வேர்களைத் தேடி – 9 

அழகர் மலை ஓவியங்கள்….

மதுரையில் திருப்பரங்குன்றம், யானைமலை  போலவே அழகர்மலையும் ஒரு அதிசயக் குவியல்தான். 

தோண்டத் தோண்ட வந்து கொண்டேயிருக்கும். 

திருமாலிருஞ்சோலை என்ற பெருமாள் கோயில், அதன் மேலே முதல் அடுக்கில் இருக்கும் பழமுதிர்ச் சோலை, அதன் உச்சியில் இருக்கும் நூபுரகங்கை என்னும் சுனை மற்றும் அதனை ஒட்டி இருக்கும் ராக்காயி அம்மன் கோயில், அதே மலையில் சிறிது நடந்தால் வரும் இராம தேவர் என்னும் சித்தர் தவம் இருந்த இடம் என்று  ஒரே மலையில் வரலாறும்,ஆன்மீகமும் கொட்டிக் கிடக்கின்றன.

இது ஒரே மலை இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான இதுவும் ஒரு தொடர்ச்சியான மலைகள்தான். அழகர்மலைத் தொடர்ச்சி. 

இந்த அழகர்கோயில் பெருமாள் ஆலயத்திலிருந்து  மேலூர் செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் இருக்கும் ஒரு சிற்றூர்தான் கிடாரிப் பட்டி. இந்த ஊருக்கு நுழைவதற்கு ஒரு கி.மீ தூரத்திற்கு முன்னால் உங்கள் இடது கைப்பக்கம்,  (வழக்கம்போல்) சமணச் சின்னம் என்ற மஞ்சள் போர்டு இருக்கும் இடத்தில் திரும்பி, ஒரு கிமீ தூரம் சென்றால் வரும் ஒரு குன்றில்தான் 12 தமிழிக் கல்வெட்டுக்களும், 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரரின் ஜெயின சிற்பம் ஒன்றும், வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் ஏராளமான செஞ்சாந்து ஓவியங்களும் உள்ளன. 

எல்லா ஓவியங்களுமே செஞ்சாந்து என்றாலும் கூட, அவை அனைத்தும் ஒரே காலகட்டத்தில் வரையப்பட்டவை அல்ல. 

கையில் கல் ஆயுதத்தை வைத்து சுழற்றுவதுபோல் இருக்கும் பறவை முகம் கொண்ட மனிதனின் ஓவியம் இடைக் கற்காலம் அல்லது புதிய கற்காலத்தின் தொடக்கமாக இருக்க”லாம்”. 

ஓரிரு இடங்களில் சில ஓவியங்கள் கருப்பு நிறத்தில் வரையப்பட்டு காலத்தால் அழிந்து போன தடங்கள் உள்ளன. இவை கண்டிப்பாக இடைக் கற்கால ஓவியங்களாக இருக்கலாம். 

இங்கே இருக்கும் ஓவியங்களில் மிகவும் சிறப்பான ஓவியம் என்றால் அது ஒரு மனிதனை குனிய வைத்து ஒரு பெரிய வாளால் கழுத்தை வெட்டுவது (பலியிடுவது) போல் இருக்கும் ஒரு ஓவியம்தான். வாள் வந்து விட்டதால் இரும்புக்காலப் பண்பாடு என்று உறுதியாக சொல்லலாம். அதாவது ஏறத்தாழ 4000 வருடப் பழைமை எனலாம். இது மயிலாடும்பாறை ஆய்வு முடிவை வைத்து சொல்லப்படும் காலக் கணிப்பு. வரும் காலங்களில் இதுவும் மாறலாம். (இந்த ஓவியத்தை என்னை இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க வைத்த தம்பி திருச்சி பார்த்திக்கு நன்றி).

இது தவிர ஏணி, நங்கூரம், முக்கொம்பு போன்ற சில பல குறியீடுகளும் செஞ்சாந்து நிறத்தில் உள்ளன. அழகு. 

இதில் உள்ள ஏணி ஓவியம், மனிதன் உயிர் பிரிந்து மேலுலகம் செல்வதைக் குறிக்கலாம் என்பது திரு. பாலா பாரதி போன்ற நிறைய அறிஞர்களின் கருத்து ( இன்னும் நிறைய ஆய்வு தேவை). 

சில ஓவியங்கள் பெருங்கற்காலத்தைச் சார்ந்தவை. பெருங்கற்கால ஓவியம் என்றாலே வெண் சாந்துதான் என்ற கருதுகோளை தகர்க்கின்றன அழகர் மலை ஓவியங்கள். 

இந்த ஓவியங்கள் தவிர, ஒரே இடத்தில் அதிகமான தமிழிக் கல்வெட்டுக்கள் இருக்கும் மிகச் சில இடங்களில், அழகர் மலையும் ஒன்று.

இங்கு மொத்தம் 12 கல்வெட்டுக்கள் உள்ளன. படிப்பதற்கு ரொம்பவே பொறுமை வேண்டும். அனைத்துக் கல்வெட்டுக்களும் நல்ல உயரத்தில் உள்ளன. கிட்டத்தட்ட 30 அல்லது 40 மீட்டர் நீளமான குகை. குகை விளிம்பில் ஒட்டுமொத்த நீள வசத்தில் இரண்டு வரிசைகளில் அந்த 12 கல்வெட்டுக்களும் உள்ளன. 

இங்குள்ள பொதுவான சிறப்பம்சங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

  1. இங்குள்ள கல்வெட்டுக்களில் பொற்கொல்லன், உப்பு வணிகன், கொழு வணிகன் ( கலப்பையின் கூர் பகுதியே கொழு ), அறுவை (துணி) வணிகன், பாணித (சர்க்கரைப் பாகு) வணிகன் போன்ற சொற்கள் நேரிடையாக இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம் வணிகர்கள் இங்குள்ள துறவிகளை எவ்வளவு தூரம் ஆதரித்துள்ளனர் என்பது தெளிவு. 
  2. இங்கு மதுரை மாநகரை மதிரை, மத்திரை என்று குறிக்கும் கல்வெட்டுக்கள் உள்ளன. இதேபோல், மேட்டுப்பட்டி கல்வெட்டிலும் “மதிரை” என்னும் சொல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை,  பேச்சு வழக்கை அப்படியே பொறித்துள்ளதாகக் கொள்ளலாம்.
  3. மோதிரம் போல் உள்ள சில குறியீடுகளை இங்கு காண முடிகிறது. இவை கொடுமணல் அகழ்வாராய்ச்சியிலும், சிந்துவெளி குறியீடுகளிலும் காண முடிகிறது. இதன் மூலமாக சிந்துவெளியுடனான தமிழகத்தின் உறவை ஓரளவிற்கு ஊகிக்க முடிகிறது. இந்தக் குறியீடுகளின் அர்த்தம் : இந்தக் குகைத்தளத்தில் உள்ள கற்படுக்கைகளையும், நீர்த்தேக்கத்தையும் உருவாக்க ஆன செலவின் மதிப்பாக இருக்கலாம் என்கிறது நமது தொல்லியல் துறை.
  4. “ஆதன்” என்னும் சொல் சங்ககாலத்தில் மிகவும் பொதுவான பெயராகவோ அல்லது ஒரு பெரிய தலைவனைக் குறிக்கும் சொல்லாகவோ இருந்துள்ளது. அதில் நெடில் நீங்கி குறிலாக “ அதன்” என்னும் பெயர்ச்  சொல்லும் “அதன் அதன்” என்னும் பெயர்ச் சொல்லும் இரண்டு மூன்று இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. 
  5. சிலப்பதிகாரத்தில், கவுந்தி அடிகளுடன் மதுரைக்கு வரும் கண்ணகியும், கோவலனும் அழகர் மலையில் உள்ள குகையில் சில ஆசீவகத் துறவிகளைச் சந்தித்ததாகவும், அவர்கள் முக்காலத்தையும் உணர்ந்த “கணியர்களாக” இருந்ததாகவும், அதில் ஒருவர் இவர்களைப் பார்த்து சில வினாடிகள் கண் மூடி இருந்து விட்டு பின்னர் இவர்களை சைகையால் போகச் சொன்னதாகவும் ஒரு குறிப்பு வருகிறது. அப்போது அந்தத் துறவியின் கண்கள் கலங்கி இருந்ததாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். அதாவது, கோவலனுக்கு நடக்கப் போவது அந்தத் துறவிக்கு முன் கூட்டியே தெரிந்திருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில், இங்குள்ள ஒரு கல்வெட்டில் “கணிநாகன், கணி நதன்” என்ற இரண்டு (ஆசீவகத் ) துறவிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆசீவகத் துறவிகளுக்கே “கணி” “ கணியர்” என்ற அடைப் பெயர்கள் உண்டு (உ-ம்: கணியன் பூங்குன்றனார்).
  6. இங்குள்ள தமிழிக் கல்வெட்டுக்களின் காலத்தை கி.மு.முதலாம் நூற்றாண்டு என்று நமது அரசாங்கம் உத்தேசமாக வரையறுத்துள்ளது.  நூறு அல்லது இரு நூறு ஆண்டுகள் இன்னும் பழைமையாக் கூட இருக்கலாம்.
  • இதே இடத்தில் கி.பி.9 அல்லது 10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரரின்  ஜெயின சிற்பம் ஒன்றும் ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ளன. மற்ற இடங்கள் போலவே இங்கும் கி.பி. 9 அல்லது 10ம்  நூற்றாண்டில் அச்சணந்தி முனிவர் ஆசீவகக் குகைகளைப் பின்தொடர்ந்திருப்பதை உணர முடிகிறது.
  • மற்ற இடங்களைப் போலவே, இங்கும் வானவியல் ஆராய்ச்சி செய்ய வசதியான “நிலாப்பாறை” உள்ளது. இரவில் இங்கு மல்லாந்து படுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்தால், வானத்தின் 360 டிகிரி கோணத்தையும் முழுமையாக பார்க்க முடிகிறது. 
  • ஒரு கல்வெட்டில் “ தியன் சந்தன்” என்று வருகிறது. இதில் வரும் “தியன்” என்னும் சொல் “தீயர்” என்ற ஆதிகுடியைச் சேர்ந்தவரைக் குறிப்பதாக இருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர் உயர்திரு ராஜகுரு அவர்களின் கருத்து. இந்தத் தீயர்கள் இன்று கேரளாவின் ஒரு பகுதியில் வாழ்ந்து வருவதாகவும், அங்கும் அவர்கள் தமிழ்தான் பேசுகிறார்கள் என்கிறார் ராஜகுரு. 
  •  இன்னொரு கல்வெட்டு “ சபமிதா இன பமித்தி” என்று வருகிறது. இதில் வரும் “பமித்தி” க்கு சமணப் பெண்துறவி என்று பொருள் என்கிறது இந்தியத் தொல்லியல் துறை. அதேபோல் “சபமிதா” என்பது “சர்ப்பமித்ரா” என்ற சமஸ்கிருதச் சொல்லே என ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் மறுஆய்வுக்குட்பட்டது. தமிழகத்தில் உள்ள தமிழிக் கல்வெட்டுக்கள் சிலவற்றில் பிராகிருதத்தின் தாக்கம் இருந்தாலும் கூட, எங்குமே சமஸ்கிருதத்தின் தாக்கம் இல்லை. எனவே, “சர்ப்பமித்ரா” என்ற சமஸ்கிருதப் பெயர் சில “ஆய்வாளர்களால்” வலிந்து திணிக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.
  • குகையின் உள்ளே ஒரு சுனை உள்ளதாக அரசு ஆவணம் சொல்கிறது. ஆனால், அது மழை நீர்த் தேக்கம் போல்தான் தெரிகிறது. அதன்  மேல் விதானத்திலும் சில ஓவியங்கள் உள்ளன. 

சில டிப்ஸ்: 

இந்தக் குன்றின் மேலே செல்வது ஒன்றும் கடினம் இல்லை என்றாலும் கூட, ஒரே ஒரு இடத்தில் மட்டும் இரண்டு குன்றுகளை இணைக்க நமது அரசாங்கம் ஒரு இரும்பு ஏணிப்படியை போட்டு வைத்திருக்கிறது. அதில் கைப்பிடி இல்லாதலால், கொஞ்சம் ஜாக்கிரதையாய் ஏறி இறங்க வேண்டும்.

மற்ற சில இடங்களில் அழகான படிகளும் உள்ளன.

இந்த இடத்திற்கு தனியே செல்ல உங்களுக்குத் தயக்கமாக இருப்பின், மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த திரு.ரவிச்சந்திரன் என்பவரை அழைத்தால், அவர் மகிழ்ச்சியுடன் உங்களை அழைத்துச் செல்வார். 

அவர்தான் யானைமலை கல்வெட்டு இருக்கும் இடத்திற்கு செக்யூரிட்டி. அதனால், யானைமலையையும் சேர்த்தே காண்பித்து விடுவார்.

அவருடைய மொபைல் எண் : 8428412774 / 7092400566

இந்தக் கல்வெட்டுக்கள் இருக்கும் இடம் ஒரு அத்துவான காடு. எனவே, தண்ணீர், சாப்பாடு, பிஸ்கட் கைவசம் வைத்திருக்கவும்.

இந்த இடத்தில் கள்வர்களின் (அ) சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதை நிரூபிக்கும் விதமாக ஏராளமான மது பாட்டில்களும், இறைச்சிகளை சமைத்த தடமும் உள்ளன. எனவே, இங்கு தனியே செல்வதைத் தவிர்க்கவும்.

இன்னொரு முக்கியமான விஷயம் : இங்கு குரங்குகள் அதிகம். ஜாக்கிரதை. 

வெ.பாலமுரளி

நன்றிகள் : 

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட “ தமிழ்-பிராமி கல்வெட்டுகள்” ஆவணம்.

உயர்திரு ராஜகுரு அவர்கள்

தம்பி திருச்சி பார்த்தி மற்றும் நண்பர் உயர்திரு. பாலாபாரதி

பேராசிரியர் க. நெடுஞ்செழியனின் ஆசீவகமும் ஐயனார் வரலாறும்