில்லை. நானும் இரண்டு மூன்று  முறை ஹெவியாக வாங்கியிருக்கிறேன். 

கிட்டத்தட்ட அதே குறிக்கோளுடன் விளையாடும் இன்னொரு விளையாட்டு, எறி பந்து. டென்னிஸ் பந்து ஒரே ஒருவன் கையில் மட்டும் இருக்கும். மத்தவெய்ங்கெ எல்லோரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடுவாய்ங்கெ . இரண்டு பிரிவாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்குவோம்- அது முதுகில் வந்து ஒரு வேகத்துடன் பாயும் பாருங்க…ஒரு வாரத்திற்கு  அநியாயத்திற்கு எரியும் . வீட்டிலும் சொல்ல மாட்டோம். சொன்னால் , பெல்ட்டு வேற வந்து விளையாடும். எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு. இதுபோல நாங்க  என்னதான் ஒருவரை ஒருவர் அன்புடன் (??????)  தாக்கிக் கொண்டாலும், விளையாட்டு முடிந்து வீட்டிற்கு செல்லும்போது மறுபடியும் எல்லோரும்  ‘திக்கு’   Friends ஆகிவிடுவோம் ( நண்பேண்டா….).

அதேபோல் எனக்குப் பிடித்த இன்னொரு வீர (??) விளையாட்டு, மரம் ஏறுவது. அதிலும், வீட்டுக்கு அடுத்த தோட்டத்தில் உள்ள ஒரு மாமரத்தில் ஏறி அதன் மேல் ஓடிப் பிடித்து விளையாடுவோம். நாம் பிடிபடப் போகும் நேரத்தில் டமாலென்று கீழே உள்ள கிணற்றில் குதித்து விட வேண்டும். ஒரு கையில் மாங்காயைப் பிடித்துக் கொண்டே கிணற்றில் குதிப்பது ரொம்ப த்ரில்லிங்காக இருக்கும். ஒரு முறை அந்தத் தோப்பு  காவல்காரரிடம் மாட்டிக் கொண்டு டின் கட்டப்பட்ட அனுபவமும் உண்டு. பின்னாளில் எங்கள் தெருவில் உள்ள மோகன் என்னும் ஒரு இளைஞனை யாரோ கொன்று அந்தக் கிணற்றில் போட்டு விட்டார்கள். அத்தோடு எங்களின் அந்த விளையாட்டுக்கு ஒரு முடிவு வந்தது. 

எல்லோரும் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிப்பதைப் பார்த்திருப்பீர்கள். யாரும் கல்லை விட்டு எறிந்தே தேங்காய் பறிப்பத்தைப் பார்த்திருக்கிறீர்களா? நான் அதில் எக்ஸ்பர்ட். அதிலும் முத்தின நெத்துத்  தேங்காயைத்தான் குறி வைப்பேன். அதுவும் ஒரு தேங்காய்க்கு இரண்டே இரண்டு கற்கள்தான்   allowed  எங்க ரூல்ஸ் படி . தேங்காய் விழுந்தவுடனும், அதை அரிவாள் வைத்து உறிக்க மாட்டோம். திரும்பவும் கல்தான். வீடு கட்ட வைத்திருக்கும் முண்டுக் கல்லில் தேங்காயை முட்டுக் கொடுத்து நிற்க வைத்து , இன்னொரு முண்டுக் கல்லை நல்ல வேகத்துடன் அதன் மேல் போடுவோம். ஒரே அடிதான். தேங்காய் நாலாகப் பிரிந்து விடும். 

Comics Collection….. அப்போதெல்லாம் முத்து காமிக்ஸ் என்று ஒன்று வரும். இரும்புக்கை மாயாவி ( கரண்டில் கை வைத்தவுடன் உடல் முழுவதும் மறைந்து வெறும் கை மட்டும் அந்தரத்தில் மிதக்கும்), மந்திரவாதி மான்ரேக், வேதாளம் ( 20 சந்ததி வரை படித்திருக்கிறேன்), லொதார்….மறக்கமுடியாத கதாநாயர்கள். எங்கள் தெருவில் நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு புத்தகங்கள்  வாங்கி, படித்து முடித்தவுடன் அவற்றை Exchange  பண்ணிக் கொள்வோம்….எல்லோரும் படித்தவுடன் ஒரு  Hot Discussion  வேறு நடத்துவோம் – வேதாளம் பண்ணியது சரியா தவறா என்று. அது ஒரு வசந்த காலம். அதில் புத்தகத்தை சுடும் ஒரு சில பேருடன் சண்டையெல்லாம்  வரும். சண்டையில் நாம் ஜெயித்து விட்டால், புத்தகம் நம்மிடம் திரும்பி வரும் – ஒரு சில பக்கங்கள் இழந்து . 

பேனா….அப்போதெல்லாம் பால் பாயிண்ட் பேனா அவ்வளவாக புழக்கத்தில் இல்லை. அதை பெரும்பாலான் இடங்களில் ஒத்துக் கொள்ளவும் மாட்டார்கள். கொஞ்சம் பணக்காரப் பசங்கள்  பார்க்கர், பைலட், ஹீரோ வைத்திருப்பார்கள்.  நம்மைப் போன்ற  Mr Middle Class க்கெல்லாம் ஒரு ரூபாய்க்கு வாங்கும்  பேனாவே ஜாஸ்தி. அதுவும் சொல்லி வைத்தாற்போல எல்லோரும் மரப்பட்டை போன்ற டிசைனில் செய்த அரக்குக் கலரில் ஒரு பேனா வைத்திருப்போம். உலக்கை மாதிரியே இருக்கும். அதைத்  திறந்து, Bril   Ink – ஐ சிந்தாமல் ஊற்றுவது ஒரு பெரிய கலை. அதில் உள்ள நிப்பு வேறு அப்பப்ப மக்கர் பண்ணும். அதை ஒரு  கல்லில் வைத்து அழுத்தி சில சர்க்கஸ்  வேலை எல்லாம் பண்ணி, லேசாக கல்லில் உரசி விட்டு எழுதினால், பொங்கலுக்கு கோயில் சுவரில் அடிக்கும் காவி போல பட்டையாக எழுதும். ” டேய் …எப்படிற்ரா ஓம் பேனா மட்டும் இப்படி சூப்பரா எழுதுது ” அன்று அதையும் பார்த்து ஜொள்ளு விடும் பசங்களும் உண்டு. அது நல்லா எழுதுதோ இல்லையோ ஏப்ரல் 1 ம் தேதி அதை வைத்து மற்றவர்களின் சட்டையில் ink  அடிப்பது ரொம்ப சுலபமாக இருக்கும். பத்தாதுக்கு , ஒரு உருளைக் கிழங்கை எடுத்து , அதைப் பாதியாக கட் பண்ணி,  அதில் AF  ( April Fool என்பதின் சுருக்கம்)  என்பதை தலை கீழாகச்   செதுக்கி, அதை  நம்ம  Bril Ink – ஐத் தோய்த்து, ” என்னடா தோஸ்த்து ” என்று பேச்சு கொடுப்பது போல மற்றவர்களின் சட்டையின் பின்புறம் அதை வெற்றிகரமாக பிரிண்ட் பண்ணி எடுக்கும் போது ஒரு சந்தோஷம் வரும் பாருங்க. அடடா ….என்னெவென்று சொல்வது….

இது போன்று  என்னதான் சேட்டைகள் பண்ணினாலும், படிக்கும் நேரத்தில் ஒழுங்காகப் படித்து வகுப்பில் முதல் மூன்று ராங்குகளுக்குள் வாங்கி விடுவேன். அதே போல் வெளியே போடும் சண்டைகளும் எங்கள் வீடு வரையும் வராமல் பார்த்துக் கொள்வேன். அதனால்தானோ  என்னவோ, நான் பண்ணிய சேட்டைகள் எதுவுமே எங்கள் அப்பாவுக்குத் தெரிந்ததேயில்லை.      

Fassion….. அப்போவெல்லாம்  Step Cutting பயங்கர பாப்புலர். இரண்டு காதையும் சுத்தமாக மூடி , கென்யா காடுகளில் உள்ள புதர் மாதிரி ஒரு லுக் கொண்டு வருவது பயங்கர  Fassion. அப்படியே ஒரு ஹோமோசெப்பியன் நடந்து போவது போலவே இருக்கும்.  அந்த மாதிரி ஸ்டெப்  கட்டிங் பண்ணி, 32 இஞ்ச் வைத்து அதில் ஒரு ஜிப்பையும் வைத்த பெல்பாட்டத்தையும் போட்டு, ஒரு பெரிய ஆந்தை அல்லது பெரிய புலி படம் போட்ட  விமல் சட்டையையும் போட்டு தெருவில்  நடந்தா நம்ம பீட்டில்ஸ் க்ரூப்பில் உள்ள  பால் மெக்கார்ட்டினி போலவே இருக்கும் ( இவனுக்கு கம்பேர் பண்ண சாதரணமான ஆளுங்களே கிடைக்க மாட்டாய்ங்கெ போலிருக்கு)

யோசித்துப் பார்க்கும்போதுதான் புரிகிறது, நான் சின்ன வயதில் இருந்தே எல்லா விஷயங்களையும் மிகவும் ரசித்து அனுபவித்துப்  பண்ணியிருக்கிறேன். அதனால்தானோ என்னவோ எனக்கு சின்ன வயதில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளுமே ஞாபகத்தில் உள்ளன. இரண்டாவது  படிக்கும்போது ராஜசேகர், கனேஷ் வெற்றி வேல் போன்றோருடன் ஆத்து மணலில் விளையாடியது, அதில் ராஜசேகர் ஒருமுறை எனக்குக் காக்கா கடி கொடுக்காமல் கல்கோனாவை ( கமர்கட் ) சாப்பிட்டதால் அவனுடன் ரோட்டில் கட்டி உருண்டு சண்டை போட்டது, எல்லாமே ஞாபகத்தில் இருக்கின்றன. 

இது போன்று இன்னும் ஏராளமான விஷயங்கள்…இதையெல்லாம் நினைத்துப்  பார்க்கையில் இன்று உள்ள குழந்தைகள்  Video Games, Play Station, Internet , TV  என்று நேரத்தைப் போக்குவது வருத்தமாக இருக்கும். மேற்சொன்ன விளையாட்டுகளில் எதுவுமே இன்று உள்ள குழந்தைகளுக்குத் தெரியுமா என்பதே சந்தேகம். அவர்களுக்குத்  தெரிந்த  அதிக பட்ச விளையாட்டு  கிரிக்கெட்தான் என்று நினைக்கிறேன்.

எது எப்படியோ எனக்கு ரிட்டையர்மெண்ட் காலத்தில் உட்கார்ந்து நினைத்துப் பார்த்து மகிழ ஏராளமான  விஷயங்கள் உள்ளன.

வெ. பாலமுரளி.